Wednesday, September 16, 2009

முதலீடு ஒரு அறிமுகம்

முதலீடு என்பது நாம் தேடிய வருமானத்தில் நம் அத்தியாவசிய செலவு போக எஞ்சிய பணத்தை இரட்டிப்பாக்க எண்ணி, எதிர் கால நலன் கருதி, லாபம் ஈட்டுவதற்க்காக ஒரு நிதி திட்டத்திலோ, அல்லது இடத்திலோ பணத்தை முடக்குவது ஆகும்.?
பணக்காரர்கள்!!! எப்படி பணம் சேர்த்தார்கள்? சேர்த்த பணத்தை எப்படி அதிகமாக்கினார்கள்? நமது ஓய்வு காலத்தை எப்படி சிரமமின்றி கழிப்பது? முதலீடு செய்ய வேண்டும். ஆனால் எப்படி செய்வது?
போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்து விட்டதா ? அப்படியானால் நீங்கள் முதலீடு செய்ய தயாராகி விட்டீர்கள்!!! என்று அர்த்தம்.
முதலீடு ஏன் செய்ய வேண்டும் ?
எளிதாக கூற வேண்டுமெனில்

உங்கள் பணம் /சொத்து மதிப்பு இரு மடங்காக பெருக வேண்டும். பண வீக்கம் போன்ற அபாயங்களில் இருந்து காக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் உங்கள் பணம் கணிசமாக கூடியிருக்க வேண்டும். மகளின் திருமணம், மகனின் உயர்கல்வி, ஓய்வு காலத்தில் சிரமமின்றி வாழ போதுமான நிதி, உல்லாச பயணம் ஆகியவற்றை சமாளிக்க, எதிர் காலத்தில் கஷ்டப் படாமலிருக்க.

போன்ற இந்த தேவைகளுக்காக பங்குகள், பாண்டுகள், பரஸ்பர நிதி திட்டங்கள், தங்கம், மனை, அந்நிய செலவாணி ஆகிய எதில் வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.

இதல்லாமல் அவ்வப்போதைய தேவைக்கு கைவசமும் பணம் தேவை. முறையாக முதலீடு செய்தால் உங்கள் பணம் பெருகுவதை பார்க்க உங்களுக்கே மலைப்பாக இருக்கும்.

ஒரு வேலையில் இருந்துகொண்டோ அல்லது ஒரு தொழில் செய்தோ பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதில்லை. வேலையிலிருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரம் தான் வேலை செய்ய முடியும். தொழிலிலும் குறிப்பிட்ட உற்பத்தி தான் செய்ய இயலும். எனவே, அதற்குரிய வருமானமே கிடைக்கும். வேலையே செய்துகொண்டிருந்தால் சம்பாதித்த பணத்தை அனுபவிப்பது தான் எப்போது ? நீங்கள் பல அவதாரமெடுத்து ஒரே நேரத்தில் சம்பாதிப்பதும் முடியாத காரியம். ஆனால் உங்கள் பணம் உங்களுக்காக அந்த வேலையை செய்யும். நீங்கள் உங்கள் வேலை மற்றும் வேறு எந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பணம் அதன் வேலையை செய்து மேன்மேலும் பணம் ஈட்டித்தரும் காரியம் செய்துகொண்டிருக்கும். இவ்வாறு உங்களது சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கிறது.
சுய தொழில் தொடங்குதல், பங்குகள், பாண்டுகள், பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் பணம் போடுதல் , அசையா சொத்துக்கள் வாங்கி விற்றல் ஆகிய எதுவும் முதலீடு தான். இவற்றால் லாபமும் வரலாம் நஷ்டமும் ஏற்படலாம். ஆனால் எதில் பணம் முடக்கினாலும் நமது குறிக்கோள் அதிக பணம் சம்பாதிப்பதுதான்.

ஒவ்வொருவருக்கும் பணம் மிகவும் அத்யாவசியம். தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ளவும், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே தேவையை முன்னிட்டு முதலீடு செய்தல் மிக அவசியமாகிறது. 30 அல்லது 35 ஆண்டு காலம் உழைத்த பின்னர் பென்ஷன் வாங்கி நிம்மதியாக காலம் கழிப்பது என்பது மிகச்சிலருக்கே சாத்தியமாகிறது. எல்லாருக்கும் இது சாத்தியமில்லை. ஆக மற்ற யாவரும் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளவும், ஓய்வு காலத்தை சிரமமின்றி கழிக்கவும் முதலீடு என்ற தாரக மந்திரத்தை கடைப்பிடித்தே ஆக வேண்டும். ஆகவே வயதான காலத்தில் சிரமமின்றி வாழ, வாலிப காலத்தில் முதலீடு செய்தல் உத்தமமானது.

பொருளாதாரம் கற்றுக்கொள்வது ஒன்றும் கடினமான காரியமில்லை. பயப்படவும் தேவையில்லை . ஒரு சில உட்கருத்துக்களையும், சில பல வார்த்தை ஜாலங்களையும் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். வங்கிகள் .வல்லுனர்கள் போன்றோரின் ஆலோசனைகளையும் பெற வேண்டிய அவசியமில்லை. முயற்சிக்கு மீறின பலன் கிடைப்பது உறுதி. அதற்காக உடனடியாக பணக்காராகி விட முடியாது. கொஞ்சம் பொறுமை, அதிக உழைப்பு ஆகியன வேண்டும்.

நீங்கள் எத்தரப்பினராக இருந்தாலும் சரி. கால ஓட்டம் உங்களுக்கு எப்படி பணம் ஈட்டித்தருகிறது என்பதை இந்த ஆரம்ப பாடம் சொல்லித்தருகிறது .
முதலீட்டின் குறிக்கோள் குறிக்கோள் அதிக பணம் சம்பாதிப்பதுதான்.

ஒவ்வொரு முதலீட்டாளார்களுக்கும் முதலீட்டுவதற்கு பல காரணத்தை வைத்திருப்பார்கள். இதை அவர்களின் குறிக்கோளாகவும் கூறலாம். அவைகளுள் ஒரு சில.
பாதுகாப்பு, கையிலிருக்கும் பணம் இரு மடங்காக வேண்டும், லாபமும் வேண்டும், எதிர்கால அவசர தேவைக்கும், வயோதிக கால தேவைக்காகவும், குடும்ப நலன்களுக்காகவும், இன்னும் பிற காரணங்களுக்காகவும், மகளின் திருமணம்/ மகனின் உயர்கல்வி.
முதலீட்டின் பலன்

பள்ளி பருவத்தில் தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி பற்றி படித்திருப்போம். அதில் வரும் கூட்டு வட்டி என்பது ஒரு அருமையான கண்டுபிடிப்பாகும் . இது நமது பணத்தை ஒரு குறிப்பிட்ட நீண்ட கால அவகாசத்தில் பன்மடங்காக்கி தரும் அற்புதமான கருவியாகும். இவ்வாறு பன்மடங்காக உயர்த்த கூட்டு வட்டிக்கு இரண்டு உபகரணங்கள் தேவை :-

(1) நீடித்த கால அவகாசம் (2) மறு முதலீடு.

மறு முதலீடு செய்ய, செய்ய மற்றும் கால அவகாசத்தை நீட்டிக்க, நீட்டிக்க நமது முதலீடு மிக வேகமான வளர்ச்சி அடையும். இதனை புரிந்துகொள்ள ஒரு உதாரணம் கொண்டு விளக்குவோம்.

6 சதவீத வட்டிக்கு ஒருவர் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருட முடிவில் 10,600 ரூபாய் கிடைக்கும் . அதனை அவர் மீண்டும் முதலீடு செய்தால் அடுத்த அண்டு இறுதியில் 11,236 ரூபாயாக உயரும் . எப்படி ? .......
அசல் ....................... . ……………ரூ 10,000 முதல் ஆண்டு வட்டி ...... . ……..ரூ .600 புதிய மறுமுதலீடு …………... …ரூ 10,600 இரண்டாம் ஆண்டு வட்டி … ரூ 600 முதலாண்டு வட்டிக்குவட்டி …ரூ 36 ஆக மொத்தம் . . . . . . . …………ரூ 11,236 இரண்டாம் ஆண்டு இறுதியில் கிடைக்கும் வட்டி 636 ரூபாய் ....... மீண்டும் மூன்றாம் ஆண்டு முடிவில் முதலீடு ரூ 11910.16 ஆகிவிடும் மூன்றாம் ஆண்டு வட்டி ரூ 674.16. ....... வட்டிக்குவட்டி ரூ 38.16 அதிகம் . ...... இந்த ரூ 36 மற்றும் ரூ 38.16 ஆகியவை சிறிய தொகையாக தோன்றலாம். ஆனால், காலம் அதிகமாக ஆக பெருந்தொகையாக உருவெடுக்கும் .

இவ்வாறு வட்டிக்கு வட்டி, அந்த வட்டிக்கு வட்டி என அசலும் வட்டியும் சேர்ந்து ஒரு கணிசமான நீண்டகால அவகாசத்தில் பெரும் தொகையாக கிடைக்கும்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. ஆகவே இப்போதே முதலீடு செய்வோம் .
உடனடியாக ஏன் முதலீடு செய்ய வேண்டும்

காலம் தாழ்த்தி முதலீடு செய்வதால் லாப பங்கின் அளவில் குறைவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. கூட்டுவட்டியில் கிடைக்கும் அனுகூலத்தை எப்போதும் நம்புங்கள். நீண்டகால முதலீடும், மறுமுதலீடும் கூட்டு வட்டியின் அனுகூலத்தால் உங்களுக்கு மலை போல் வருமானம் அள்ளித்தரும் என்ற உத்தரவாதம் உண்டு .

அதனால்தான் நீண்டகால முதலீடாக பங்குகள் சிபாரிசு செய்யப்படுகின்றன . எப்போதுமே வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், பங்கு விலைகளில் அவ்வப்போது நிகழும் ஏற்றத்தாழ்வுகளை ஓரம் கட்டிவிடும். ஆகவேதான் மீண்டும், மீண்டும் நீண்டகால முதலீடு செய்ய சிபாரிசு செய்கிறோம்.
உதாரணம்

இரண்டு ஒரே வயதுடைய நண்பர்கள் மாலா, ராதா ஆகியோர் முதலீடு செய்கிறார்கள் என்று கொள்வோம் . மாலா தனது 25 ஆவது வயதில் ரூ15,000 ஐ 5.5 சதவீத கூட்டுவட்டிக்கு முதலீடு செய்கிறார். இவர் தனது 50 ஆவது வயதில் ரூ57,200.29 பெறுவார்.

ஆனால் ராதா 10 ஆண்டு காலம் கடத்திய பின், தனது 35 ஆவது வயதில் அதே ரூ15,000 ஐ அதே 5.5. சதா வட்டிக்கு முதலீடு செய்கிறார். இவருக்கு 50 ஆவது வயதில் கிடைக்கும் தொகை ரூ33487.15 மட்டுமே. ஆக மாலா, ராதாவை விட ரூ23,713.74 அதிகமாக பெறுகிறார். காரணம் ? மாலா காலம் தாழ்த்தாமல் சேமிப்பை தொடங்கி அதிக காலம் தனது சேமிப்பை தொடர்ந்ததினால் 42,200.89 ரூபாய் கிடைத்தது. ஆனால் ராதா காலம் தாழ்த்தி சேமிக்க தொடங்கியதால் ரூ18,487.15 மட்டுமே கிடைத்தது. இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்து சேமித்தால் மாலாவுக்கு ரூ1,00,000 கிடைக்கும். ஆனால் ராதாவுக்கோ ரூ60,000 மட்டுமே கிடைக்கும். ரூ40,000. …..எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்!!!

முதலீட்டில் கூட்டு வட்டி முதலீடு என்பது பணத்தின் மதிப்பை அதிகரித்துக் கொண்டே போகிறது. உங்களுடைய வருமானத்தையும் அதிகரிக்கிறது. ஆகவே முதலீட்டு பணத்தை கூடிய மட்டும் எக்காரணமும் கொண்டு தொடாமல் இருக்க வேண்டும்.
உதாரணம்

20 வயதாகும் ஒருவரிடம் அதிக மனவலிமையும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் எண்ணம் அதிகம் காணப்படும். இவர் முதலீட்டில் நஷ்டம் அடைந்தாலும், அதனை ஈடுகட்ட போதிய வயதும், நீண்ட காலமும் உள்ளது. வயது ஏறஏற இவர்களுக்கு அனுபவம் கைகொடுக்கும். மேலும் இவர், சிறு வயது என்பதால் கையில் உள்ள பணம் அனைத்தையும் போட வேண்டிய அவசிய மில்லை. ஏனென்றால் கூட்டுவட்டி என்னும் பணத்தை இரட்டிப்பாக்கும் சக்தி நிதி திட்டங்களில் உள்ளதால், இவர் சிறு முதலீட்டினாலே போதுமானதாக இருக்கும்.

ஆனால் 35 வயதுள்ள நபர் தனக்கு போதிய வயதும் அவகாசமும் இருப்பதால் தன்னிடம் உள்ள உபரி பணத்தை வைத்து தொழில் முனைய யுக்திகளை கையாள நினைப்பார். ஏனென்றால் முதலீட்டில் இருந்து வரும் வருமானம் தான் அவருக்கு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதில்லை. இவருக்கு வாழ்க்கை நடத்த தேவையான வருமானம், அவர் செல்லும் வேலையிலிருந்து கிடைக்கும். எனவே , இவரிடம் அதிக மனவலிமை காணப்படும். இதனால் இவர் ஆபத்து நிறைந்த புதிய தொழிற் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஒரு 75 வயது மூதாட்டிக்கு தன் பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என மட்டுமே நினைப்பார். அவர் புதிய தொழிற் தொடங்கவோ / முதலீடு செய்யவோ விரும்ப மாட்டார். தான் ஏற்கனவே போட்டிருந்த ஓய்வுகால வைப்புநிதியை கொண்டு, வாழ்க்கையை நடத்தி வருவார். எனவே இவருக்கு புதிய முதலீடு செய்ய வயதோ, மனவலிமையோ கிடையாது .

ஓய்வு பெரும் நிலையில் இருக்கும் ஒருவர் தனது சேமிப்பை பாதுகாக்கவோ அல்லது அதிகரிக்கவோ நினைப்பார். ஏனென்றால் வயதான காலத்தில் இருப்பதால், அவர்கள் உடல் நிலையில் ஏதேனும் சுகவீனம் ஏற்பட்டால் அவருக்கு பணத்தேவை அடிக்கடி வரலாம். ஆகவே ஏறி இறங்கும் நிலையற்ற தன்மை உடைய நிதி திட்டங்களில் பணத்தை முடுக்கி நஷ்டத்தை வரவழைத்துக் கொள்ள மாட்டார்.

எல்லா முதலீட்டாளர்களும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டாலும், ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒவ்வொருவரின் தேவையும் வித்தியாசமானது. ஆகவே அவரவர் தேவைக்கேற்ப முதலீட்டு யுக்தி அமைய வேண்டும். காலத்தை விரையமாக்காமல் கூடிய மட்டும் விரைவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் .
உதாரணம்

ஒரு பெரும் பணக்காரர் தன்னிடமுள்ள உபரி பணத்தை பந்தயப்பனம் கட்டுவது போல் ஒரு அசையா சொத்து வாங்கி விற்று லாபம் பெற நினைத்து முடக்கலாம். முதலீட்டில் இருந்து வரும் வருமானம் தான் அவருக்கு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதில்லை. இது ஒரு விதமான யுக்தி, இவர் அதிக லாபம் எதிர்பார்க்க மாட்டார். குறைந்த அளவே என்றாலும் அவருக்கு திருப்தி தான்.

ஆனால் ஒரு புதுமண தம்பதி தங்கள் வாழ்க்கை குறிக்கோளாக ஒரு வீடு வாங்க திட்டமிட்டு கையில் உள்ள பணத்தை கொண்டு குறுகிய காலத்தில் லாபம் சம்பாத்திக்கும் எண்ணத்தில் அசையா சொத்தில் முதலீடு செய்யக் கூடாது . ஏனென்றால் இவர்களுக்கு அவசர தேவைக்கு என்று வேறு பணம் இல்லை. இப்பொழுது வாங்கிய சொத்தை விற்க முயன்றால் அவருக்கு நஷ்டமோ / மிக குறைந்த லாபமோ கிட்டலாம். குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் இந்த யுக்தி அபாயகரமானது.

உங்களின் சுபாவமென்ன? பரபரப்பான நகரத்தில் வசிக்க, வசதியாக வாழ விரும்புபவரா? அல்லது அமைதியான ஒரு கிராமத்தில் தனிமையையும் எளிமையையும் விரும்புபவரா? செயல்களை மிக வேகமாக செய்பவரா? அல்லது மெதுவாக செய்பவரா? முடிந்த வரையில் உங்களிடம் உள்ள சேமிப்பு பணத்தில் , 25 % அல்லது 50 % சதவிகித பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். மொத்த சேமிப்பு பணம் முழுவதையும் நிதி திட்டங்களில் போடாதீர்கள்!!!

எப்பேர்பட்டவராயினும் , முதலீட்டுக்கு வரும் போது, அதிகமான முதலீடு செய்து விட்டு தூக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. ஆக மொத்தத்தில் முதலீடு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைக்கேற்ப அமைவது . அவரரவர் அபாயத்தை எதிர்கொள்ளும் அல்லது தாங்கி நிற்கும் வலிமையை பொறுத்தது. முரண்பாடுகள் இல்லாத விஷயம் எதுவுமில்லை .

பொருளாதாரம் ஒரு சமூக அறிவியல் பாடம். கணிதத்தில் வருவது போல ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று இதில் நிலைநாட்ட முடியாது. எந்த பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயத்தையும் இப்பிடித்தான் நடக்கும் என்று ஆணித்தரமாக கூறமுடியாது. மனிதமனம் அடிக்கடி மாறக்கூடிய தன்மை உடையது. உணர்ச்சிகளுக்கு அடிமையாவது, சூழ் நிலைக் கைதியாவது இதன் பலவீனம். இதன் காரணமாக எப்பேர்ப்பட்ட வல்லுனரும் பங்குசந்தை பற்றிய தனது அபிப்பிராயத்தை மட்டுமே தர முடியும். மிகச்சரியான முடிவையோ அல்லது வழியையோ சொல்லமுடியாது .
சாதாரணமாக முதலீட்டாளர்கள் செயல்படும் விதம் பற்றிய உதாரணம் இங்கு பார்போம்.

ராமு புதிய சிறிய வளர்ந்து வரும் கம்பெனிகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்கிறார். . இவற்றில் முதலீடு செய்வதால் குறுகிய காலத்தில் பெரியதாக லாபம் கிடைக்கப்போவதில்லை என்றாலும் நாடிச்செல்கிறார். ஏனென்றால் இவை புதிய தொழில் நுணுக்கங்களை உபயோகித்து வளரத் துடிக்கின்றன எனவும், ஒரு நீண்டகால சேமிப்பாகவும், நல்ல லாபம் ஈட்டி தரும் என்று எண்ணி முதலீடு செய்கிறார்.

ஆனால் சோமு ஏற்கெனவே வளர்ந்து தொடர்ச்சியாக லாபம் தரும் கம்பெனிகளில் முதலீடு செய்கிறார். இவை அதிக விலையில் கிடைத்தாலும், விரைவில் பண மதிப்பு உயரலாம் எனவும், குறுகிய காலத்தில் இத்தகைய பங்குகள் நல்ல லாபம் ஈட்டி தரும் என்றெண்ணி முதலீடு செய்கிறார் .

ராமு வளர்ச்சி பாதையை நோக்குகிறார். சோமு பணத்தின் மதிப்பு உயர்வதை எதிர்பார்க்கிறார். வேறு வேறு யுக்தியானாலும் அவற்றுக்கான பலன்கள், அவதிகள் உள்ளடங்கி உள்ளன .

இதைப்போலவே நீங்களும் பல்முனைப் பாதைகளில் உங்களுக்கு தோதான யுக்திகளை கையாண்டு நீங்கள் எந்த வகை முதலீட்டாளர் என்று தெரிந்து கொள்ளலாம் .
முதலீடுகளின் வகைகள்

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஏராளமான வழிகள் உள்ளன . கீழ்கண்ட முதலீட்டு வகைகளை நன்கு கற்றறிந்து , உங்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டத்தை தேர்ந்த்தேடுங்கள் .
கடன் பத்திரங்கள் - பாண்டுகள் - BONDS

அரசு அல்லது தனியார் கம்பெனிகள் முதலீட்டை பெருக்க வெளியிடும் கடன் பத்திரங்கள் தான் பாண்டுகள் ( Bonds) எனப்படும் . ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்ததும் நிச்சயமான உத்திரவாதமுள்ள ஒரு வட்டிதொகை அசலுடன் சேர்த்து கிடைக்கும். கிடைக்கும் வட்டிதொகை குறைவானது தான் என்றாலும் பாண்டுகளில் போடும் பணம் பாதுகாப்பானது. அபாயங்களுக்கு ஆட்படாதது . ஆகவே அதில் வருமானம் குறைவு தான்.
பங்குகள் - STOCKS OR SHARES

பங்குகளில் முதலீடு செய்வதால் அந்தந்த நிறுவனங்களில் நீங்கள் பங்குதாரராகிறீர்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிறுவனங்கள் அடையும் லாபத்தில் உங்களுக்கு டிவிடென்ட் எனப்படும் லாபப்பங்கு கிடைக்கும். ஆனால் இது ஒரே மாதிரியாக இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளுடன், நிறுவனங்களுக்கு நிறுவனம் வேறுபடும். இதல்லாமல் நிறுவன பங்குகளின் மதிப்பும் நாளுக்கு நாள் மாறும் தன்மை உடையது. சில சமயம் வாங்கிய விலையை காட்டிலும் பன்மடங்கு உயர்ந்து இருக்கும்போது விற்று விட்டால் மிக அதிக லாபம் கிடைக்கும். சில சமயம் வாங்கிய விலையை காட்டிலும் கீழே சென்று விடுவதால் நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பும் உள்ளது. பாண்டுகளை போல் நிலையான உத்தரவாதமான லாப தொகை கிடைக்காது .

பங்குகளில் நல்ல லாபம் பெரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதே சமயம் ஆபத்தை மனதில் எண்ணி செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
பரஸ்பர நிதிகள் - MUTUAL FUNDS

சில பல பங்குகளின் ஒட்டுமொத்த உருவம் தான் பரஸ்பர நிதி என்பது. நல்ல நிர்வாக திறமை, பழுத்த அனுபவம், பொருளாதாரத்தில் தேர்ச்சி மிக்க ஒரு மேலாளரால், இந்நிதி திட்டங்கள் கையாளப் படுகின்றன். நல்ல ஆளுமை, தேர்ச்சி பெற்றவர் வசம் நீங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது, அவர்கள் அப்பணத்தை, எதில் லாபம் சீக்கிரம் கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து, முதலீடு செய்து லாபம் ஈட்டி பகிர்ந்து கொடுப்பார். உங்களுக்கு எந்த தலைவலியும் இல்லை. முன் அனுபவம் எதுவும் தேவையுமில்லை.

நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டியது ஒன்று மட்டும் தான். அது என்னவென்றால், பரஸ்பர நிதி நிறுவனத்தின் முந்தய வரலாறு மற்றும் அதன் நிர்வாக தலைமை, அதன் நிர்வாக மேலாளர்களின் திறன், அவர்களின் நிதி திட்டங்களின் நிலவரங்கள், மற்றும் பல அம்சங்களையும் நன் கு தெரிந்து , பின்னர் முதலீட்டு திட்டத்தில் சேர வேண்டும்.

இந்த பங்கு, கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களை தவிர தங்கம், மனை, அந்நிய செலவாணி என வேறு சில முதலீட்டு சாதனங்களும் உள்ளன.

இனி எப்போது முதலீடு செய்ய வேண்டும் என பார்ப்போம் .

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” !!! என்பது பழமொழி . ஆகவே இப்போதே முதலீடு செய்க . காலம் கடத்தினால் நாம் ஏற்கெனவே விவரித்த கூட்டு வட்டியின் பலாபலன் கிடைக்காது .

இத்துறையில் பணிபுரியும் முன் அனுபவமுள்ளவர்களால் அடிக்கடி கூறப்படும் பொன்மொழிகள்
முதலீடு செய்க தொடர்ந்து முதலீடு செய்க . நீண்ட காலத்திற்கு முதலீடு செய்க .(கண்டிப்பாக குறுகிய கால முதலீடு வேண்டாம் )
எவ்வளவு முதலீடு செய்யலாம்
இவ்வளவுதான் என்றில்லை, எவ்வளவு வேண்டுமானாலும். நம் சேமிப்பின் ஒரு பகுதியை, மாதம் இவ்வளவு என்று , முடிந்த அளவு முதலீட்டலாம் மொத்தமாகத் தான் முதலீட்ட வேண்டும். என்றில்லை.. சிறு துளி பெரு வெள்ளம். உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. முதலீட்டு பணத்தின் பண மதிப்பு குறைந்தாலும், அதை தாங்கி கொள்ளும் மன வலிமைக்கு தக்கவாறு முதலீட்டலாம்.

இப்பாடத்தில் நாம் முதலீட்டின் அவசியம் பற்றியும், அதன் வகைகளையும் தெளிவாக விளக்கியுள்ளோம். அல்லவா? அதற்கு தான் சொல்கிறோம். சும்மா பார்த்தோம். படித்தோம் என்றல்லாமல் முதலீட்டி பயனடையுங்கள் என்பதை தான் நாங்கள் இங்கு வலியுறுத்துகிறோம்.
வாழ்த்துக்கள்!!!

2 comments:

  1. நன்றி. இன்னும் அதிகமாக சந்தேகங்கள் உள்ளன. உதாரணமாக...ஒரு பங்கின் விலை உயர்ந்தாலோ, தாழ்ந்தாலோ, அந்த பங்கின் கம்பனிக்கு என்ன பயன். அந்த பங்கு விற்ற பொது இருந்த பேஸ் வால்யு தானே அந்த கம்பனிக்கு சொந்தம்?
    பொதுவாக ஏற்றம் இறக்கம் எதை பொருத்தது?
    சில கம்பனிகளின் விலைகளை பார்க்கும் பொது 5 பைசா கூட இருக்கிறது.... என்னை போன்ற ஒரு மனிதன்..ஒரு 500 ரூபாய்க்கு போனால் போகட்டும் என்று ஒரு பத்தாயிரம் பங்கை வாங்கினால்......(ரூபாய் 500 தானே) நாளைக்கே 1 ரூபாய் என்று விலை ஏறினாலும், ...எப்படி ? புரியவில்லை. அந்த கம்பனி issue செய்யும் பொது, 10 ரூபாய் என்ற face value வில் தானே issue செய்திருப்பார்கள்? அது எப்படி 5 பைசா வரை குறையலாம்?
    இப்படி பல சந்தேகங்கள்......
    powerofvanaja@gmail.com

    ReplyDelete
  2. முதலீடு இருக்கட்டும். இன்று பலருக்கும் பணத்தை சம்பாதிப்பதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete