Thursday, September 10, 2009

பங்கு சந்தை பகவான்

சில நாட்களுக்கு முன் Times of India வலைதளத்தில் ஒரு செய்தி படித்தேன். வாரன் பஃபெட் தனது வாரிசாக ஒரு இந்தியரை அறிவிக்கக் கூடும் என்பதுதான் அந்த செய்தி. அந்த இந்தியர் அஜித் ஜெயின். 1986 முதல் வாரன் பஃபெட்டின் மறுகாப்பீட்டு (Re-insurance) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இது உண்மையானால், இந்திய தொலைக்காட்சிகள் இந்த செய்தியையும், அஜித்தையும், ஆஸ்கர் வென்ற ரஹ்மானைப்போலக் கொண்டாடுவார்கள் என்பது வானம் போல், பூமி போல், சூரியன் போல் சத்தியம்.
ஏன்? வாரன் யாரன்?

வாரன் பஃபெட் 20-21ம் நூற்றாண்டுகளின் பங்கு சந்தை பகவான். பல வருடங்களாக உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவர். சில வாரங்களுக்கு முன்புவரை உலகின் பெரும்பணக்காரர் பதவியை பில் கேட்ஸிடம் இருந்து பிடித்து வைத்திருந்தவர்.

அமெரிக்காவில் வங்கிகளும், Investment Banks என்று அறியப்பட்ட நிதித்துறை நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து கொண்டிருக்கையில், அமெரிக்க டாலர் 5 பில்லியன் முதலீடு செய்து இன்னொரு பெரிய நிதி நிறுவனமான “கோல்ட்மேன் சேக்ஸ்” என்ற நிறுவனம் விழாமல் முட்டுக் கொடுத்தவர்.

Berkshire Hathaway என்ற நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரர். பல ஆண்டுகளாக வியாபாரத்துக்காக பணம் வேண்டியோ, போனஸ் என்று பொய்யான இலவசமாகவோ இந்த நிறுவனத்தின் பங்குகளை வெளியிடாதவர். Berkshire Hathaway நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை 84,500 அமெரிக்க டாலர்கள். (ஒரு பங்கின் Face Value எனப்படும் முகப்பதிப்பு வெறும் ஒரு டாலர் மட்டுமே).

இந்த விலையே (US $ 84,500) தற்போதைய சந்தை கலவரத்தால்தான். டிசம்பர் 2007ல் ஒரு பங்கின் மதிப்பு US $ 150,000க்கும் மேல்.

வெளியில் தெரிந்த சொத்து மதிப்பு கணக்குப்படி வாரன் இப்போது உலகின் இரண்டாவது பெரும் பணக்காரர். [வெளியில் தெரியாததை கணக்கெடுத்தால், பெரும்பணக்காரர்கள் பட்டியலில் சில இந்தியர்களும், தமிழர்களும் இருக்கலாம் ].

அவ்வளவு பணம் வைத்திருந்தாலும் பஃபெட் நெ.1 எளிமையானவர், நேர்மையானவர்.

அவருடைய அலுவலகம் இருக்கும் இடம் அமெரிக்காவில் ஓமஹா என்கிற பகுதி. அதனால், வாரன் பஃபெட் Oracle of Omaha என்ற பெயராலும் அறியப்படுகிறார்.

பங்கு சந்தையில் சராசரிக்கு சற்று அதிக அறிமுகம் உள்ள எவருக்கும் வாரன் பஃபெட் ஒரு ஆதர்ச நாயகன். அவரைப் போல முதலீடு செய்யவேண்டும் என்று அலையும் உலகளாவிய பெருங்கூட்டம் இருக்கிறது. யாஹூ குழுக்களில், இந்தியர்களால் நடத்தப்படும் ஒரு குழுவின் பெயர் La Warren Buffet .

தன் வாழ்வின் முதல் பங்கு முதலீடு செய்தபோது வாரனின் வயது பதினொன்றுதான். அதுவே லேட் என்கிறார் வாரன். சேமிப்பு, முதலீடு ஆகியவை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்கப்பட வேண்டும், கற்க வேண்டும் என்பது வாரனின் கோட்பாடு.
அவரை பற்றிய சில தகவல் துளிகள்:

1. பதினோரு வயதில் முதலீடு செய்யத் துவங்கிய வாரன், பேப்பர் போட்டு சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு பண்ணையை வாங்கினார். அப்போது அவர் வயது, பதினான்கு மட்டுமே.

2. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரராக இருந்த போதிலும், இன்னும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாங்கிய மூன்று படுக்கையறை வீட்டில்தான் இன்னும் வசிக்கிறார். (”இது போதும் எங்களுக்கு; வாழத்தேவையான எல்லாம் இங்கு இருக்கின்றன”)

3. காருக்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லை. தானே எங்கும் ஓட்டிச் செல்லுகிறார்.

4. உலகின் மிகப்பெரிய தனியார் ஜெட் விமான கம்பெனியின் உரிமையாளராக இருந்தாலும், பணம் செலவழிக்க முடிந்தாலும், சாதா விமானத்திலேயே பயணம் செய்கிறார்.

5. அவருடைய “Berkshire Hathaway” என்ற நிறுவனம், 63 மிகப்பெரிய நிறுவனங்களை உள்ளடக்கியது. இருப்பினும், அவர் இந்த நிறுவனங்களின் மேலாளர்களுடன் அடிக்கடி மீட்டிங் போடுவதில்லை. ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் ஒரே ஒரு கடிதம் - “வருடத்திற்கான் குறிக்கோள்கள் என்ன, எதிர்பார்ப்புகள் என்ன” இவ்வளவுதான். (”மீட்டிங் போடுவது காலவிரயம்”)

6. தன் நிறுவனத்தலைவர்களிடம் அவர் அறிவுறுத்துவது ஒன்றே ஒன்றுதான்: ”முதலீட்டார்களின் பணத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்”

7. வேலை முடிந்து வீடு திரும்பியதும் வாரனின் பொழுதுபோக்கு பாப்கார்ன் சுவைத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது. பார்ட்டிகளுக்கு செல்வது, மேல்தட்டு மக்களுடன் ஆட்டம் போடுவது போன்றவை அவருக்கு பிடிக்காதவை. இயல்பான, மிகையில்லாத வாழ்க்கை.

8. கொஞ்சம் சம்பாதிக்கும், நிறைய கடன் வாங்கும் நம்மில் பலர் அடிக்கடி அலைபேசி மாற்றுகையில், வாரன் ஒரு செல்போன்கூட வைத்துக்கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான தகவல். அவர் அலுவலக மேஜையில் கணிப்பொறியும் வைத்துக்கொள்ளவில்லை.

வாரன் பஃபெட் தன்னுடைய நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எழுதும் ஆண்டறிக்கை மடல் மிகவும் புகழ் பெற்றது. அவற்றை http://www.berkshire-hathaway.com என்கிற வலைத்தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம் (அதற்கான உரல்கள் இந்தப் பதிவின் கடைசியில்).

ஒவ்வொரு வருடமும் அவருடைய மடல் ஏராளமானோரால் படிக்கப்படுகிறது. மற்ற எந்த நிறுவன அறிக்கையிலும் காணமுடியாத சில சிறப்புகள் அவருடைய மடல்களில் உண்டு.

தன்னுடைய நிறுவன சாதனைகளை பட்டியலிடுகையில், வாரன் அந்த நிறுவன உயர் அதிகாரிகளின் பங்களிப்பை பாராட்டத் தவறுவதில்லை. அதே போல், தன்னுடைய முதலீட்டில் செய்த தவறுகளை நேர்மையுடன் சொல்லவும் தயங்குவதில்லை.

மிகவும் முக்கியமாக, அவருடைய வருடாந்திர அறிக்கையில் Graph, Chart என்று படமோ, பிலிமோ காட்டுவதில்லை. அவருடைய இயல்பான நகைச்சுவை மடல் முழுவதும் வியாபித்திருக்கும்.

முதலீடு செய்யும் வர்த்தகம் புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பது அவரது சித்தாந்தம். அதனாலேயே, அவர் மென்பொருள் மற்றும் இணைய சம்பந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை.

கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களில் அவருடைய நிறுவன பங்கின் மதிப்பு ஏறக்குறைய எல்லா வருடங்களிலுமே S&P 500 என்று அறியப்படும் அமெரிக்க பங்குசந்தை குறியீட்டு எண்ணின் ஏற்றத்தைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது.

1965ல் இருந்து கணக்கிட்டால், அவர் நிறுவன பங்கு அடைந்திருக்கும் ஏற்றம் (வாயைப்பிளக்காதீர்கள்) மூன்று லட்சம் சதவீதத்திற்கும் மேல். ஒப்பீட்டில், S&P 500 ஏற்றம் ஆறாயிரம் சதவீதம் மட்டுமே. இந்த பொருளாதார சரிவிலும் அவருடைய நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட குறைந்த சரிவையே சந்தித்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினால் அவர் பெரும்பாலும் அதை விற்பதே இல்லை. அப்படி பல ஆண்டுகளாக அவர் வைத்திருக்கும் பங்குகளில் சில, Gillette, American Express, Coca-Cola, Johnson & Johnson, Walmart, Procter & Gamble, Washington Post ஆகியவை. இந்த பட்டியலை பார்த்தாலே, எளிமையான, தினசரி உபயோகத்திலிருக்கும் பொருட்கள், சேவைகளை தரும் நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பது தெரியும்.

அவருடைய வலைத்தளமான http://www.berkshirehathaway.comல் உள்ள Corporate Governance பற்றிய ஆவணங்கள் அவருடைய நிறுவனத்தில் பின்பற்றப்படும் மேலாண்மை கட்டுப்பாடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவுகிறது.

அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றும் எந்த நிறுவனத்திலும் முதலீட்டாளர்களுக்கு சத்தியமாக ஏமாற்றம் கிடைக்காது என்பது அந்த ஆவணத்தை படித்தாலே புரியும்.

”உங்களிடம் எங்கள் நிறுவனக்கொள்கைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற வியாபாரம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் தொலைபேசிக்காக திருமணமாகாத கன்னிப்பெண்ணைப் போல காத்திருக்கிறேன்” என்கிறார்.

இதையே 2006 மடலில், ஒரு நகைச்சுவை துணுக்கை மேற்கோள் காட்டி -

”சூப்பர் மார்க்கெட்டில் தள்ளாத முதியவர் ஒருவர் தன் மனைவியை தவறவிட்டு தேடிக்கொண்டிருந்தார். தேடும் அவசரத்தில் அவருடைய ஷாப்பிங் வண்டி இவரைப்போலவே அவசரத்தில் இருந்த ஒரு இளைஞனின் வண்டி மீது மோதி விடுகிறது.

“ரொம்ப சாரி, தெரியாம இடித்துவிட்டது, அவசரத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது”

”ஆமாம், என் மனைவியை தேடிக்கொண்டிருக்கிறேன்”

இளைஞன் “நானும் அதேதான் செய்து கொண்டிருக்கிறேன். வாங்களேன் சேர்ந்தே தேடலாம்”

முதியவர் ”சரி. உங்கள் மனைவி எப்படி இருப்பாள்?”

”ஓ! அவள் மிக அழகி. இன்னிக்கெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். சாமியார் பார்த்தால் அவளிடம் மண்டியிடுவார். யாரவது வீட்டுக்குள்ளிருந்து அவளை பார்த்தால் ஜன்னலை உடைத்துக்கொண்டு அவளிடம் ஓடுவார்கள். போதாதற்கு இன்னிக்கு ரொம்ப டைட் டி ஷர்டும், ஜீன்ஸும் போட்டிருக்கிறாள்”.

“உங்கள் மனைவி எப்படி இருப்பாள்?”

முதியவர் “அதை விடுங்கள், நாம உங்க மனைவியை தேடுவோம்”

உங்களிடம் அந்த அழகான மனைவிபோல் பிஸினெஸ் இருந்தால் சொல்லுங்கள், என் அலுவலக ஜன்னலை உடைத்துக்கொண்டு ஓடுவருகிறேன் - என்கிறார்.

வாரனைப் போல ”தங்கத் தொடு கை (Golden touch)” கொண்ட முதலீட்டாளர் அடிக்கடி பிறப்பதில்லை. தேன் கூட்டை தொட்டுவிட்டே புறங்கை நக்குபவர்களிடையே, தேனாற்றையே வைத்துக்கொண்டு விரல் நுனிகூட அதில் படாமல் இருப்பவர் வாரன் பஃபெட்.

இதற்கெல்லாம் மேலாக தன் வாழ்நாளில் சேர்த்த அளப்பரிய செல்வத்தை பொது நலனுக்காக கொடுப்பவர்கள் மிகச் சிலரே.

வாரன் பஃபெட் 2006-ல் உலகின் மிகப்பெரிய நன்கொடையை அறிவித்தார். கிட்டத்தட்ட தன் முழு சொத்தையுமே நற்காரியங்களுக்காக எழுதிவைத்து விட்டார். (அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் என்பது முக்கியம்) நன்கொடை செய்த தொகை எவ்வளவு தெரியுமா? 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறக்குறைய ரூ.1,58,100 கோடி).

உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸும், வாரனும் பலகாலம் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

”எங்களுக்குள் பொதுவான விஷயம் எதுவும் இல்லை” என்றே இருவரும் நினைத்தனர்.

முதல்முதலாக ஐந்து வருடங்களுக்குமுன் சந்திக்க நாள்குறித்த போது மொத்தம் 30 நிமிடங்களே ஒதுக்கினர். சந்திப்பின் போது ஒருவருக்கொருவர் பிடித்துபோய் சந்திப்பு பத்து மணி நேரமாக நீண்டது. இப்போது இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். அன்றிலிருந்து கேட்ஸ் - வாரனின் பக்தர்.

மேல்சொன்ன ரூ.158,000 கோடி கொடை கொடுக்கப்பட்டது Bill and Melinda Gates Foundation என்கிற தொண்டு நிறுவனத்துக்குதான். வாரனின் ஒரு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரம் கோடி பெருங்கொடையின் பாதுகாவலர் கேட்ஸ்.

இதற்கு பிறகு, அவரை பங்கு சந்தைக்கு மட்டும் பகவான் என்று கூறுவது பொருத்தமில்லை என்று தோன்றுகிறது.

இந்தியாவில் பல செல்வந்தர்கள் இதை செய்திருக்கிறார்கள். ஆயினும், தன் முழு சொத்தையோ அல்லது அதில் பெரும்பகுதியையோ கோவில்களுக்கும், தர்ம காரியங்களுக்கும் எழுதிவைப்பது என்பது எப்போதுமே உண்டு.

அதில் பெரும்பான்மை, வாரிசுகள் இல்லாததாலோ அல்லது வாரிசுகள் மேல் ஏற்பட்ட விரக்தியாலோ ஏற்பட்டதுதான். தற்காலத்தில் அப்படி செய்வது வழக்கொழிந்து விட்டது என்று தோன்றுகிறது.

வாரிசுகள் இருக்கும்போதே, மிகப்பெரிய செல்வத்தை நற்காரியங்களுக்குத் தர மிகப்பெரிய மனது வேண்டும். பாரி, ஓரி போல வாரி வழங்கியவர் வாரன்!
http://www.sathyamurthy.com/

No comments:

Post a Comment