Wednesday, September 16, 2009

வரிகள் : ஒரு அறிமுகம்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், அரசின் வருமானத்தில் பெரும் பங்காற்றுவது Taxes எனப்படும் வரிகள் தான்.

வரிகள் தான் ஒரு நாட்டின் வருமானத்திற்கு ஆதார புள்ளி ஆகும். இந்த வரிகளால் தான், ஒரு அரசு தமது மக்களுக்கு பணியாற்ற, செயலாற்ற தேவையான நிதியினை பெறுகிறது. அதனால் தமது எல்லைக்குட்பட்ட வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களின் மீதும், நிறுவனங்களின் மீதும் வரிகளை விதிகிறது. தயாரிக்கப்படும் பொருட்களின் மீதும், இடத்தின் மீதும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களின் மீதும் , ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களின் மீதும் , மற்றும் இன்னும் பிற மறைமுக வரிகளும் விதிக்கப் படுகின்றன. இவ்வாறு சேகரிக்கபட்ட வரிகளைக் கொண்டு தான், அரசு சிறந்த நிர்வாகத்தையும், சிறந்த சேவையினையும் மக்களுக்கு வழங்குகிறது.
இவ்வாறு நம் மீது திணிக்கபடும் சில வரிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
வருமான வரி INCOME TAX

ஒரு நாட்டின் சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு குடிமகனும் , நிறுவனமும் வருமான வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். அதிகம் வருமானம் ஈட்டும் ஒருவர், அதிக வருமான வரியையும், குறைந்த வருமானமீட்டும் ஒருவர் , குறைந்த வரியையும் செலுத்துகிறார்கள். மிக குறைந்த, வருமான வரம்பு எல்லையை தொடாதவர்கள் , வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி சதவிகிதம் அவ்வப் போது மாறுபடும், அதன் வருமான வரம்பை பொறுத்து...

இப்படிபட்ட வருமான வரி, 1812 ல் அமெரிக்காவில் நடைபெற்ற போரின் போது தான் விதிக்கப் பட்டது. ஏனென்றால், போரினால் அமெரிக்காவிற்கு 100 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டது. அதனை சரிகட்டும் விதமாகத்தான் இந்த வரி விதிக்கப் பட்டது. ஆனால் போர் முடிந்த பின்னர் அப்படியே நடைமுறையில் விடப்பட்டது. இதை தான் , இன்று அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன.
நிறுவன வரி CORPORATE TAX

இது ஒரு நிறுவனத்தின் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். இதனின் வரிச்சதவிகிதம், அந்நிறுவனத்தின் லாப அளவில் ஏற்படும் வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும். நாட்டின் மத்திய அரசு மட்டுமல்லாமல், அதன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட நிறுவனங்களின் மீது வரிகளை விதிக்கும்.
கலால் வரி EXCISE TAX

இது பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஆகும். இவை நேரடியாக பொருட்களின் மீது விதிக்கப் படாமல் உற்பத்தியாளர் மற்றும் வணிகர்கள் மீது விதிக்கப் படுகிறது.
சொத்து வரி PROPERTY TAX

உள்ளூராட்சி, நகராட்சி முதலியன அதன் எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் மேல், அதன் மதிப்பை பொறுத்து விதிக்கும் வரி ஆகும். இப்படி சேகரிக்கப் பட்ட வரிகளைக் கொண்டு தான், ஒரு நகராட்சி அதனுடைய சாலை, குடிநீர் மற்றும் பள்ளிகூட வசதிகளை ஏற்படுத்தி கொள்ளுகின்றன.
விற்பனை வரி SALES TAX

இந்த வரி வணிக விற்பனையாளர்களால் அரசுக்கு செலுத்தப்படும் வரி ஆகும். பொருட்களை விற்கும் போதும், இடத்தை விற்கும் போதும் இவ்வரி விதிக்கப் படுகிறது. பொருட்களின் மதிப்பை பொறுத்தும்,விற்பனையின் அளவை பொறுத்தும் இதன் வரி சதவிகிதம் மாறுபடும். உண்மையில் இந்த வரி, நுகர்வோர் மீது தான் விதிக்கப்படும் மறைமுக வரி. பொருள் வாங்கும் நுகர்வோருக்கு இந்த வரி பற்றி தெரிவதற்க்கு வாய்பில்லை. பின்னர், பொருளை விற்ற விற்பனையாளர், தான் விற்ற தொகையிலிருந்து கிடைத்த வரிப் பணத்தை எடுத்து அரசுக்கு செலுத்துகிறார்.
சேவை வரி SERVICE TAX

அரசும், உற்பத்தி நிறுவனங்களும் அவை வழங்கிய சேவையின் அடிப்படையில் நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
ஏற்றுமதி வரி EXPORT TAX

உள் நாட்டில் உற்பத்தியான பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப்படும் வரி ஆகும். இவ்வரியை ஏற்றுமதி நிறுவனங்களால் செலுத்த்ப் படுகிறது.
இறக்குமதி வரி IMPORT TAX

வெளி நாட்டில் உற்பத்தியான பொருளை நம் நாட்டில் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப் படும் வரி ஆகும். இவ்வரியை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் செலுத்தப் படுகிறது.
இதனை சுங்க தீர்வை அல்லது சுங்க வரி எனலாம்.
மதிப்பு கூட்டபட்ட வரி VALUE ADDED TAX - VAT

இது நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும். பொருள் உற்பத்தியின் போது ஒவ்வொரு நிலையிலும் , அதன் மதிப்பிற்கு ஏற்றாற் போல் வரி விதிக்கப்படும். இப்படி கூட்டப் பட்ட வரிகளானது, பொருள் விற்பனைக்கு வரும் போது, அதனை நுகர்வோர் மீது விதிக்கப் படுகிறது. இத்தகைய வரி முன்பு மேலை நாடுகளில் மட்டும் தான் இருந்தது. தற்பொழுது இந்தியாவிலும் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
சொத்து மதிப்பு வரி AD VALOREM TAX

Ad valorem எனப்படும் இவ்வார்த்தை (Latin) லட்டின் மொழியிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் According to Value என ஆங்கிலத்தில் கொள்ளப்படும். இதனை நாம் சொத்து மதிப்பு வரி எனலாம்.
ஒருவர் தான் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை பொறுத்தோ அல்லது இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை பொறுத்தோ விதிக்கப் படும் வரி - சொத்து மதிப்பு வரி எனப்படும்.
இத்தகைய வரி தான் ஒரு நகராட்சிக்கு அல்லது நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறது.
வருமான குவிப்பு வரி ACCUMULATED EARNINGS TAX

ஒரு நிறுவனம் தன் வருமானத்திற்கு அதிகமான வருமானத்தை ஈட்டுவதாக கொள்வோம். அந்த வருமானத்தை அந்நிறுவனம் தன்னிடத்தே வைத்திருக்க முயலுமானால் அதற்கு அரசு வரி விதிக்கிறது. இதனை வருமான குவிப்பு வரி எனலாம்.
எனவே நிறுவனங்கள் இந்த வரியை கொடுக்காமலிருக்க லாப பங்கீடை( Divident) வழங்குகிறது. இவ்வாறு வழங்குவதால் நிறுவனங்கள், அரசுக்கு குறைந்த அளவிலேயே வரியை செலுத்துகிறது.
வரி DUTY

அரசு சில பொருட்களின் மீதும், வியாபார பரிவர்த்தனைகளின் போதும், வழங்கும் சேவையினை பொறுத்தும் சுமத்தும் வரி தான் இந்த டூட்டி ( Duty) எனும் சுமை வரி. இதனை ஒருபோதும் தனிநபர்களின் மேல் சுமத்தப்படுவதில்லை. மாறாக பல்பொருள் பரிவர்த்தனைகளின் போதும், நிதி பரிவர்த்தனைகளின் போது மட்டும் தான் விதிக்கப்படுகிறது.
மறைமுக வரி HIDDEN TAXES

இந்த மறைமுக வரிகள் நுகர்வோரின் அறிவுக்கு தெரியாமலே , அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய வரிகள், நுகர்வோருக்கு எதனால் விதிக்கப்படுகிறது என்பதை ஒருபோதும் தெரிவிக்கப் படுவதில்லை.
உதாரணம் : மதிப்பு கூட்டப் பட்ட வரி, விற்பனை வரி
வெகுமதி வரி GIFT TAX

ஒரு அரசு, தன் குடிமகன் ஒருவர், மற்றொருவருக்கு விலை உயர்ந்த பொருளை வெகுமதியாக கொடுத்தால் அதன் பேரில் ஒரு வரி விதிக்கிறது. அது தான் இந்த வெகுமதி வரி. இந்த வரியை வெகுமதி வழங்குபவர் தான் கொடுக்க வேண்டும். அத்தோடு அல்லாமல், பரிசு பெற்றவரும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இந்த வரி , சில சமயங்களில் சாதனை புரிந்த இந்தியருக்கு வழங்கப்பட்ட பரிசின் போது விலக்கப் படுகிறது.

1. டெண்டுல்கர்க்கு கிடைத்த பெர்ராரி (Ferrari) கார் மீது 2. ரவி சாஸ்திரி கிடைத்த அவ்டி (Audi) கார் மீது வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
அபராதம் LEVY

அரசுக்கு கட்ட வேண்டிய வரியை காலம் தாழ்த்தி கட்டினால் அதன் மீது விதிக்கப்படும் கட்டணம் தான் அபராதம் ஆகும்.
உதாரணம் : குடிநீர் வரி, மின்சார வரி, டெலிபோன் வரி போன்ற வரிகளை காலம் தாழ்த்தி செலுத்தினால் ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப் படும் என்பது நமக்கு வரும் மாதகட்டண சீட்டில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த அபராதம் (Levy) லெவி எனப்படும்.
முத்திரை தீர்வு STAMP DUTY

ஒரு இடம் அல்லது மனை வாங்கும் போது, அதை (Document) பத்திரமாக மாற்ற , அந்த இடத்தின் மதிப்பிற்கேற்றார் போல , நாம் வாங்கும் முத்திரை தாளுக்கு செலுத்தும் தொகை தான் இந்த முத்திரை தீர்வு.
காலண்டர் வருடம் CALENDER YEAR

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலம் காலண்டர் வருடம்.
வரி ஆண்டு TAX YEAR

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் , தங்களின் வருடாந்திர கணக்கு வழக்குகளை சமர்பிக்க தேர்ந்துதெடுக்கும் ஏதேனும் 12 மாதங்கள் அடங்கிய வருடம் வரி ஆண்டு எனப்படும்.

உதாரணம் : ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை.
பிஸிகல் ஆண்டு FISCAL YEAR

ஒரு நிறுவனம் தன் வருட கணக்குகளுக்காக உபயோகப்படுத்தும் வருடத்தின் ஏதாவது 12 மாதங்கள். அவை காலண்டர் வருடமாகவும் இருக்கலாம் அல்லது வரி ஆண்டாகவும் இருக்கலாம்.
முடிவு வருடம் TERMINAL YEAR

வருமான வரி செலுத்தும் ஒருவர் இறந்த வருடத்தை குறிக்கும் ஆண்டு முடிவு வருடம் எனப்படும்.
பிடித்தம் DEDUCTION

வருமான வரி செலுத்தும் போது அதில் காட்டப்படும் வருமானம் என்பது நிகர வருமானத்திலிருந்து மொத்த செலவைக் கழித்து மீதியுள்ள தொகை தான் , வருமானமாக காட்டப்படும். இப்படி மொத்த செலவை நிகர வருமானத்திலிருந்து பிடிப்பதற்கு பிடித்தம் என்கிறோம். இதனால் வருமான வரி குறைவாக செலுத்தப்படுகிறது.
ஒதுக்கீடு WRITE OFF

ஒரு நிதி நிறுவனம், ஒரு சிறு தொழில் செய்பவருக்கு கடன் வழங்குவதாக கொள்வோம். வாங்கியர், ஏதோவொரு காரணத்தினால் திவாலாகி விட்டால், அவரால் கண்டிப்பாக கடனை திருப்பி அளிக்க முடியாது.
அந்நிலையில் நிதி நிறுவனம், இப்படி திரும்பி வராக் கடனை, தன் கணக்கில் செலவாக காண்பித்து ஒதுக்கீடு செய்கிறது.இதனை தான் ஒதுக்கீடு என்கிறோம்.
முதலீட்டு லாபம் CAPITAL GAIN

நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட அதிக மதிப்பில் அல்லது அதிக விலையில் இருந்தால் அதை முதலீட்டு லாபம் எனலாம். இந்த லாபத்தை, நாம் பொருளை அல்லது இடத்தை விற்றால் மட்டுமே அடையலாம்.
முதலீட்டு நட்டம் CAPITAL LOSS

நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட குறைந்த மதிப்பில் அல்லது குறைந்த விலையில் இருந்தால் அதை முதலீட்டு நட்டம் எனலாம்.
திரும்ப பெறும் நிதி REFUND

ஒருவர் , அரசுக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்திய பின்பு, அரசு அவரது கணக்கை சரிபார்த்து , அதிக வரி செலுத்தி இருந்தால் , நியாயமான வரியை மட்டும் எடுத்து கொண்டு மீதியை ஒரு காசோலையாக பணத்தை திரும்ப அளிக்கிறது.
இப்படி திரும்ப அளிக்கும் தொகையை தான் திரும்பப் பெறும் நிதி (Refund) என்கிறோம்.
உபரி கட்டணம் SURCHARGE

ஒரு அத்தியாவசிய பொருள் அல்லது வாகனம் வாங்கும் போது கூடுதலாக ஒரு உபரி தொகை அல்லது உபரி வரி சேர்க்கப் பட்டிருக்கும். இதை உபரி கட்டணம் எனலாம்.
வரி ஏய்ப்பு TAX EVASION

வரி ஏய்ப்பு என்பது மிக பெரிய குற்றம் ஆகும்.
ஒருவர் அல்லது நிறுவனம் தான் கட்ட வேண்டிய வரி கட்டாமல் அல்லது கட்டுவதை தவிர்த்து வந்தால் , அது வரி ஏய்ப்பாக கருதப்பட்டு, அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும் , மிக பெரிய அபராத தொகையையும் விதிக்கும்.
வரி விடுமுறை TAX HOLIDAY

தொழிற் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் அரசு கொடுக்கும் ஒரு சலுகை. சில சமயங்களில் அரசு. வரியில் தள்ளுபடி அல்லது வரியே இல்லாமல் செய்வது போல சலுகைகளை வழங்கும். இதனால் அந்நிறுவனங்கள் நல்ல பலனடைந்து , அதன் வளர்ச்சியை பெருக்கும்.
அரசு, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து , வெளி நாட்டு முதலீட்டாளர்களைக் கவரும்.
ஆண்டறிக்கை ANNUAL REPORT

1929 ம் ஆண்டு அமெரிக்க பங்குசந்தை பெரும் சரிவை அடைந்தது. அப்போது ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதில் அனைத்து நிறுவனங்களும் தங்களின் நிதி நிலை பற்றிய அறிக்கையை ஆண்டுகொருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்றது.
அதன் படி அந்த ஆண்டறிக்கையில் கீழ்கண்ட அம்சங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. அவைகள் பின்வருமாறு,
நிதி நிலை பற்றிய முக்கிய அம்சங்கள் பங்குதாரர்களுக்கு அனுப்பபட்ட கடிதங்கள் அனைத்து விவரங்கள், வரைவுகள், புகைப்படங்கள் நிர்வாகத்தின் விவாதங்கள், மற்றும் ஆராய்ச்சிகள் நிதி நிலை அறிக்கைகள் பற்றிய குறிப்புகள் தணிக்கையாளர் அறிக்கை நிதி பற்றிய அடிப்படை விவரங்கள் நிறுவன நிர்வாகிகள், இயக்குனர்கள் மற்றும் நிறுவனம் பற்றிய செய்திகள்/ தகவல்கள்.

பரஸ்பர நிதி : ஒரு அறிமுகம்

பரஸ்பர நிதி என்றால் என்ன?

பரஸ்பர நிதி எனப்படுவது பொது மக்களிடமிருந்து பணத்தை திரட்டி, பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீட்டி, அதில் கிடைக்கும் லாபத்தை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பகிர்ந்தளிப்பது ஆகும் . இவ்வாறு திரட்டப்பட்ட பணத்தை நிதிநிறுவன மேலாளர்கள், தன் கீழ் இயங்கும் குழுவினை கொண்டு அலசி ஆராயப்பட்ட பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீட்டுவார்கள். இவ்வகை நிதி திட்டங்களில் சில நிதி நிறுவனங்கள், வங்கிகள், மற்றும் அயல் நாட்டு நிதி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. பரஸ்பரநிதி பங்குகள் “யூனிட்” என்ற அளவில் குறிக்கப்படும்.

இருக்கும் முதலீட்டு சாதனங்களில் சிறந்ததாக கருதப்படும் ஒரு வகையே பரஸ்பரநிதிகள். மற்றெந்த முதலீட்டு சாதனத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இது விலை குறைவானது மற்றும் முதலீட்டிற்கு சுலபமானது. நாம் தனியாக இருந்து பல்வேறு பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றை தேடிபிடித்து முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதிகளை குறைந்த விலையில் வாங்கிவிடுவதொடு, சுலபமாகவும் வாங்கி விடலாம். விரிவாக்கம் மற்றும் குறைந்த அபாயம். அதிக லாபம் ஆகியன இதன் மற்றைய சிறப்பம்சங்கள்.

இதை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள் , இப்படித்தான் இருக்கும் என்று பார்க்க நினைப்போருக்கும், இதுவரை இதில் முதலீடு செய்யாதவருக்கும் மற்றும் பரஸ்பரநிதியின் அடிப்படை பற்றி புரிந்து கொள்ள நினைப்பவருக்கும் இந்த கட்டுரை உபயோகமாக இருக்கும் என நினைக்கிறோம்.
சரி ஆரம்பிப்போமா ?

பரஸ்பர நிதியினை பற்றி அறியும் முன் சற்று பங்கு மற்றும் கடன் பத்திரங்களை பற்றி இங்கு பாப்போம் .
பங்குகள்

ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலம் நாமும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிறோம். அந்நிறுவனம் தான் அடையும் லாபத்தை பகிர்ந்தளிக்கும்போது அதில் ஒரு பங்கு உங்களுக்கும் கிடைக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாம் இணைந்து தான் நடக்க வேண்டும். உங்களது பங்காக ஓட்டளிக்கும் உரிமை கிடைக்கிறது.
இவைகள் பங்கு சந்தையில் வாங்குவதற்கு எளிதாக கிடைக்கின்றன .
சில உதாரணம் :- ரிலையன்ஸ் , இன்போசிஸ், விப்ரோ போன்றவை.

கடன் பத்திரங்கள்

அடிப்படையில், ஒரு அரசு அல்லது ஒரு நிறுவனத்திற்கு பொது மக்களால் அளிக்கப்படும் கடன் தொகை ஆகும். அதற்கு கடன் பெற்ற நிறுவனங்கள், குறித்த காலத்தில் , குறித்த அளவில் வட்டி வழங்குவதாக ஒரு பத்திரத்தை கொடுக்கும். இதற்கு கடன் பத்திரம் எனப்படும். இது முதலீட்டுகளிலே மிகவும் பாதுகாப்பானது.

பங்குகள்,கடன் பத்திரங்கள் மட்டுமல்லாமல் வேறு சில முதலீட்டு சாதனங்களும் உள்ளன .. வீடு மனை வாங்கல் /விற்றல், வருடாந்திர சேமிப்பு பத்திரங்கள், விலைமதிப்புள்ள தங்கம், போன்ற உலோகங்கள் ஆகியவையும் பிறவகை முதலீட்டு சாதனங்களாகும் .
பரஸ்பர நிதிகள் வேலை செய்யும் விதம்

முதலீட்டாளர்கள் தம் பணத்தை ஒரு பரஸ்பரநிதி நிறுவனத்தின் சிறந்த ஒரு நிதி திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். அதை நிறுவன மேலாளர்கள் பங்குகளில்/கடன் பத்திரங்களில் முதலீட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை பகுதிகளாக பிரித்து வழங்குகிறார்கள் .

இந் நிதி திட்டங்களை இந்திய பங்கு வர்த்தக வாரியம் மற்றும் இந்திய பரஸ்பர நிதி சங்கம் போன்றவை கண்காணிக்கின்றன.
ஒழுங்கு முறை ஆணையங்கள்

முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் செபி என்னும் "இந்திய பங்கு வர்த்தக வாரியம்". இது பரஸ்பர நிதிகளை தான் வகுத்துள்ள கொள்கைகளை கொண்டு நெறிப்படுத்துகிறது . அப்போது வழி காட்டுதல் நடைவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

செபியினால் அங்கிகரிக்கப்பட்ட AMC ( ASSET MANAGEMENT COMPANY ) என்னும் சொத்து மேலாண்மை நிறுவனம் பரஸ்பர நிதியில் உள்ள பணத்தை பலவிதமான பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். கஸ்டடியன் எனும் பாதுகாப்பாளர்கள் கம்பெனி சாராத வெளி நபராய் இருக்க வேண்டும் என செபி அறிவுறுத்துகிறது. இப்படி செபியிடம் பதிவு பெற்ற பாதுகாப்பாளர்கள், பல நிதி திட்டங்களில் உள்ள நமது பங்குகளை தம் வசம் வைத்து பாதுகாக்கிறார்கள் . நிதி திட்டம் முடிந்தவுடன் நம் பணத்தை அன்றைய மதிப்பிட்டிற்கு தக்கவாறு திருப்பி அளிப்பார்கள் .

பரஸ்பர நிதிகளை முறையாக பயன்படுத்த ஒரு தனி சங்கம் உள்ளது. அதன் பெயர் இந்திய பரஸ்பர நிதி சங்கம் THE ASSOCIATION OF MUTUAL FUNDS IN INDIA ( AMFI )

இது பரஸ்பர நிதிகளை ஒரு கண்டிப்பான ஒழுங்குமுறை வட்டத்துக்குள் நிதிகளை கையாள வைக்கிறது. பரஸ்பர நிதியை பற்றின செய்திகளை மக்களுக்கு அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.இந்த சங்கம், பங்குவர்த்தக தொழில் மற்றும் நடவடிக்கைகளின் தரத்தை உயர்த்தும், மதிப்பிடுகள் அளிப்பதில் உண்மை நிலைகளை வெளிப்படுத்தல், தெளிவாக்குதல் போன்ற காரியங்களிலும் கவனம் செலுத்துகிறது.
இந்திய திரு நாட்டில் இருக்கும் பரஸ்பர நிதிகளின் வகைகள் :-

பரஸ்பர திட்டங்கள் ஒருவரின் பொருளாதாரத்தின் தன்மை தாங்கிக்கொள்ளும் ஆபத்தின் அளவு அல்லது எதிர்பார்க்கும் வருமானம் போன்ற அவரவர் தகுதிக்கேற்ப பல்வேறு திட்டங்களை வெளியிடுகிறது . அவை ஆயிரகணக்கில் உள்ளன. அதில் உங்களின் தேவையை பொறுத்து முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதியில் ஏற்கனவே இருந்து வரும் திட்டங்கள் – கட்டமைப்பு வாரியாக.
திறந்த முறை திட்டங்கள் OPEN ENDED SCHEMES மூடிய முறை திட்டங்கள் CLOSE ENDED SCHEMES இடைவேளை திட்டங்கள் INTERVAL SCHEMES
திறந்த முறை திட்டங்கள் OPEN ENDED SCHEMES

இவற்றை வருடத்தின் எந்த நாட்களில் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் . ஒரு நிலையான முதிர்வுகால தன்மை கிடையாது . நமக்கு அவசரமாக பண பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக இத்திட்டத்தில் இருந்து வெளியேறி விடலாம். Net Asset Value (NAV) எனப்படும் நிகர சொத்து மதிப்பு விலையில் , சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கலாம். இதன் முக்கிய அம்சம் எளிதில் பணமாக்கும் தன்மை .
மூடிய முறை திட்டங்கள் CLOSE ENDED SCHEMES

இத்திட்டம்ஒரு குறிப்பிட்ட முதிர்வு கால நிலைத்தன்மை உடையது. 3 முதல் 15 வருட வரையிலான முதிர்வு கால அவகாசம் உடையது. இதில் முதலீட்டிய பணத்தை, நாம் விரும்பிய பட , நம் தேவைகளுக்கென்று அவசரமாக வெளியில் எடுக்க முடியாது. இது நிலையான கால முதிர்வு நிலையின் முடிவில் மட்டுமே கிடைக்க கூடியது .

NEW FUND OFFER ( NFO ) எனப்படும் புதிய நிதி வெளியீட்டு சமயத்தில் இத்திட்டத்தில் சேரலாம். மற்றும் அதற்கு பின்னர் அந்த பங்குகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பங்கு சந்தையில் மட்டுமே வாங்கவோ , விற்கவோ முடியும்.

இந்த மூடிய முறையில், முதலீட்டாளர்கள் வெளியே வந்து விட வழியும் உள்ளது . இவ்வகையில் சில நிதிகளில் யூனிட்டுகளை பரஸ்பர நிதிக்கே (NAV) மொத்த சொத்து மதிப்பு விலையில் திரும்ப விற்றுவிட முடியும் ...கொஞ்சம் கொஞ்சமாக . செபி நெறிமுறைகள் இந்த மாதிரி ஒரு வழியை முதலீட்டாளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது.
இடைவேளை திட்டங்கள் INTERVAL SCHEMES

திறந்த முறை மற்றும் மூடிய முறை ஆகிய இரண்டின் கலப்பினம். பங்கு சந்தையிலும் விற்கலாம், திறந்த மார்கெட்டிலும் விற்கலாம், அல்லது மொத்த சொத்து மதிப்புக்கு நிகரான விலையிலும் விற்றுவிடலாம்.
பரஸ்பர நிதியில் இருந்து வரும் திட்டங்கள்
பங்கு நிதி EQUITY FUNDS கடன் பத்திர நிதிகள் DEBT FUNDS சமன் படுத்தப்பட்ட நிதிகள் BALANCED FUNDS
பங்கு நிதி - EQUITY FUNDS

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தம்மிடமுள்ள தொகையின் பெரும் பகுதியை பங்குகளில் முதலீடாக்குகிறது. இந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கட்டுக்கோப்பு, நிதி திட்டங்களுக்கு ஏற்பவும் , நிதி மேலாளரின் நோக்கத்தை பொருத்தும் மாறும் . இப்படிப்பட்ட பங்கு நிதி திட்டங்கள் ஒரு நீண்ட கால அடிப்படையில் தான் வகுக்கப்பட்டு கின்றன . இதனால் அத்திட்டத்தின் அபாயத்தின் அளவு குறைக்கப்படுவது மட்டும் அல்லாமல் அதிக வருமானத்தை தரக் கூடும் .
முதலீட்டு நோக்கத்தை பொறுத்து, பங்கு நிதிகள் மேலும் சிறு சிறு வகைகளாக பிரிக்கப்படும். அவையாவன :
பரவலாக்கப்பட்ட பங்கு நிதிகள் - Diversified Equity Funds மத்தியரக முதலீடு நிதிகள் - Mid Cap Funds துறைசார்ந்த நிதிகள் - Sector Funds வரி சேமிக்கும் நிதிகள் - Tax Savings Funds
கடன் பத்திர நிதிகள் DEBT FUNDS

இந்த நிதியின் தலையாய நோக்கம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதாகும். அரசு ஆணையங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவை இவ்வகை கடன் பத்திரங்கள் வழங்கும் . இவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு , நிலையான வருமானம் கிடைப்பதோடு , அபாயங்களின் பாதிப்பும் குறைவு .
இந்த கடன் பத்திரங்கள் கீழ் கண்டவாறு இன்னும் சிறு பிரிவுகளாக உள்ளன .
மிக நம்பகமான அல்லது தங்க முலாமிட்ட நிதிகள் Gilt Funds வருமான நிதிகள் Income Funds அதிக வருமான நிதிகள் MIPs - Maximum Income Plan குறைந்த கால திட்டங்கள் - Short Term Plans ( STP) உடனடி பணத் திட்டம் Liquid Funds
மிக நம்பகமான அல்லது தங்க முலாமிட்ட நிதிகள் GILT FUNDS

இவை இந்திய அரசினால் வெளியிடப்படும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும். வட்டி வருமானம் சிறிதும் தவறாத, அபாயம் சிறிதும் இல்லாத முதலீடு. ஒரே ஒரு அபாயம் அவ்வப்போது மாறும் வட்டி விகித மாற்றம். அரசின் பின்பலம் எப்போதும் இருப்பதால் இதில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும்.
வருமான நிதிகள் INCOME FUNDS

இத்திட்டத்தில், பரஸ்பர நிதி தொகையின் பெரும்பகுதி நிறுவன கடன் பத்திரங்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு ஆகும். அது மட்டுமல்லாமல் ஒரு சிறு பகுதி பங்குகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.
அதிக வருமான நிதிகள் MAXIMUM INCOME PLAN - MIPs

அதிகபட்ச தொகையை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதுடன் ஒரு சிறு பகுதி பங்குகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. கடன் சாதனங்கள், மற்றும் பங்குகள் ஆகிய இரண்டு வகையின் அனுகூலமும் கிடைக்கிறது. மற்றெந்த கடன் திட்டங்களுக்கும் மேலாக இந்த திட்டம் அதிக அபாயம் மற்றும் அதிக வருமான வகையை சேர்ந்ததினால் உயர்வான திட்டமாக கருதப்படுகிறது.
குறைந்த கால திட்டங்கள் - SHORT TERM PLAN

இத்திட்டங்கள் மிக குறுகிய கால முதலீட்டு திட்டமாகும். குறைந்த பட்சம் மூன்று முதல் ஆறு மாத காலம் ஆகும். வணிக பத்திரங்கள் மற்றும், வைப்பு பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும். முதலீட்டில் ஒரு பகுதி, நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
உடனடி பணத் திட்டம் LIQUID FUNDS

பணசந்தை திட்டங்கள் என்றும் கூறப்படும். இதில் முதலீடு பாதுகாக்கப் படுவதுடன் சீக்கிரம் பணமாக மாற்றத்தக்க வல்லது. கஜானா பில்கள், வங்கிக்கு வங்கி மாற்றக்கூடிய சாதனங்கள், வைப்பு நிதி பத்திரங்கள் மற்றும் வணிக பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இவை ஒருநாள் கால அளவு மட்டும் அல்லாமல் மூன்று மாத கால அவகாசத்திற்கு மட்டுமே செய்யப்படும். இதில் செய்யப்படும் முதலீடு குறைந்தபட்ச அபாயம் உடையதாக இருப்பதால், மற்ற முதலீட்டு திட்டங்களை விட இது மிகவும் பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டம் ஒரு குறுகிய காலத்தில் வருமானம் பார்க்க என்னும் நிதி நிறுவனகளுக்கு மிக பயனுள்ளதாக அமைக்கிறது.
சமன் படுத்தப்பட்ட நிதிகள் BALANCED FUNDS

பெயருக்கேற்றாற்போல், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் சம அளவிற்கு முதலீடு செய்யும் திட்டமாகும். திட்டமிட்ட முதலீட்டு குறிக்கோளுடன் வளர்ச்சியை கருதி பங்குகளிலும், நிலையான வருமானம் தரும் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுவது. பங்குகளின் பாகம் வளர்ச்சியையும், கடன் பத்திரங்களின் பாகம் நிலையான வருமானத்தையும் தருவதால், இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு நிதிக்கும் ஒரு முதலீட்டு குறிக்கோள் தத்துவம் பின்பலமாக உள்ளது. இந்த குறிக்கோள்களை ஒட்டி ஒரு முதலீட்டாளர் தன் முதலீட்டு தேவையை அமைத்துக்கொள்ளலாம். பரஸ்பர நிதிகளை முதலீட்டு அளவுகோல் அடிப்படையில், இன்னும் பரவலாக வகைப்படுத்தலாம்.
முதலீட்டு அளவுகோல் அடிப்படைகள் பின்வருமாறு :
வளர்ச்சி திட்டங்கள் GROWTH SCHEMES வருமான திட்டங்கள் INCOME SCHEMES சமன்படுத்தப்பட்ட திட்டங்கள் BALANCED SCHEMES பணசந்தை திட்டங்கள் MONEY MARKET SCHEMES வரி சேமிப்பு திட்டங்கள் TAX SAVINGS SCHEMES குறியீட்டு எண் திட்டங்கள் INDEX SCHEMES துறை சார்ந்த திட்டங்கள் SECTOR SPECIFIC SCHEMES
வளர்ச்சி திட்டங்கள் GROWTH SCHEMES

இதன் பெரும்பகுதி பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், இவை பங்கு திட்டங்கள் எனவும் கூறப்படும். நீண்டகால அல்லது நடுத்தரகால அவகாசத்தில், முதலீடு செய்த பணம் உயர வேண்டும் என்ற திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டம். சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களால் இடை இடையே குறுகிய கால தொய்வு ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் உயரும் என்ற எதிர்பார்ப்பில் போடப்படுவது.
வருமான திட்டங்கள் : INCOME SCHEMES

இதன் பெரும் பகுதி அரசு கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுவதால் கடன் திட்டங்கள் எனவும் கூறப்படும். தொடர்ந்த நிலையான வருமானம் கொடுக்க எண்ணி அமைத்த திட்டங்கள். முதலீட்டு பெருக்கம் என்பது சிறிது குறைவு தான் என்றாலும் நிலையான வருமானத்தை தரவல்லது.
சமன்படுத்தப்பட்ட திட்டங்கள் BALANCED SCHEMES

நிலையான வருமானம் மற்றும் வளர்ச்சியை குறி வைக்கும் திட்டங்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிலைத்த வருமானம், அதே சமயம் முதலீட்டு பெருக்கம் இரண்டும் கொடுப்பது இதன் நோக்கம். வளர்ச்சி தரும் பங்குகள், நிலைத்த வருமானம் தரும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு சாதாரணமாக சரிசமமாக இருக்கும்.
பணசந்தை திட்டங்கள் MONEY MARKET SCHEMES

அளவான வருமானம், முதலீடிற்கு பாதுகாப்பு மற்றும் முதலீடு பெருக்கம், அதே சமயம் எளிதில் பணமாக்குதல் ஆகிய மூன்றும் கொடுக்கும் திட்டம். கஜானா பில்கள், வைப்பு நிதி பத்திரங்கள், மற்றும் வணிக பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறத . எளிதில் பணமாக்கக்கூடியதும், குறுகிய கால நோக்கிலும், முதலீடு பாதுகாப்பும் தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
வரி சேமிப்பு திட்டங்கள் TAX SAVINGS SCHEMES

இத்திட்டம் வரிச் சலுகை கருதியே ஆரம்பிக்கப்பட்டது. அவ்வப்போது அரசு வெளியிடும் அறிவிப்புகளின் படி, கிடைக்கும் வரி சலுகைகையை உபயோகப்படுத்தி முதலீடு செய்யப்படும் திட்டம். வருமானவரி சட்டம் பிரிவு 88 படி, பங்கு இணைந்த சேமிப்பு திட்டங்கள் ( ELSS) வரி தள்ளுபடிக்கு உள்ளாகும்.
குறியீட்டு எண் திட்டங்கள் INDEX SCHEMES

மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகியவற்றின் குறியீட்டு எண்களை பின்பற்றி அதில் முதலீடு மேற்க்கொள்ளப்படும் திட்டம். இத்திட்டத்தின் பட்டியலில் சந்தை குறியீட்டு எண்ணுக்கு உள்ளடங்கியுள்ள பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. மேலும் குறியீட்டு எண்ணில் உள்ள ஒரு பங்கின் கனமதிப்பை பொறுத்தே ஒவ்வொரு பங்கின் மீதான இத்திட்டத்தின் முதலீடும் அமைக்கிறது . இக்காரணங்களால் இத்திட்டத்தின் வருமான விகிதம் , பங்கு சந்தை குறியீட்டு எண்ணின் ஏற்ற , இறக்கங்களுக்கு தக்கவாறு பலனைத் தருகிறது .
துறை சார்ந்த திட்டங்கள் SECTOR SPECIFIC SCHEMES

பரஸ்பர நிதி இதழில், இத்திட்ட வெளியீட்டின் போது, இதன் முதலீடு இந்த தொழில் பிரிவு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என்பது குறிப்பிடப் பட்டிருக்கும். அவற்றில் மட்டுமே முதலீடு செய்யப்படும். உதாரணத்திற்கு: மென்பொருள், மருந்து, வேகமாக விற்று தீர்க்கும் நுகர்வோர் பொருட்கள், பெட் ரோலிய பொருட்கள் முதலியன .

இந்த பிரிவுகளின் செயல்திறனைப் பொறுத்து, இத்திட்டத்தின் வருமானம் இருக்கும். இவை அதிகமான லாபம் தரும் என்றாலும் ஆபத்தும் கூடவே கைகோர்க்கும். ஆகவே முதலீட்டாளர்கள் இந்த பிரிவு சார்ந்த தொழில்களின் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தும் அதே சமயம், ஆபத்தை தவிர்க்க தக்க தருணத்தில் வெளியேறிவிடவும் வேண்டும்.
பரஸ்பர நிதி வருமானத்தின் வகைகள்
பரஸ்பர நிதியில் மூன்று வழிகளில் வருமானம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டி பங்குகளில் கிடைக்கும் லாபப்பங்கு மற்றும் நிதி திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாப வருமானம் ஆகியன.

பரஸ்பர நிதி நிர்வாகி, பங்குகள் விலை உயர்ந்தும் விற்காமல் வைத்திருந்தால், நீங்கள் உங்களின் பரஸ்பர நிதி பங்குகளை விற்றும் லாபம் பண்ணலாம்.

பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் முதலீடு செய்பவர் முதலில், இந்த நன்மை தீமைகளை மனதில் கொள்ள வேண்டும்.
பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதால் உண்டாகும் நன்மைகள்

தேர்ந்த நிர்வாகம் - தகுதி வாய்ந்த நிதி வல்லுனர்களை கொண்டு பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கப்படுகின்றன. பரஸ்பர நிதி அவர்களுக்கு சகாய விலையில் நிர்வாகம் செய்ய உதவுகிறது.

முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை திறம்பட நிர்வகிக்க போதிய சந்தை பற்றிய அறிவும், தெளிவும் மற்றும் திறமை இருக்காது. அதனால் பரஸ்பர நிதி திட்டங்களில் ஈடுபடுவது முதலீட்டாளர்களுக்கு நன்மையே.

பரவலாக்கல் - ஆபத்தின் ( Risk) அளவு ஆங்காங்கே பிரித்துவிடப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு சிரமம் குறைக்கப்படுகிறது.

பரவலாக்கம் என்பது நம் கையில் உள்ள பணத்தைக் கொண்டு கிடைக்கின்ற பல வேறுப்பட்ட பங்குகளில் / கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது ஆகும். இவ்வாறு செய்வதினால் நம் முதலீட்டிற்கு ஏற்பட உள்ள நஷ்டங்களை குறைக்கவோ முடியும். இப்படி பரவலாக்கம் செய்ய பரஸ்பர நிதி நிறுவனத்தின் மிக உதவியாக இருக்கின்றன.
பரவலாக்க யுக்தியின் படி இரண்டு சாதகங்கள் ,
பல்வேறு பட்ட பங்குகளை வாங்குவது எதாகிலும் நஷ்டம் ஏற்பட்டால், அதனை மற்ற பிரிவுகளில் வரும் லாபத்தை வைத்து ஈடு கட்டுவது. ஒட்டுமொத்தமாக பங்குகளை வாங்குவதால் பரிவர்த்தக செலவு குறையும்.

எளிதில் பணமாக்குதல் - ஒரு சாதாரண பங்கை எப்படி, விற்று பணமாக மாற்ற முடியுமோ அது போல பரஸ்பரநிதி பாகத்தையும் அப்போதைக்கப்போது விற்று பணம் பண்ணிவிடலாம்.

கையாள்வது மிக எளிது - முதலீடு செய்ய எளிது. குறைந்த பட்ச தொகை கொண்டு முதலீடு செய்ய முடியும். 2000 ரூபாய் மட்டுமே கூட போதும் -சில நிறுவனங்கள் மாதம் 50 ரூபாயில் கூட சேவை அளிக்கின்றன.
பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதால் உண்டாகும் பாதகங்கள்.

நிதி மேலாண்மை செய்பவரின் செயல் திறன் குறைபாடு - சந்தையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடுகிறாரோ என்ற சந்தேகம். அவர்களுடைய சேவை இன்றி செய்திருந்தால் நாமே நன்றாக முடித்திருப்போமோ என்ற ஐயப்பாடு.

அதிக சேவை கட்டணம் : மேலாண்மை செய்யும் நிறுவனத்திற்கு, பங்குகள் வாங்கும்போது மற்றும் விற்கும் போது கமிஷன் தொகை கட்ட வேண்டிஇருப்பது. சில சமயம் அதிக கட்டண வசூலும் ஏற்பட வாய்ப்புண்டு.

குழப்பம் : நிதிக்கு ஒதுக்கிய பணம் அனைத்தும் முதலீடு செய்யப்பட வேண்டும். சில சமயம் நல்ல நல்ல பங்குகள் மற்றும் முதலீட்டு சாதனங்களில் முடக்கிய பின் வேறு நல்ல முதலீட்டூ சாதனம் கிடைக்காமல், மீதம் இருக்கும் தொகையை என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பது .

வரிசுமை : நிதி மேலாளர் முதலீட்டாளர் வரிசுமை பற்றி கவலை படாமல் இருந்து விடுவது. ஒரு நல்ல "முதல் பெருக்கம் " உண்டாகிறது என்று, பங்குகளை விற்று முதலாக்கும்போது ஏற்படும் வரிசுமை முதலீட்டாளரை பாதிக்கும். ஏனென்றால், முதல் பெருக்கத்தினால் உண்டாகும் வரிச்சுமை அதிகமாகிவிடும்.
முதலீட்டாளர்கள் ஒரு நிதி திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன்னர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பின்வருமாறு :
முன்னும் பின்னும் நிலை மாறிக்கொண்டே இருக்கும் பங்கு சந்தையில், இந்த குறிப்பிட்ட நிதி திட்டம் கடந்த சில ஆண்டுகளில் திறம்பட நிர்வகிக்கப்பட்டு, நல்ல வருவாயை தேடித்தந்திருக்கிறது என்று தீர ஆராய்தல் அவசியம். தொழில்முறையில், முதலீட்டாளருக்கு நல்ல சேவை அளிக்கும், நல்ல நிர்வாகமும், மேலாண்மையும் இருக்கும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தல் நன்மை தரும். குறிப்பிட்ட காலத்திற்கு திட்டம் நடைமுறையில் உள்ளதா என்பதை கவனித்தல் அவசியம். மறைமுக வரிகள் இல்லாமல் அவ்வப்போது நிதி செயல்பாடுகளை வெளியிடும் நிறுவனமா என்பதை ஆராய்தல் முக்கியம். நிதி திட்டத்தின் நுழைவின் மற்றும் வெளியேற்றத்தின் போது கிடக்கும் லாபத்தை பாதிக்குமா என்பதை நன்கு கவனித்து முதலீட்ட வேண்டும்.

இதுவரை படித்ததிலிருந்து நீங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் இயங்கும் விதம் பற்றியும், பல வித நிதி திட்டங்களைப் பற்றியும் முழுமையாக தெரிந்து, புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறோம். அடுத்த பாடத்தில் சந்திக்கலாம்.

பங்குகள் : ஒரு அறிமுகம்

பங்குசந்தை பற்றி அறிய வேண்டுமானால் முதலில் பங்குகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலம் நாமும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிறோம். அந்நிறுவனம் தான் அடையும் லாபத்தை பகிர்ந்தளிக்கும்போது அதில் ஒரு பங்கு உங்களுக்கும் கிடைக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாம் இணைந்து தான் நடக்க வேண்டும். உங்களது பங்காக ஓட்டளிக்கும் உரிமை கிடைக்கிறது.

ஒரு நிறுவன பங்குகளை நீங்கள் வைத்திருப்பதால், அந்நிறுவனம் ஒரு வேளை ஏதாவது சிக்கலில் மாட்டினால் அதற்கு நீங்கள் பொறுப்பு கிடையாது. நாம் முதலீட்டி உள்ள பங்குகளின் மதிப்பு குறைவதோடு அல்லாமல், நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அந்நிறுவனத்தின் கடன் அதிகமிருந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல. எவரும் நம்மை நஷ்ட ஈடும் கேட்கமாட்டார்கள்.
பங்குகளில் இரண்டு வகை உண்டு.
பொதுப்பங்கு முன்னுரிமைப்பங்கு
பொதுப்பங்கு COMMON STOCK
பொதுவாக தனி நபர்கள், பொது மக்கள் வைத்திருப்பது பொதுப்பங்கு. ஒரு நிறுவனத்தில் சாதாரணமாகவும், அதிகபட்சமாகவும் இருப்பது பொதுப்பங்குகள் தான். இவற்றுக்கு இவற்றில் நமக்கு வாக்களிக்கும் உரிமை, மற்றும் லாப பங்கிலும் உரிமை உண்டு. ஒரு பங்கு விலை உயர்கிறது அல்லது இறங்குகிறது என்று கூறும்போது அது பெரும்பாலும் பொதுபங்கினை மட்டுமே குறிக்கும். பொதுப்பங்கின் ஒரு முக்கிய அனுகூலம் அதனை அவ்வப்போது விற்று பணம் பண்ணி விடலாம்.
முன்னுரிமைப்பங்குகள் PREFERENCE STOCKS
முன்னுரிமை பங்குகள் பொது மக்களுக்கு கிடையாது. பரிவர்த்தனைக்கும் கிடையாது. நிறுவனம் லாபம் அளிக்கும் போது, இப்பங்குகளுக்கு முதலில் லாபம் பிரித்து கொடுத்தப் பின்னர் தான், பொதுபங்கு வைத்திருக்கும் பொது மக்களுக்கு வழங்கும். நிறுவனம் திவாலாகும் நிலையில் இருக்கும் போது, முன்னுரிமை பங்கு வைத்திருப்பவர்களுக்கு முதலீடு திரும்ப கிடைகும் வாய்ப்பு அதிகம். பொது பங்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. இப்பங்குகளை யாருக்காவது வழங்குவது என்றாலும், அது நிறுவனத்தின் நிர்வாக குழுவினரின் அனுமதியுடனே வழங்கப்படும்.
தொழிற் துறை பங்குகள் - SECTOR STOCKS

தொழிற் நிறுவனங்கள், அது ஈடுபடும் வணிக பிரிவுகளை பொறுத்து அதனை பல்வேறு தொழிற் துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளை Sector என ஆங்கிலத்தில் அழைக்கிறோம்.

இப்படி பிரிவுகள் ஆக்கி வைத்துக்கொண்டால் நிறுவனங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம். மேலும் ஒரு துறையில் உள்ள நிறுவனங்களின் தரவரிசையை அறியவும், அவற்றின் வியாபார நிலவரங்களை அறியவும் உதவுகிறது. ஒரு துறையில் சிறப்பாக செயல்படும் நிறுவனத்தின் வியாபார தன்மையை வைத்து , பிற நிறுவனங்களின் வியாபார நிலைமைகளையும், செயல் திறனையும் அறிய முடியும்.

இந்த பிரிவுபடுத்தல் யுக்தியை நன்றாக புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் ஒரு பிரிவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. உங்கள் கையில் உள்ள பங்கை பிரிவுக்குள் உள்ள மற்ற நிறுவன பங்குகளின் விலைகளுடன் அவ்வப்போது ஒப்பிட்டு பார்த்து அலசி ஆராய வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரே பிரிவில் உள்ள உங்கள் நிறுவன பங்கு விலை அதே பிரிவில் உள்ள மற்ற பங்குகளை காட்டிலும் அதிகரித்திருந்தால் ஏன்? என்ற காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

மாறாக உங்கள் நிறுவன பங்கு விலை அதே பிரிவில் உள்ள மற்ற பங்குகளை காட்டிலும் குறைந்திருந்தால் ஏன்? என்ற காரணத்தை என்று காரணம் கண்டு பிடிக்க வேண்டும். அவ்வாறு ஏன் என விடை தேடுவதால் நாம் நஷ்டத்திலிருந்து மீளலாம்.
இது போல 20 தொழிற் துறைகள் உள்ளன.
வாகனம் Auto வங்கி Bank கேப்பிடல் குட்ஸ் Capital Goods சிமெண்ட் Cement நுகர்வோர் பொருட்கள் Consumer durables கட்டுமானம் Construction மின்சாரம் Electricity உரம் Fertilizers மிக வேகமாக விற்கும் நுகர்வோர் பொருட்கள் FMCG- Fast Moving Consumer Goods தகவல் தொழில் நுட்பம் IT விளம்பரத் தொடர்பு Media உலோகம் Non- Ferrous metals பெட்ரோலியம் & வாயு Oil N Gas மருந்து Pharma சில்லறை Retail இரும்பு Steel சர்க்கரை Sugar தொலைதொடர்பு Telecom ஜவுளி மற்றும் கைத்தறி Textiles சக்கர தயாரிப்பு Tyre
பங்குகளில் உள்ள வகைகள்

முதலீட்டாளர்கள் முக்கியமான பங்குகளைப் பற்றிய முடிவுகள் எடுக்கும் முன் இவற்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

பங்குகள், அங்கீகரிக்கப்பட்ட பங்குகள், கட்டுபடுத்தப் பட்ட பங்குகள், மிதக்கும் பங்குகள், ஒட்டுமொத்த பங்குகள், வெளியிடப்படா பங்குகள் என ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையன.
அங்கீகரிக்கப்பட்ட பங்குகள் - AUTHORIZED SHARES

ஒரு நிறுவனம் துவங்குவதற்கு இவ்வளவு பங்குகள் தான் சேர்க்கப்படவேண்டும் என ஒரு வரையறை உள்ளது. நிறுவனம் துவங்கிய பின்னர், ஒரு காலகட்டத்தில் தனது பங்குகளை அதிகரிக்க நினைத்தால் ஏற்கெனவே உள்ள பங்குதாரர்களின் ஒப்புதலை பெற வேண்டும். அதே சமயம் அங்கீகரிக்கப்பட்ட அத்தனை பங்குகளையும் பொது விநியோகத்திற்கு விட வேண்டும் என்ற கட்டாயம் கம்பெனிக்கு இல்லை. சில பங்குகளை பிற்கால உபயோகத்துக்கு என்று வெளியிடாமல் வைத்துக்கொள்ளலாம்.
வெளியிடா பங்குகள் - UNISSUED SHARES

மேற்சொன்ன சில பங்குகளை பிற்கால உபயோகத்துக்கு என்று வெளியிடாமல் வைத்துக் கொள்வதை வெளியிடா பங்குகள் எனலாம்.
கட்டுபடுத்தப் பட்ட பங்குகள் - RESTRICTED SHARES

ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டவை. இந்த பங்குகளை ஒரு நிறுவனம் அதன் தொழிலாளர் நலன் மற்றும் நஷ்ட ஈடு போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்த வைத்துக் கொள்ளும். இக்கட்டுபடுத்தப் பட்ட பங்குகளை வைத்திருக்கும் தொழிலாளர்கள், அவற்றை அவ்வளவு எளிதில் விற்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை தம்வசம் வைத்திருக்க வேண்டும். பின்னர் விற்க வேண்டும் என்றால் SEC ( SECURITIES EXCHANGE COMMISION ) இடம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே விற்க முடியும்.
மிதக்கும் பங்குகள். - FLOAT SHARES

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதற்க்காக கொடுக்கப்பட்ட நிறுவன பங்குகள். இவற்றை மிதக்கும் பங்குகள் எனலாம். யார் வேண்டுமானாலும் இப்பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.
ஒட்டுமொத்த பங்குகள். - OUTSTANDING SHARES

ஒரு நிறுவனம் பங்குசந்தை வர்த்தகத்திற்காகவும் ( மிதக்கும் பங்குகள்) , தொழிலாளர்களுக்காகவும் ( கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் ) என பிரிக்கப்பட்ட பங்குகளின் மொத்த எண்ணிக்கை. மிதக்கும் + கட்டுப்படுத்தப் பட்ட = ஒட்டு மொத்த பங்குகள்.
பாதுகாப்பான பங்குகள் - DEFENSIVE STOCKS
நுகர்வோர் பொருட்கள் Consumer durables மிக வேகமாக விற்கும் நுகர்வோர் பொருட்கள் FMCG- Fast Moving Consumer Goods

பங்குசந்தையின் மாறுபாடுகள் இந்நிறுவன பங்குகளை பெரும்பாலாக பாதிப்பதில்லை. ஏனென்றால் நுகர்வோரால், உணவு மற்றும் மக்களின் அன்றாட தேவையில் சம்பந்தப்பட்ட நிறுவனப் பொருட்களுக்கான வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. என்றுமே குறையவும் வாய்ப்பில்லை. அதே போல திடீரென்று நுகர்வோரின் தேவையும் அதிகரிக்காது. இந்த பங்குகளை வைத்திருப்பவர்க்கு பங்குசந்தையின் வீழ்ச்சி பெரிய பாதிப்பை உண்டாக்காது. எனவே இவைகளை பாதுக்காப்பான பங்குகள் எனலாம்.
சுழலும் பங்குகள் - CYCLICAL STOCKS

பருவநிலை மாற்றம், ஒரு நிறுவன உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதால், அந்நிறுவன பங்கானது பங்குசந்தை வர்த்தகத்தின் போது அதன் விலையில் ஏற்ற , இறக்கங்களை சந்திக்கும். இவற்றை சுழற்சி எனலாம். இவ்வாறு சுழலும் தன்மையுடைய நிறுவன பங்குகளை சுழலும் பங்குகள் எனக் கூறலாம். இந்த துறைகளை சேர்ந்த பங்குகளில் ஒரு பிரிவு ஏற்றம் அடையும்போது, மற்றொன்று சரியும் வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் உள்ள பிரிவுகள் இவை:
தானியங்கி ஊர்தி Auto Mobiles கேப்பிடல் குட்ஸ் Capital Goods சிமெண்ட் Cement நுகர்வோர் பொருட்கள் Consumer durables கட்டுமானம் Construction மின்சாரம் Electricity உரம் Fertilizers உலோகம் Non- Ferrous metals பெட்ரோலியம் & வாயு Oil N Gas சில்லறை Retail இரும்பு Steel சர்க்கரை Sugar
வளர்ச்சிப் பங்கு - GROWTH STOCK

ஒரு நிறுவனத்தின் வருமானம் வருடாவருடம் கூடிக்கொண்டே போகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள நிறுவன பங்குகளை வளர்ச்சி பங்குகள் எனலாம். இதனை கவர்ச்சிகரமான பங்கு எனவும் அழைப்பர்.

இந்த வளர்ச்சி நிறுவன பங்குகள், லாப பங்குகளை சாதாரணமாக வழங்குவதில்லை. அதற்கு மாறாக ஈட்டிய லாபத்தை மறு முதலீடு செய்து நிறுவன வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் தொழிற் நுட்ப நிறுவனங்களின் பங்குகளை வளர்ச்சி பங்குகள் என்றும் கூறுவர்.
நீல வர்ண பங்குகள் - BLUE-CHIP STOCKS

வியாபாரத்தில் நன்கு நிலைநாட்டப்பட்டு, பொருளாதாரத்தில் வலிமையுடன் எந்த ( நல்ல / கெட்ட) நிலையிலும் நல்ல லாபத்தை வழங்கக்கூடிய ஒரு கம்பெனியின் பங்குகள் - நீல வர்ண பங்குகள் எனப்படும். இவை சாதாரணமாக அபாயங்களுக்கு உள்ளாவதில்லை. இத்தகைய பங்குகளை மிக குறைந்த விலையில் கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.
நன்மதிப்பு பங்குகள் - VALUE STOCKS

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் , நல்ல லாபங்கள், விற்பனை, வருமானம் ஆகியன இருந்தும் பங்கு விலை குறைந்து காணப்படும் அத்தகைய பங்குகளை நன்மதிப்பு பங்குகள் எனப்படும்.

பங்குச்சந்தை எப்போதுமே திறமையாக செயல்பட முடியாது என்று கண்டறிந்த ஒரு தேர்ந்த முதலீட்டாளர், முகமன் மதிப்பிற்கும் குறைவாய் விற்கும் பங்குகளை வலை வீசி பிடிக்கிறார். இவை எல்லாம் மதிப்பு பங்குகள் தான்.
பைசா பங்குகள் - PENNY STOCKS

மிக மிக குறைந்த விலைக்கு விற்கும் பங்குகள். இவை பெரிய பங்கு சந்தைகளில் விற்காமல் வெளியே விற்பனையாகும். இவற்றை அவ்வளவு சீக்கிரம் பணமாக மாற்ற இயலாது. முறைப்படுத்தப்படாமல் ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படும் கம்பனிகளின் பங்குகள் இவற்றில் அடங்கும்.
ஆரம்ப பொது வெளியீடு IPO INITIAL PUBLIC OFFER

ஒரு தனியார் நிறுவனம் , முதன்முதலாக தனது பங்குகளை பொது மக்கள் வாங்குவதற்க்காக விற்பனைக்கு கொண்டு வருவதை ஆரம்ப பொது வெளியீடு எனப்படும். இப்படி விற்கப்பட்ட பங்குகளிலிருந்து திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு , அதன் தொழிலை அபிவிருத்தி செய்யவும், முதலீட்டை பெருக்கவும் பயன்படுத்துகிறது.

இப்பொது வெளியீட்டை கொண்டு வரும்முன், நிறுவனத்தினர் எனப்படும் காப்பீட்டாளர் நிறுவனத்துடன் இணைந்து, எந்த மாதிரியான பங்குகளை, எந்த விலையில் வெளியிடலாம் என்று கலந்து ஆலோசித்து பின்னரே, பங்குசந்தை விற்பனைக்கு கொன்றுவருவர்.

இப்பங்குகளில் முதலீட்டுவதை சற்று ஆபத்து நிறைந்ததாக கூறுவர். ஏனெனில், இதற்கு முன் சரித்திரம் போன்ற எந்த வரலாறும், அந்நிறுவனத்தின் செயல்பாடும் நாம் அறியாதது.
ஊக்க பங்குகள் - BONUS ISSUES

ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஏற்கனவே வைத்திருப்போருக்கு , அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், நிறுவனத்தின் முதலீட்டின் மதிப்பை உயர்த்தும் வகையில் வழங்கப்படும் இத்தகைய வெளியீடுகளை ஊக்க வெளியீடுகள் எனலாம். இதற்கு "முதலாக்கம்" என்றும் பெயர் உண்டு. ஒருவர் வைத்திருக்கும் பங்குகளின் அளவினை பொறுத்து ஊக்க பங்குகள் கிடைக்கும். உதாரணமாக ஒருவருக்கு அவர் வைத்திருக்கும் 5 பங்குகளுக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் ஊக்க பங்குகள் கிடைக்கும்.
உரிமை பங்குகள் - RIGHTS ISSUE

முதலில் உரிமை என்றால் என்ன? ஏற்கெனவே பங்குகள் வைத்திருபோர்க்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குறித்த விலையில் (தள்ளுபடி விலையில்) பங்குகள் வாங்கும் உரிமை முதலில் வழங்கப்படும். அத்தகைய உரிமையை புதிய பங்கு வெளியீட்டிற்கு பதிலாக பங்குதாரர்களுக்கு வழங்குவதால் இவை உரிமை பங்குகள் எனப்படும். இந்த உரிமைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. பங்கு வைத்திருப்போர் தம் உரிமையை மற்றவர்க்கும் விட்டுக்கொடுக்கலாம் / சந்தையிலும் விற்கலாம்.

இதனை "பங்கு வாங்கும் உரிமை" அல்லது "சந்தை உரிமை" என்றும் கூறலாம்.
பட்டியலில் உள்ள பங்குகள் - LISTED SECURITIES

செபியின் அனுமதியுடன் வர்த்தக பரிவர்த்தனைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட செக்கியூரிட்டீஸ் எனப்படும் பங்குகள் - பட்டியலிடப்பட்ட பங்குகள் ஆகும். ஒரு முறைப்படுத்தப்பட்ட மாற்றகத்தில் சேர்க்கப்பட்ட பட்டியலில் இடப்பட்ட பங்குகளை விற்று பணமாக்குதல் எளிது. மேலும் முதலீட்டாளர்கள் தங்களுக்கு தேவையான நுண்ணிய விவரங்களை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
பட்டியலில் நீக்கப்பட்ட பங்குகள் - DELISTED SECURITIES

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள் , வர்த்தக பரிவர்த்தனையில் குளறுபடி / மோசடி செய்தாலோ, சட்ட விதிமுறைகளை / நடைமுறைகளை மீறினாலோ, மிக குறைந்த அளவில் வர்த்தகம் நடைபெற்றாலோ, அதிக அளவில் உள்பரிவர்த்தனை நடைபெற்றாலோ அல்லது நிதி அறிக்கை மோசடி / வருட கணக்கில் குளறுபடி போன்ற செயல்களில் ஈடுபட்டால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.
முகமன் மதிப்பு - FACE VALUE

ஒரு நிறுவனம் அதன் பங்கு சான்றிதழில் கூறும் ரூபாயின் மதிப்பு முகமன் மதிப்பாகும். இதுவே அப்பங்கின் சாதாரண மதிப்பாகும்.

இதுவே கடன் பத்திரங்களாக இருப்பின், அந்த கடன் பத்திரம் முதிர்வடையும் போது கிடைக்கும் தொகையுடன் வட்டி தொகையும் கிடைக்கும். அந்த வட்டியின் சதவீதம் இவ்வளவு என்று பத்திர ஒப்பந்தம் ஏற்படுத்தும் போது, வழங்கும் சான்றிதழில் குறிப்பிடபட்டிருக்கும் .அதனையும் முக மதிப்பு என்பர்.
புத்தக மதிப்பு - BOOK VALUE
புத்தக மதிப்பு என்றால் என்ன? கீழ்கண்டவாறு வரையறுக்கலாம்.
ஒரு நிறுவன வரவு செலவு கணக்கில் ஆண்டு முடிவில் காட்டப்படும் புத்தக மதிப்பு. ஒரு சொத்தின் வாங்கிய மதிப்பிலிருந்து, தேய்மான மதிப்பை கழித்தால் வருவது புத்தக மதிப்பு. ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து வெளியில் கொடுக்க வேண்டிய கடனை செலுத்திய பின் மீதி வருவது புத்தக மதிப்பு

இப்புத்தக மதிப்பை வைத்து, ஒரு நிறுவனத்தின் தற்போதய சந்தை விலை அதிக விலையில் உள்ளதா? இல்லை குறைந்த விலையில் விற்பனையாகிறதா? என்பதை கணக்கிட முடியும்.

இப்புத்தக மதிப்பு , ஒரு நிறுவனத்தை விற்று காசாக்கினால் கிடைக்கும் பணத்தை முதலீட்டாளர்களுக்கு சமமாக பிரித்து வழங்கவும் பயன்படுகிறது.
உள்ளார்ந்த மதிப்பு - INTRINSIC VALUE

ஒரு ஒரு நிறுவனத்திற்கு அல்லது ஒரு சொத்துக்கு அசலாக ஒரு பண மதிப்பு இருக்கும். கூடவே அதற்கு கிடைக்கக்கூடிய நன்மதிப்புக்கும் ஒரு மதிப்பீடு உண்டு. இந்த இரண்டும் சேர்ந்த மதிப்பு தான் உள்ளார்ந்த மதிப்பாகும்.

இந்த மதிப்பு நடப்பில் இருக்கும் சந்தை மதிப்பு போலவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பங்கு வாங்கும் தருவாயில் உள்ளார்ந்த மதிப்பின்விலை, கிடைக்கும் விலையை விட அதிகமாக இருக்கலாம். விற்க வேண்டிய சூழ்நிலையில் விற்பனை விலையை விட உள்ளார்ந்த விலை அதிகமாக இருக்கலாம்.
சந்தை விலை - MARKET VALUE

நடப்பில் உள்ள சந்தையில் ஒரு பங்கு அல்லது, கடன் பத்திரம் ஆகியவற்றை வாங்கும், விற்கும் போது கிடைக்கும் விலையை சந்தை விலை என்று கொள்ளலாம்.

சந்தை விலை புத்தக மதிப்பு இரண்டும் ஒன்றாக இருக்க தேவையில்லை. ஏனெனில் சந்தை விலை பங்கு மதிப்பின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டது.

தேர்ந்த முதலீட்டாளர்கள், ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பை உற்று நோக்கும் பொழுது புத்தக மதிப்பிற்கும் கிழே குறைக்கப் பட்டுள்ளதா அல்லது பங்கின் சந்தை மதிப்பு போதுமானதாக இருக்கிறதா என்று பார்த்த பின்பு தான் முதலீட்டுகிறார்கள்.
பங்கு பிளவு - STOCK SPLIT

ஒரு தனியார் நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளின் முக மதிப்பை உயர்த்துவதால் / குறைப்பதால் , பங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் / குறையும். . இந்த நடவடிக்கைக்கு பங்கு பிளவு எனப்படும்.

பங்கு பிளவு என்பது பங்கின் முகமதிப்பை அதிகரிப்பது / குறைப்பது ஆகும். பங்குகளை துண்டுகளாக்கும் போது பங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். இப்படி செய்யும்போது பங்குகளின் மதிப்பு சீராகும். இதனால் அதிக விலையில் உள்ள ஒரு நிறுவன பங்குகளை பிரிக்கும் போது, சிறு முதலீட்டாளர்களும் சந்தையில் வாங்கி / விற்க எதுவாக இருக்கும். இந்த காரணத்தினால், முதல் அல்லது முதலாக்கம் மாறாமல் அப்படியே இருப்பதோடு, முதல் கரைய வாய்ப்பில்லை.
எதிர்மறை பங்கு பிளவு - REVERSE STOCK SPLIT

எதிர்மறை பங்கு பிளவு என்பது பங்கின் முக மதிப்பை குறைக்காமல், வெளியில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையை குறைப்பது ஆகும். உதாரணத்திற்கு இரண்டு 10 ரூபாய் பங்குகளை ஒரு 20 ரூபாய் பங்காக மாற்றுவது. ஒரு நிறுவன பங்கு சந்தைக்குள் தனது திணிப்பை (பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தவிர்ப்பதற்காக) வேண்டி இவ்வாறு செய்யலாம். இதன்மூலம் தனது கம்பெனி பங்கின் விலை உயர்ந்துள்ளதாக தோற்றமளிக்க வைக்க செய்யலாம்.
திரும்ப வாங்குதல் - BUY BACK

ஒரு கம்பெனி தான் வெளியிட்ட பங்குகளை, பொது சந்தையில் பங்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் முகமாக தானே திரும்ப வாங்கி கொள்ளும் செயல். வெளிச்சந்தையில் தங்களது பங்குகளின் மதிப்பை உயர்த்தும் நோக்கத்திலோ அல்லது நிறுவன பங்குதாரர்களில் எவரேனும் அந்நிறுவனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைப்பதை தடுக்க வகையில் தாங்கள் வெளியிட்ட பங்குகளை தாங்களே திருப்பி வாங்கி விடும்.

இவ்வாறு வாங்கி நிறுவனம் தனக்கு தானே முதலீடு செய்துகொள்கிறது. வெளிச்சந்தையில் பங்குகளின் எண்ணிக்கையை குறைப்பதனால், நிறுவனத்தின் வசம் உள்ள பங்கு விகிதம் அதிகரித்து விடுகிறது.
திரும்ப வாங்குதல் இரண்டு விதமாக செய்ய முடியும்.
ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் பங்குகள் ஒரு ஒப்பந்த முறையில் பொது மக்களிடம் இருந்து நடப்பு சந்தை விலையை விட உயர்த்தப்பட்ட விலையில் வாங்கி கொள்வது. நீண்ட கால அவகாசத்தில் பொதுச்சந்தையில் இருந்து மெது மெதுவாக பங்குகளை வாங்கி விடுவது.
ஆட்கொள்ளுதல் - ACQUISITION

ஒரு பெரிய நிறுவனம், மற்ற ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை வாங்கிவிடுவதன் மூலம், அதனை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதை ஆட் கொள்ளுதல் என்கிறோம்.

அதே போல, ஒரு பெரிய நிறுவனம் தம் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தனது கட்டுமான பணிகளை விரிவாக்காமல், தன்னையொற்றிய பணிகளை செய்து வரும் சிறு நிறுவனங்களை வாங்குவது கூட ஆட் கொள்ளுதல் ஆகும். இவ்வாறு மற்ற சிறு நிறுவனங்களை வாங்குவது, புதிதாக மற்றொரு கிளையை துவக்குவதை விட, நல்ல லாபத்தை தருவதாகும். இப்படி வாங்குவதை அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளை வாங்கிவிடுவதன் மூலமும் ஆட் கொள்ளலாம். அது அல்லாமல் மொத்தமாக பணத்தை கொடுத்து விடுவதன் மூலமும் ஆட் கொள்ளலாம்.

இவ்வித ஆட் கொள்ளுதலில், சந்தை மதிப்பை விட அதிக விலைகே வாங்க வேண்டும். உதாரணத்திற்கு ரூ. 100 சந்தை விலையாக இருப்பின் ரூ. 110 அல்லது மேல் கொடுத்து தான் வாங்க முடியும்.
ஒன்றிணைத்தல் - MERGER

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள், ஒருமித்த கருத்தில் இரு நிறுவனங்களையும் எப்படி இணைக்க முடியும் என்ற முடிவை எட்டி, எவருடைய கட்டுப்பாட்டில் ஒரு பெரிய நிறுவனமாக கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்து, அவ்விரு நிறுவனங்களின் பங்குகளை ஒன்றாக இணைப்பதை சேர்த்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்கிறோம்.

இப்படி இணைக்கும் போது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் பொது பங்குதாரர்களுக்கு, மற்ற நிறுவனங்களின் பங்குகளை பிரித்து வழங்குவார்கள். இப்படி இணைத்தலை செபி மற்றும் நிர்வாக சட்ட குழுவின் ஆலோசனையின் முடிவிலேயே செய்யப்படும்.
பிரித்தல் - DE – MERGER

ஒரு பெரும் நிறுவனம், அதன் நஷ்டங்களை சமாளிப்பதற்க்காகவோ அல்லது வரிச்சலுகைகள் கருதியோ தனது நிறுவனத்தை சிறு, சிறு பகுதிகளாக பல துணை நிறுவனங்களாக பிரிப்பதற்கு டி மெர்ஜர் அல்லது பிரித்தல் எனப்படும்.
லாப பங்கு - டிவிடென்ட் - DIVIDEND

ஒரு பெரிய நிறுவனம், தனது பங்குதாரர்களுக்கு தான் அந்த ஆண்டில் அடைந்த மொத்த லாபத்தில் ஒரு பகுதியை பிரித்து வழங்கும். அப்படி பிரித்து வழங்கப்படும் தொகையை லாப பங்கு என்பர்.

எல்லா நிறுவனங்களும் இப்படி லாப பங்கை வழங்குவதில்லை. ஒரு சில , வரும் லாபம் முழுவதையும் தன் வளர்ச்சிக்காக மறு முதலீடு செய்யும். லாப பங்கு பெரும்பாலும் பணமாகவே வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு.
இடைக்கால லாப பங்கு - INTERIM DIVIDEND

லாப பங்கு என்பது ஒரு நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்திற்கு முன்பாகவோ, அல்லது ஆண்டு லாப/நட்ட கணக்கு முடிவுகளை வெளியிடும் முன்னரே இடைப்பட்ட காலத்தில் அறிவிக்கப்படும் லாப பங்கீடு தொகை ஆகும்.
பகுப்பாய்வு இரண்டு வகைப்படும்.
அடிப்படை பகுப்பாய்வு - FUNDAMENTAL ANALYSIS தொழில் நுணுக்க பகுப்பாய்வு - TECHNICAL ANALYSIS அடிப்படை பகுப்பாய்வு - FUNDAMENTAL ANALYSIS

ஒரு நிறுவனத்தின் தற்போதய வியாபாரம், வரவு - செலவு , தன் செயல்பாடுகள், உற்பத்தியாகும் பொருட்கள், அதற்குண்டான சந்தை ஆகியன பற்றி இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப் படும்.
தொழில் நுணுக்க பகுப்பாய்வு - TECHNICAL ANALYSIS

ஒரு பங்கின் கடந்த கால விலைகளில்/விற்ற அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை அலசி ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் அல்லது மாதங்களில், அவற்றின் விலைகளின் திசை எப்படி நகருமேன்பதை அலசி ஆராய்வது தொழில் நுணுக்க பகுப்பாய்வு ஆகும்

இவ்வாறு நுணுக்கமாக ஆராய்தலில் சார்ட் எனப்படும் வரைபடம் வெகுவாக கையாளப்படும். பெரிய பங்கு சந்தை வர்த்தக நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்கள் ஆகியன இவ்விரண்டு வகை ஆய்வுகளையும் மேற்கொள்ளும். மேலும் இதற்கென ஒரு தனி குழுவையும் நியமித்திருக்கும்.

இந்த கட்டுரையில் நாம் பங்குகளைப் பற்றியும், அதன் விதங்களையும் , வெவ்வேறு துறைகளை பற்றியும் இங்கு விளக்கியுள்ளோம். நீங்கள் படித்து பயனடைவீர்கள் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்!!!

முதலீடு ஒரு அறிமுகம்

முதலீடு என்பது நாம் தேடிய வருமானத்தில் நம் அத்தியாவசிய செலவு போக எஞ்சிய பணத்தை இரட்டிப்பாக்க எண்ணி, எதிர் கால நலன் கருதி, லாபம் ஈட்டுவதற்க்காக ஒரு நிதி திட்டத்திலோ, அல்லது இடத்திலோ பணத்தை முடக்குவது ஆகும்.?
பணக்காரர்கள்!!! எப்படி பணம் சேர்த்தார்கள்? சேர்த்த பணத்தை எப்படி அதிகமாக்கினார்கள்? நமது ஓய்வு காலத்தை எப்படி சிரமமின்றி கழிப்பது? முதலீடு செய்ய வேண்டும். ஆனால் எப்படி செய்வது?
போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்து விட்டதா ? அப்படியானால் நீங்கள் முதலீடு செய்ய தயாராகி விட்டீர்கள்!!! என்று அர்த்தம்.
முதலீடு ஏன் செய்ய வேண்டும் ?
எளிதாக கூற வேண்டுமெனில்

உங்கள் பணம் /சொத்து மதிப்பு இரு மடங்காக பெருக வேண்டும். பண வீக்கம் போன்ற அபாயங்களில் இருந்து காக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் உங்கள் பணம் கணிசமாக கூடியிருக்க வேண்டும். மகளின் திருமணம், மகனின் உயர்கல்வி, ஓய்வு காலத்தில் சிரமமின்றி வாழ போதுமான நிதி, உல்லாச பயணம் ஆகியவற்றை சமாளிக்க, எதிர் காலத்தில் கஷ்டப் படாமலிருக்க.

போன்ற இந்த தேவைகளுக்காக பங்குகள், பாண்டுகள், பரஸ்பர நிதி திட்டங்கள், தங்கம், மனை, அந்நிய செலவாணி ஆகிய எதில் வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.

இதல்லாமல் அவ்வப்போதைய தேவைக்கு கைவசமும் பணம் தேவை. முறையாக முதலீடு செய்தால் உங்கள் பணம் பெருகுவதை பார்க்க உங்களுக்கே மலைப்பாக இருக்கும்.

ஒரு வேலையில் இருந்துகொண்டோ அல்லது ஒரு தொழில் செய்தோ பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதில்லை. வேலையிலிருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரம் தான் வேலை செய்ய முடியும். தொழிலிலும் குறிப்பிட்ட உற்பத்தி தான் செய்ய இயலும். எனவே, அதற்குரிய வருமானமே கிடைக்கும். வேலையே செய்துகொண்டிருந்தால் சம்பாதித்த பணத்தை அனுபவிப்பது தான் எப்போது ? நீங்கள் பல அவதாரமெடுத்து ஒரே நேரத்தில் சம்பாதிப்பதும் முடியாத காரியம். ஆனால் உங்கள் பணம் உங்களுக்காக அந்த வேலையை செய்யும். நீங்கள் உங்கள் வேலை மற்றும் வேறு எந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பணம் அதன் வேலையை செய்து மேன்மேலும் பணம் ஈட்டித்தரும் காரியம் செய்துகொண்டிருக்கும். இவ்வாறு உங்களது சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கிறது.
சுய தொழில் தொடங்குதல், பங்குகள், பாண்டுகள், பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் பணம் போடுதல் , அசையா சொத்துக்கள் வாங்கி விற்றல் ஆகிய எதுவும் முதலீடு தான். இவற்றால் லாபமும் வரலாம் நஷ்டமும் ஏற்படலாம். ஆனால் எதில் பணம் முடக்கினாலும் நமது குறிக்கோள் அதிக பணம் சம்பாதிப்பதுதான்.

ஒவ்வொருவருக்கும் பணம் மிகவும் அத்யாவசியம். தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ளவும், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே தேவையை முன்னிட்டு முதலீடு செய்தல் மிக அவசியமாகிறது. 30 அல்லது 35 ஆண்டு காலம் உழைத்த பின்னர் பென்ஷன் வாங்கி நிம்மதியாக காலம் கழிப்பது என்பது மிகச்சிலருக்கே சாத்தியமாகிறது. எல்லாருக்கும் இது சாத்தியமில்லை. ஆக மற்ற யாவரும் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளவும், ஓய்வு காலத்தை சிரமமின்றி கழிக்கவும் முதலீடு என்ற தாரக மந்திரத்தை கடைப்பிடித்தே ஆக வேண்டும். ஆகவே வயதான காலத்தில் சிரமமின்றி வாழ, வாலிப காலத்தில் முதலீடு செய்தல் உத்தமமானது.

பொருளாதாரம் கற்றுக்கொள்வது ஒன்றும் கடினமான காரியமில்லை. பயப்படவும் தேவையில்லை . ஒரு சில உட்கருத்துக்களையும், சில பல வார்த்தை ஜாலங்களையும் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். வங்கிகள் .வல்லுனர்கள் போன்றோரின் ஆலோசனைகளையும் பெற வேண்டிய அவசியமில்லை. முயற்சிக்கு மீறின பலன் கிடைப்பது உறுதி. அதற்காக உடனடியாக பணக்காராகி விட முடியாது. கொஞ்சம் பொறுமை, அதிக உழைப்பு ஆகியன வேண்டும்.

நீங்கள் எத்தரப்பினராக இருந்தாலும் சரி. கால ஓட்டம் உங்களுக்கு எப்படி பணம் ஈட்டித்தருகிறது என்பதை இந்த ஆரம்ப பாடம் சொல்லித்தருகிறது .
முதலீட்டின் குறிக்கோள் குறிக்கோள் அதிக பணம் சம்பாதிப்பதுதான்.

ஒவ்வொரு முதலீட்டாளார்களுக்கும் முதலீட்டுவதற்கு பல காரணத்தை வைத்திருப்பார்கள். இதை அவர்களின் குறிக்கோளாகவும் கூறலாம். அவைகளுள் ஒரு சில.
பாதுகாப்பு, கையிலிருக்கும் பணம் இரு மடங்காக வேண்டும், லாபமும் வேண்டும், எதிர்கால அவசர தேவைக்கும், வயோதிக கால தேவைக்காகவும், குடும்ப நலன்களுக்காகவும், இன்னும் பிற காரணங்களுக்காகவும், மகளின் திருமணம்/ மகனின் உயர்கல்வி.
முதலீட்டின் பலன்

பள்ளி பருவத்தில் தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி பற்றி படித்திருப்போம். அதில் வரும் கூட்டு வட்டி என்பது ஒரு அருமையான கண்டுபிடிப்பாகும் . இது நமது பணத்தை ஒரு குறிப்பிட்ட நீண்ட கால அவகாசத்தில் பன்மடங்காக்கி தரும் அற்புதமான கருவியாகும். இவ்வாறு பன்மடங்காக உயர்த்த கூட்டு வட்டிக்கு இரண்டு உபகரணங்கள் தேவை :-

(1) நீடித்த கால அவகாசம் (2) மறு முதலீடு.

மறு முதலீடு செய்ய, செய்ய மற்றும் கால அவகாசத்தை நீட்டிக்க, நீட்டிக்க நமது முதலீடு மிக வேகமான வளர்ச்சி அடையும். இதனை புரிந்துகொள்ள ஒரு உதாரணம் கொண்டு விளக்குவோம்.

6 சதவீத வட்டிக்கு ஒருவர் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருட முடிவில் 10,600 ரூபாய் கிடைக்கும் . அதனை அவர் மீண்டும் முதலீடு செய்தால் அடுத்த அண்டு இறுதியில் 11,236 ரூபாயாக உயரும் . எப்படி ? .......
அசல் ....................... . ……………ரூ 10,000 முதல் ஆண்டு வட்டி ...... . ……..ரூ .600 புதிய மறுமுதலீடு …………... …ரூ 10,600 இரண்டாம் ஆண்டு வட்டி … ரூ 600 முதலாண்டு வட்டிக்குவட்டி …ரூ 36 ஆக மொத்தம் . . . . . . . …………ரூ 11,236 இரண்டாம் ஆண்டு இறுதியில் கிடைக்கும் வட்டி 636 ரூபாய் ....... மீண்டும் மூன்றாம் ஆண்டு முடிவில் முதலீடு ரூ 11910.16 ஆகிவிடும் மூன்றாம் ஆண்டு வட்டி ரூ 674.16. ....... வட்டிக்குவட்டி ரூ 38.16 அதிகம் . ...... இந்த ரூ 36 மற்றும் ரூ 38.16 ஆகியவை சிறிய தொகையாக தோன்றலாம். ஆனால், காலம் அதிகமாக ஆக பெருந்தொகையாக உருவெடுக்கும் .

இவ்வாறு வட்டிக்கு வட்டி, அந்த வட்டிக்கு வட்டி என அசலும் வட்டியும் சேர்ந்து ஒரு கணிசமான நீண்டகால அவகாசத்தில் பெரும் தொகையாக கிடைக்கும்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. ஆகவே இப்போதே முதலீடு செய்வோம் .
உடனடியாக ஏன் முதலீடு செய்ய வேண்டும்

காலம் தாழ்த்தி முதலீடு செய்வதால் லாப பங்கின் அளவில் குறைவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. கூட்டுவட்டியில் கிடைக்கும் அனுகூலத்தை எப்போதும் நம்புங்கள். நீண்டகால முதலீடும், மறுமுதலீடும் கூட்டு வட்டியின் அனுகூலத்தால் உங்களுக்கு மலை போல் வருமானம் அள்ளித்தரும் என்ற உத்தரவாதம் உண்டு .

அதனால்தான் நீண்டகால முதலீடாக பங்குகள் சிபாரிசு செய்யப்படுகின்றன . எப்போதுமே வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், பங்கு விலைகளில் அவ்வப்போது நிகழும் ஏற்றத்தாழ்வுகளை ஓரம் கட்டிவிடும். ஆகவேதான் மீண்டும், மீண்டும் நீண்டகால முதலீடு செய்ய சிபாரிசு செய்கிறோம்.
உதாரணம்

இரண்டு ஒரே வயதுடைய நண்பர்கள் மாலா, ராதா ஆகியோர் முதலீடு செய்கிறார்கள் என்று கொள்வோம் . மாலா தனது 25 ஆவது வயதில் ரூ15,000 ஐ 5.5 சதவீத கூட்டுவட்டிக்கு முதலீடு செய்கிறார். இவர் தனது 50 ஆவது வயதில் ரூ57,200.29 பெறுவார்.

ஆனால் ராதா 10 ஆண்டு காலம் கடத்திய பின், தனது 35 ஆவது வயதில் அதே ரூ15,000 ஐ அதே 5.5. சதா வட்டிக்கு முதலீடு செய்கிறார். இவருக்கு 50 ஆவது வயதில் கிடைக்கும் தொகை ரூ33487.15 மட்டுமே. ஆக மாலா, ராதாவை விட ரூ23,713.74 அதிகமாக பெறுகிறார். காரணம் ? மாலா காலம் தாழ்த்தாமல் சேமிப்பை தொடங்கி அதிக காலம் தனது சேமிப்பை தொடர்ந்ததினால் 42,200.89 ரூபாய் கிடைத்தது. ஆனால் ராதா காலம் தாழ்த்தி சேமிக்க தொடங்கியதால் ரூ18,487.15 மட்டுமே கிடைத்தது. இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்து சேமித்தால் மாலாவுக்கு ரூ1,00,000 கிடைக்கும். ஆனால் ராதாவுக்கோ ரூ60,000 மட்டுமே கிடைக்கும். ரூ40,000. …..எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்!!!

முதலீட்டில் கூட்டு வட்டி முதலீடு என்பது பணத்தின் மதிப்பை அதிகரித்துக் கொண்டே போகிறது. உங்களுடைய வருமானத்தையும் அதிகரிக்கிறது. ஆகவே முதலீட்டு பணத்தை கூடிய மட்டும் எக்காரணமும் கொண்டு தொடாமல் இருக்க வேண்டும்.
உதாரணம்

20 வயதாகும் ஒருவரிடம் அதிக மனவலிமையும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் எண்ணம் அதிகம் காணப்படும். இவர் முதலீட்டில் நஷ்டம் அடைந்தாலும், அதனை ஈடுகட்ட போதிய வயதும், நீண்ட காலமும் உள்ளது. வயது ஏறஏற இவர்களுக்கு அனுபவம் கைகொடுக்கும். மேலும் இவர், சிறு வயது என்பதால் கையில் உள்ள பணம் அனைத்தையும் போட வேண்டிய அவசிய மில்லை. ஏனென்றால் கூட்டுவட்டி என்னும் பணத்தை இரட்டிப்பாக்கும் சக்தி நிதி திட்டங்களில் உள்ளதால், இவர் சிறு முதலீட்டினாலே போதுமானதாக இருக்கும்.

ஆனால் 35 வயதுள்ள நபர் தனக்கு போதிய வயதும் அவகாசமும் இருப்பதால் தன்னிடம் உள்ள உபரி பணத்தை வைத்து தொழில் முனைய யுக்திகளை கையாள நினைப்பார். ஏனென்றால் முதலீட்டில் இருந்து வரும் வருமானம் தான் அவருக்கு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதில்லை. இவருக்கு வாழ்க்கை நடத்த தேவையான வருமானம், அவர் செல்லும் வேலையிலிருந்து கிடைக்கும். எனவே , இவரிடம் அதிக மனவலிமை காணப்படும். இதனால் இவர் ஆபத்து நிறைந்த புதிய தொழிற் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஒரு 75 வயது மூதாட்டிக்கு தன் பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என மட்டுமே நினைப்பார். அவர் புதிய தொழிற் தொடங்கவோ / முதலீடு செய்யவோ விரும்ப மாட்டார். தான் ஏற்கனவே போட்டிருந்த ஓய்வுகால வைப்புநிதியை கொண்டு, வாழ்க்கையை நடத்தி வருவார். எனவே இவருக்கு புதிய முதலீடு செய்ய வயதோ, மனவலிமையோ கிடையாது .

ஓய்வு பெரும் நிலையில் இருக்கும் ஒருவர் தனது சேமிப்பை பாதுகாக்கவோ அல்லது அதிகரிக்கவோ நினைப்பார். ஏனென்றால் வயதான காலத்தில் இருப்பதால், அவர்கள் உடல் நிலையில் ஏதேனும் சுகவீனம் ஏற்பட்டால் அவருக்கு பணத்தேவை அடிக்கடி வரலாம். ஆகவே ஏறி இறங்கும் நிலையற்ற தன்மை உடைய நிதி திட்டங்களில் பணத்தை முடுக்கி நஷ்டத்தை வரவழைத்துக் கொள்ள மாட்டார்.

எல்லா முதலீட்டாளர்களும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டாலும், ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒவ்வொருவரின் தேவையும் வித்தியாசமானது. ஆகவே அவரவர் தேவைக்கேற்ப முதலீட்டு யுக்தி அமைய வேண்டும். காலத்தை விரையமாக்காமல் கூடிய மட்டும் விரைவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் .
உதாரணம்

ஒரு பெரும் பணக்காரர் தன்னிடமுள்ள உபரி பணத்தை பந்தயப்பனம் கட்டுவது போல் ஒரு அசையா சொத்து வாங்கி விற்று லாபம் பெற நினைத்து முடக்கலாம். முதலீட்டில் இருந்து வரும் வருமானம் தான் அவருக்கு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதில்லை. இது ஒரு விதமான யுக்தி, இவர் அதிக லாபம் எதிர்பார்க்க மாட்டார். குறைந்த அளவே என்றாலும் அவருக்கு திருப்தி தான்.

ஆனால் ஒரு புதுமண தம்பதி தங்கள் வாழ்க்கை குறிக்கோளாக ஒரு வீடு வாங்க திட்டமிட்டு கையில் உள்ள பணத்தை கொண்டு குறுகிய காலத்தில் லாபம் சம்பாத்திக்கும் எண்ணத்தில் அசையா சொத்தில் முதலீடு செய்யக் கூடாது . ஏனென்றால் இவர்களுக்கு அவசர தேவைக்கு என்று வேறு பணம் இல்லை. இப்பொழுது வாங்கிய சொத்தை விற்க முயன்றால் அவருக்கு நஷ்டமோ / மிக குறைந்த லாபமோ கிட்டலாம். குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் இந்த யுக்தி அபாயகரமானது.

உங்களின் சுபாவமென்ன? பரபரப்பான நகரத்தில் வசிக்க, வசதியாக வாழ விரும்புபவரா? அல்லது அமைதியான ஒரு கிராமத்தில் தனிமையையும் எளிமையையும் விரும்புபவரா? செயல்களை மிக வேகமாக செய்பவரா? அல்லது மெதுவாக செய்பவரா? முடிந்த வரையில் உங்களிடம் உள்ள சேமிப்பு பணத்தில் , 25 % அல்லது 50 % சதவிகித பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். மொத்த சேமிப்பு பணம் முழுவதையும் நிதி திட்டங்களில் போடாதீர்கள்!!!

எப்பேர்பட்டவராயினும் , முதலீட்டுக்கு வரும் போது, அதிகமான முதலீடு செய்து விட்டு தூக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. ஆக மொத்தத்தில் முதலீடு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைக்கேற்ப அமைவது . அவரரவர் அபாயத்தை எதிர்கொள்ளும் அல்லது தாங்கி நிற்கும் வலிமையை பொறுத்தது. முரண்பாடுகள் இல்லாத விஷயம் எதுவுமில்லை .

பொருளாதாரம் ஒரு சமூக அறிவியல் பாடம். கணிதத்தில் வருவது போல ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று இதில் நிலைநாட்ட முடியாது. எந்த பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயத்தையும் இப்பிடித்தான் நடக்கும் என்று ஆணித்தரமாக கூறமுடியாது. மனிதமனம் அடிக்கடி மாறக்கூடிய தன்மை உடையது. உணர்ச்சிகளுக்கு அடிமையாவது, சூழ் நிலைக் கைதியாவது இதன் பலவீனம். இதன் காரணமாக எப்பேர்ப்பட்ட வல்லுனரும் பங்குசந்தை பற்றிய தனது அபிப்பிராயத்தை மட்டுமே தர முடியும். மிகச்சரியான முடிவையோ அல்லது வழியையோ சொல்லமுடியாது .
சாதாரணமாக முதலீட்டாளர்கள் செயல்படும் விதம் பற்றிய உதாரணம் இங்கு பார்போம்.

ராமு புதிய சிறிய வளர்ந்து வரும் கம்பெனிகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்கிறார். . இவற்றில் முதலீடு செய்வதால் குறுகிய காலத்தில் பெரியதாக லாபம் கிடைக்கப்போவதில்லை என்றாலும் நாடிச்செல்கிறார். ஏனென்றால் இவை புதிய தொழில் நுணுக்கங்களை உபயோகித்து வளரத் துடிக்கின்றன எனவும், ஒரு நீண்டகால சேமிப்பாகவும், நல்ல லாபம் ஈட்டி தரும் என்று எண்ணி முதலீடு செய்கிறார்.

ஆனால் சோமு ஏற்கெனவே வளர்ந்து தொடர்ச்சியாக லாபம் தரும் கம்பெனிகளில் முதலீடு செய்கிறார். இவை அதிக விலையில் கிடைத்தாலும், விரைவில் பண மதிப்பு உயரலாம் எனவும், குறுகிய காலத்தில் இத்தகைய பங்குகள் நல்ல லாபம் ஈட்டி தரும் என்றெண்ணி முதலீடு செய்கிறார் .

ராமு வளர்ச்சி பாதையை நோக்குகிறார். சோமு பணத்தின் மதிப்பு உயர்வதை எதிர்பார்க்கிறார். வேறு வேறு யுக்தியானாலும் அவற்றுக்கான பலன்கள், அவதிகள் உள்ளடங்கி உள்ளன .

இதைப்போலவே நீங்களும் பல்முனைப் பாதைகளில் உங்களுக்கு தோதான யுக்திகளை கையாண்டு நீங்கள் எந்த வகை முதலீட்டாளர் என்று தெரிந்து கொள்ளலாம் .
முதலீடுகளின் வகைகள்

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஏராளமான வழிகள் உள்ளன . கீழ்கண்ட முதலீட்டு வகைகளை நன்கு கற்றறிந்து , உங்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டத்தை தேர்ந்த்தேடுங்கள் .
கடன் பத்திரங்கள் - பாண்டுகள் - BONDS

அரசு அல்லது தனியார் கம்பெனிகள் முதலீட்டை பெருக்க வெளியிடும் கடன் பத்திரங்கள் தான் பாண்டுகள் ( Bonds) எனப்படும் . ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்ததும் நிச்சயமான உத்திரவாதமுள்ள ஒரு வட்டிதொகை அசலுடன் சேர்த்து கிடைக்கும். கிடைக்கும் வட்டிதொகை குறைவானது தான் என்றாலும் பாண்டுகளில் போடும் பணம் பாதுகாப்பானது. அபாயங்களுக்கு ஆட்படாதது . ஆகவே அதில் வருமானம் குறைவு தான்.
பங்குகள் - STOCKS OR SHARES

பங்குகளில் முதலீடு செய்வதால் அந்தந்த நிறுவனங்களில் நீங்கள் பங்குதாரராகிறீர்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிறுவனங்கள் அடையும் லாபத்தில் உங்களுக்கு டிவிடென்ட் எனப்படும் லாபப்பங்கு கிடைக்கும். ஆனால் இது ஒரே மாதிரியாக இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளுடன், நிறுவனங்களுக்கு நிறுவனம் வேறுபடும். இதல்லாமல் நிறுவன பங்குகளின் மதிப்பும் நாளுக்கு நாள் மாறும் தன்மை உடையது. சில சமயம் வாங்கிய விலையை காட்டிலும் பன்மடங்கு உயர்ந்து இருக்கும்போது விற்று விட்டால் மிக அதிக லாபம் கிடைக்கும். சில சமயம் வாங்கிய விலையை காட்டிலும் கீழே சென்று விடுவதால் நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பும் உள்ளது. பாண்டுகளை போல் நிலையான உத்தரவாதமான லாப தொகை கிடைக்காது .

பங்குகளில் நல்ல லாபம் பெரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதே சமயம் ஆபத்தை மனதில் எண்ணி செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
பரஸ்பர நிதிகள் - MUTUAL FUNDS

சில பல பங்குகளின் ஒட்டுமொத்த உருவம் தான் பரஸ்பர நிதி என்பது. நல்ல நிர்வாக திறமை, பழுத்த அனுபவம், பொருளாதாரத்தில் தேர்ச்சி மிக்க ஒரு மேலாளரால், இந்நிதி திட்டங்கள் கையாளப் படுகின்றன். நல்ல ஆளுமை, தேர்ச்சி பெற்றவர் வசம் நீங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது, அவர்கள் அப்பணத்தை, எதில் லாபம் சீக்கிரம் கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து, முதலீடு செய்து லாபம் ஈட்டி பகிர்ந்து கொடுப்பார். உங்களுக்கு எந்த தலைவலியும் இல்லை. முன் அனுபவம் எதுவும் தேவையுமில்லை.

நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டியது ஒன்று மட்டும் தான். அது என்னவென்றால், பரஸ்பர நிதி நிறுவனத்தின் முந்தய வரலாறு மற்றும் அதன் நிர்வாக தலைமை, அதன் நிர்வாக மேலாளர்களின் திறன், அவர்களின் நிதி திட்டங்களின் நிலவரங்கள், மற்றும் பல அம்சங்களையும் நன் கு தெரிந்து , பின்னர் முதலீட்டு திட்டத்தில் சேர வேண்டும்.

இந்த பங்கு, கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களை தவிர தங்கம், மனை, அந்நிய செலவாணி என வேறு சில முதலீட்டு சாதனங்களும் உள்ளன.

இனி எப்போது முதலீடு செய்ய வேண்டும் என பார்ப்போம் .

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” !!! என்பது பழமொழி . ஆகவே இப்போதே முதலீடு செய்க . காலம் கடத்தினால் நாம் ஏற்கெனவே விவரித்த கூட்டு வட்டியின் பலாபலன் கிடைக்காது .

இத்துறையில் பணிபுரியும் முன் அனுபவமுள்ளவர்களால் அடிக்கடி கூறப்படும் பொன்மொழிகள்
முதலீடு செய்க தொடர்ந்து முதலீடு செய்க . நீண்ட காலத்திற்கு முதலீடு செய்க .(கண்டிப்பாக குறுகிய கால முதலீடு வேண்டாம் )
எவ்வளவு முதலீடு செய்யலாம்
இவ்வளவுதான் என்றில்லை, எவ்வளவு வேண்டுமானாலும். நம் சேமிப்பின் ஒரு பகுதியை, மாதம் இவ்வளவு என்று , முடிந்த அளவு முதலீட்டலாம் மொத்தமாகத் தான் முதலீட்ட வேண்டும். என்றில்லை.. சிறு துளி பெரு வெள்ளம். உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. முதலீட்டு பணத்தின் பண மதிப்பு குறைந்தாலும், அதை தாங்கி கொள்ளும் மன வலிமைக்கு தக்கவாறு முதலீட்டலாம்.

இப்பாடத்தில் நாம் முதலீட்டின் அவசியம் பற்றியும், அதன் வகைகளையும் தெளிவாக விளக்கியுள்ளோம். அல்லவா? அதற்கு தான் சொல்கிறோம். சும்மா பார்த்தோம். படித்தோம் என்றல்லாமல் முதலீட்டி பயனடையுங்கள் என்பதை தான் நாங்கள் இங்கு வலியுறுத்துகிறோம்.
வாழ்த்துக்கள்!!!

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை

இன்றைய கால கட்டத்தில் , பணத்தின் தேவை நாளுக்கு, நாள் அதிகமாகி கொண்டேயிருக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. நாளுக்கு, நாள் மருந்து பொருட்களின் விலையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடு,கிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, நாம் கடன்பத்திரங்களில், பரஸ்பர நிதிகளில் மற்றும் பல நிதி திட்டங்களில் முதலீட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றாது. அதில் பணத்திற்கு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இருந்தாலும், நம் முதலீட்டின் மூலம் கிட்டும் வருவாய் மிக குறைவு.

இதையே பங்குகளில் முதலீட்டினால் வருவாய் அதிகம் கிட்டும். ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், ஒரு நீண்டகால நோக்கில் பங்குகளில் முதலீட்டினால், ஆபத்தின் அளவு அறவே இல்லை என்றும் கூறலாம். மேலும் அது தரும் லாப பங்குதொகை மற்றும் வெகுமதி பங்குகளால், நம் முதலீட்டின் வருவாய் அதிகரித்து கொண்டே இருக்கும்.

நாம் செய்கிற வேலை அதன் பாட்டுக்கு ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும், நாம் பங்குகளில் முதலீட்ட மறந்து விடக் கூடாது. ஏனென்றால்1980- 90 களில் Infosys நிறுவன துவக்க வெளியீட்டின் போது ரூ.10. இன்றோ சில ஆயிரங்களுக்கும் மேல். இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நாம் இன்று செய்யும் முதலீட்டின் அருமையை, சில ஆண்டுகளின் பின்னால் அதன் பலனை உணரலாம். மேலும் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் , அந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிறோம். பங்குகளை பல ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பதனால், நமக்கு லாப பங்குதொகை கிடைப்பததோடு அல்லாமல் சில சமயங்களில் நிறுவனம் வெகுமதி பங்குகளையும் கொடுக்கும். இதனால் பங்குகளின் எண்ணிக்கையும் கூடும். அதிக வருவாயும் கிடைக்கும்.

ஆகவே பங்கு வர்த்தகம் பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள். பணக்காரர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை மாறிவிட்டது.

நிறைய பேர் பங்கு வர்த்தகம் செய்வதன் உடனடியாக பணம் பார்த்துவிட நினைக்கிறார்கள். அது சாத்தியப்பட வேண்டுமானால் பங்கு வர்த்தகம் பற்றி நன்றாக அறிந்து கொள்ளல் அவசியம். கற்று , கேட்டறிந்து , செயல்பட்டால் வெற்றி நிச்சயம் .
பங்குகளை வாங்குவது எப்படி ?
பங்குகள், இரண்டு வழிகள் மூலம் வாங்கலாம்.

துவக்க பொது வெளியீட்டின் போது, வைப்பக பங்கேற்போர் வாயிலாக
இங்கு நாம் எப்படி வைப்பக பங்கேற்போர் வாயிலாக பங்குகளை வாங்க முடியும் என்பதை காணலாம்.
பங்கு வைப்பக பங்கேற்போர் DP - DEPOSITORY PARTICIPANTS

இது ஒரு வங்கி போல செயல்படும் அமைப்பு. பங்கு வைப்பகத்தின் பிரதிநிதியாக செயல்படுபவர்கள். வங்கிகளில் கணக்கு இருப்பது போல முதலீட்டாளர்களின் பங்கு, பத்திரங்கள் போன்றவற்றை உருவமற்ற மின்னணு வடிவில் (டி மேட்) கணிப்பொறியில் வைத்திருப்பார்கள். காகிதங்களில் உள்ள பங்கு பத்திரங்களை மின்னணு முறைக்கு மாற்றியும் தருவார்கள். பங்கு வர்த்தக சேவையும் அளிப்பார்கள். பங்கு வைப்பக பங்கேற்போர் ஒரு பாதுகாப்பாளர் மட்டும் அல்ல. ஒருபடி மேலாக அவர்கள் ஒருவரின் பங்குகளை மற்றவருக்கு மாற்றி அளிக்க சட்டபூர்வ அனுமதி பெற்றவர்கள். தினசரி வர்த்தகத்திற்க்காக இவர்களிடம் அதி நவீன தொழிற் நுட்பமுடைய இணைய தள சேவை வசதியும் உண்டு. இவற்றை பயன்படுத்த அவர்களுக்கு வருட கட்டணம் செலுத்தினால், நம்மை வர்த்தகம் செய்ய அனுமதிப்பார்கள்.
பங்கு வைப்பக பங்கேற்போர் சேவைகள்
டிமாட் செய்வது .அதாவது பங்குகள் காகித வடிவில் இல்லாமல் டிஜிடல் வடிவில் வைத்துக்கொள்வது ரிமாட் செய்வது .மீண்டும் காகித வடிவில் கொண்டு வருவது. பங்குகளை மாற்றிவிடுவது. பங்கு முதலீட்டாளர்களின் விருப்ப படி, மற்றவருக்கு பங்குகளை மாற்ற உதவுவார்கள். தினசரி பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டால் அன்றைய கணக்குகளை தீர்ப்பது. பங்குகளின் மேல் கடன் முதலானவற்றுக்கு டிமாட் வடிவ பங்குகளை அடமானம் வைக்க உதவுவது உரிமைப் பங்கு / லாப பங்கு / உபரி பங்குகளை உடனடியாக நம் கணக்கிற்கு தருவிப்பது மோசடி / குளறுபடி ஏற்படாமல் பாதுக்காப்பது இன்னும் பல .
பங்கு வைப்பக பங்கேற்போர் (DP) யினால் கிடைக்கும் நன்மைகள்
வாங்கும் பங்குகள் தவறாமல், உரியவரிடம் போய் சேரும். பங்குகள் இடம் மாறுவது தவிர்க்கப்படும். பங்குகளை அவரவர்க்கு உடனடியாக மாற்றமுடியும் பத்திரப்பதிவு தொகை தவிர்க்கப்படும் ...பணம் மிச்சம் தானே பத்திரம் தொலைந்து போதல்/ காணாமல் போதல்/ கிழிந்து- எரிந்துபோதல் / தவறான உபயோகத்திற்கு உள்ளாதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும் .

பங்கு வைப்பக பங்கேற்போர் (DP) எனப்படும் இவர்கள் NSDL எனும் தேசிய பாதுகாப்பு வைப்பகம் , மற்றும் CSDL எனும் மத்திய வைப்பக சேவை -யகத்திற்க்கும், முதலீடு செய்பவர்க்கும் இடையே பிரதிநிதியாக செயல்படுபவர்கள் .

பங்கு வைப்பகம் விதிக்கும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வைப்பக பங்கேற்போர் நடப்பார்கள். முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய மிக உதவியாக இருப்பார்கள்.

SEBI - Securities and Exchange Board of India எனப்படும் இந்திய பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பு வாரியம் அமைப்புடன் இவர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பார்கள் . செபியுடன் பதிவு செய்து சான்றிதழ் பெற்று பங்கு பரிவர்த்தனை சேவைகளை அளிப்பார்கள். இவற்றிக்கு அடையாள் எண் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வெண்களை அவர்களின் அலுவலக அறைகளில் காணலாம்.
இந்தியாவில் இரண்டு பங்கு வைப்பக அமைப்புகள் உள்ளன
தேசிய பாதுகாப்பு வைப்பகம் - National Securities Depository Ltd - NSDL மத்திய சேவையக வைப்பகம் - Central Services Depository Ltd – CSDL

பங்கு வைப்பக பங்கேற்போரிடம் கணக்கு ஆரம்பிக்க நமக்கு நிரந்தர கணக்கு எண்( PAN Card) நமது பெயரில் இருக்க வேண்டும். இந்த எண்ணையும், நமது வங்கியின் கணக்கு எண்ணையும் இவர்களிடம் அளித்தால், நமக்கு பங்கு வர்த்தகம் செய்ய ஒரு அடையாள எண்ணை நமக்கு வழங்குவார்கள். பின்னர் வைப்பக பங்கேற்போரிடம் , நமது வங்கி காசோலையை கொடுத்து பங்குகளை வாங்கலாம், விற்கலாம்.
இங்கு நிரந்தர கணக்கு எண்ணைப் பற்றி பார்ப்போம்.
நிரந்தர கணக்கு எண் அட்டை- PAN CARD - PERMANENT ACCOUNT NUMBER
இது வருமானவரித்துறையினரால் கொடுக்கப்படுவது வரி கட்ட வேண்டியவர்களுக்கு கொடுக்கப்படும் அடையாள என் . தற்போது இந்த எண் ஏராளமான இடங்களில் கேட்கப்படுகிறது வங்கி கணக்கு துவங்க போன் இணைப்பு வாங்க சம்பளம், தொழில்முறை சேவைகளுக்கான கட்டணம் வாங்க என்று பல விஷயங்களுக்கு தேவை படுகிறது.

இது தேசிய மட்டத்தில் கொடுக்கப்படுவதால் நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் உபயோகப்படுத்தலாம். அடையாள அட்டையாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நிரந்தர கணக்கு எண் அட்டை கிடைக்குமிடங்கள்
வருமான வரித்துறை அலுவலகம் பங்கு வைப்பக சேவை அமைப்பு UTI நிதிசேவை அமைப்பு
நிரந்தர கணக்கு எண் அட்டை பெறுவது எப்படி
நிரந்தர கணக்கு எண்- க்கான படிவத்துடன் கீழ்கண்டவைகளில் சிலவற்றை இணைக்க வேண்டும்
பாஸ்போர்ட் ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பள்ளி சான்றிதழ் கல்லூரி பட்டம் கடன் அட்டை வங்கி கணக்கு புத்தகம் குடும்ப அட்டை தண்ணீர் வரி கட்டிய ரசீது சொத்து வரி ரசீது

இவை அனைத்தில் ஏதேனும் இரண்டு நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சேர்த்து ரூ 65 பணத்துடன் அருகாமையில் உள்ள நிரந்தர கணக்கு எண்- க்கான சேவை மையத்தில் சேர்ப்பித்தால் ஒரு மாதத்திற்குள், உங்களின் புகைப்படம் ஒட்டிய நிரந்தர கணக்கு எண் அட்டை உங்கள் வீடு தேடி வந்து சேரும் .

நிரந்தர கணக்கு எண் அட்டை வாங்கியவர் அனைவரும் வரி கட்ட வேண்டுமென்பதில்லை. ஆனால் வரி கட்டுமளவிற்கு வருமானம் இருப்பவர் கண்டிப்பாக வரி கட்ட வேண்டும்.
டி மேட் ( DEMAT ) கணக்கு துவங்க என்ன செய்ய வேண்டும்
கண்டிப்பாக நிரந்தர கணக்கு எண் அட்டை இருக்க வேண்டும் உள்ளூர் வங்கி கணக்கு எண் இரு புகைப்படம் நாம் பரிந்துரைசெய்யவிருக்கும் நபரின் புகைப்படம் ரேசன் கார்டு நகல் அடித்து புரந்த்தள்ளப்பட்ட வங்கி காசோலை பங்கு வைப்பக பங்கேற்போர் கேட்கும் வங்கி காசோலை

ஒரு வங்கி கணக்கு துவக்குவது போலத்தான் இதுவும் .
எந்த பங்கு வைப்பக பங்கேற்போர் இடம் டிமாட் கணக்கு துவங்க விரும்புகிறீர்களோ அவரிடம் இதற்கான விண்ணப்பம் பெற வேண்டும் . அவற்றை அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய பின்னர், 10 முதல் 15 நாட்களுக்குள் உங்கள் கைகளில் டிமேட் எண் வந்துவிடும். உங்கள் பங்குகளை பற்றிய கணக்குகள் டிஜிடல் வடிவில் வைத்துக்கொள்வார்.
டி மேட் இன் நன்மைகள்
பங்கு வர்த்தக பரிமாற்றத்திற்கு வசதியானதும் , பாதுகாப்பானதும் கூட உடனடி பங்கு வர்த்தக பரிமாற்றத்திற்கு காணாமல் போகாது /திருட்டு போகாது /தொலையாது பத்திர பதிவு கட்டணம் கிடையாது வாரிசுதாரர் நியமனம் உடனடி முகவரி மாற்றம் ஒரே தடவையில் உங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனி பங்குகளில் இருந்து வரும் பங்கின் லாபம் / உபரி பங்குகள் / உரிமைப் பங்குகள் ஆகியன அனைத்தும் தானாகவே உங்கள் கணக்கில் வந்து சேர்த்தல்

டி மேட் கணக்கை இப்பொழுது வங்கிகளிலும் துவக்கலாம். முன்பு இது கிடையாது. SBI, ICICI, HDFC, AXIS இன்னும் பிற வங்கிகளும் இந்த சேவையை அளிக்கின்றன. இதனால் உங்களுக்கு அவர்கள் பல வசதிகள் செய்து தருவார்கள். கணக்கு துவங்க வழக்கம் போல உங்கள் அடையாள அட்டை, முகவரி சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.
இது வரை இந்த கட்டுரையை படித்த அனைவருக்கும் நன்றி!!! உங்கள் அடி மனதில் முதலீடு பற்றிய எண்ணம் தோன்றினாலே அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கொள்வோம். வாழ்த்துக்கள்!!!

முதலீடு செய்யும் உங்களின் பணம் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம்

ஒரு நல்ல தகவலறிந்த முதலீட்டாளர் தான் நன்கு பாதுகாக்கப்பட்ட முதலீட்டாளர்

ஒருவர் தான் முதலீடு செய்வதற்கு முன் முதலீடு பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பின்னரே முதலீடு செய்வதற்கு தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பின் வரும் இந்த ஆலோசனை கடைபிடித்திருந்தால் பல முதலீட்டாளர்கள், தங்களை நஷ்டத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே, முதலீட்டாளர்களே! ஞாபகமிருக்கட்டும். " முதலீடு செய்யும் உங்களின் பணம் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம்".

ஏன் என்ற கேள்வி? இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ? பாடல்வரி யாருக்கும் மறக்காது. கேள்விகள் கேட்கப்படவேண்டும். அதற்கு தக்க பதில்களை கேட்டு பெறவேண்டும். நாங்கள், உங்களுக்காகவே சில கேள்விகளை தயார் செய்துள்ளோம். முதலீடு செய்யும் முன்பாக உங்கள் தரகர், பரஸ்பர நிதி மேலாளர் அல்லது உங்களையே நீங்கள் இக்கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் தரகர் நீங்கள் கேட்கும் கேள்விகளை கேட்டு சற்று பின் வாங்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் விபரமானவர், மேலும் நீங்கள் சற்றும் அசந்தவர் இல்லை என்று யோசிக்க வேண்டும். சற்று பின் வாங்கினாலும், உங்கள் கேள்விகளுக்கு அவர் மகிழ்ச்சியுடன் பதில் உரைப்பார். ஒரு புத்திமான் தனக்கு வாடிக்கையாளராயிருப்பதில் அவர் பெருமிதம் கொள்வார். தங்கள் வியாபாரத்தை இழப்பதை காட்டிலும் உங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதை தன் கடமையாக கொள்வார். கேளுங்கள்! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க!

பங்கு சந்தையில் நுழைபவர் தன் முதலீடுக்கு ஒரு அரண் அமைத்து கொள்வதினால், எதிர்காலத்தில் வருந்தும் நிலைக்கு ஆளாக மாட்டார். முதலீட்டாளர், தங்களை பாதுகாத்துக் கொள்ள, சிலவற்றை ஏன்? செய்ய வேண்டும், சிலவற்றை ஏன்? செய்யக்கூடாது என்று ஒரு பட்டியல் தயாரித்துள்ளோம்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.
நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? நான் எவ்வளவு முதலீடு செய்யலாம்? நான் எங்கே முதலீடு செய்வது? நான் முதலீடு செய்யும் சந்தர்பங்களை நழுவ விட்டதால் உண்டான நஷ்டங்கள் என்னென்ன? எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்யலாம் ? இது, ஒரு சிறந்த முதலீடுதானா ? எனது முதலீட்டு குறிக்கோளுக்கு இந்த முதலீடு ஒத்துவருமா? என்னால் எவ்வளவு ரிஸ்க் (அபாயம்) எடுக்க முடியும் ? நஷ்டங்களை ஏற்பட்டால் , தாங்கிக்கொள்ள தயாரா ? நான் விரும்பும் சமயத்தில் எனது முதலீட்டை விற்று பணம் பண்ண முடியுமா ?
ஒரு பங்கினில் முதலீடு செய்யும் முன் உங்களை நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் ?
இந்த பங்கினை நான் ஏன் வாங்க வேண்டும் ? இந்த பங்குகள் எனக்கு, லாபபங்கு, அல்லது வட்டி வருவாய் அல்லது முதல் பெருக்கத்தை தேடித்தருமா ? என்னுடைய கால அவகாசத்திற்குள் எனது வருவாய் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யுமா ? இந்த பங்கினை வாங்குவதால் ( மற்றும் வைத்திருப்பதால், பின்னர் விற்பதால் ) எனக்கு உண்டாகும் செலவுகள் என்னென்ன? எப்போது பின்வாங்கி (விலகி ) கொள்ளலாம் ? எனக்கு பணம் தேவையானபோது, இவற்றை விற்று பணம் பண்ணிக்கொள்ள முடியுமா ? எந்த காரணிகள் எனது முதலீட்டின் மதிப்பை அதிகரிக்கும் / குறைக்கும்? (வட்டி விகித மாற்றங்கள், அரசு கொள்கை மாறுதல்கள், அதிகரிக்கும் தொழில் போட்டி பொருளாதார நசிவு, பங்கு சந்தை, தள்ளாட்டம், போர் , மற்றும் இயற்கை சீற்றங்கள் முதலியன ) இந்த பங்கிற்கென உள்ள ஆபத்துக்கள் என்னென்ன ? நான் பங்கு கொள்ள இருக்கும் எந்த கம்பெனி எவ்வளவு காலம் தொழிலில் உள்ளது ? எந்த கம்பெனியின் நிர்வாகம் அனுபவமிக்கதா ? முதலீட்டாளர்களை அரவணைக்கும் கம்பெனியா ? போட்டியாளர்களை ஒப்பிடுகையில் இந்த கம்பெனி நல்ல முறையில் உள்ளதா ? பங்கிற்கு உள்ள தரவரிசையின் முன்சரித்திரம் உள்ளதா ? கடந்த கால செயல்திறன் எதிர்காலத்திலும் இருக்கும் என்பது என்ன நிச்சியம் ? பங்குகளை பற்றிய மேல் விவரங்கள் எங்கு கிடைக்கும் ? கடைசியாக வெளியான கம்பெனியின் ஆண்டறிக்கை, மற்றும் வெளியிட்டு ஆவணங்கள் எங்குக் கிடைக்கும் ? செபிஉடன் இந்த பங்கு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதா ? இது ஒரு உயர்தர பங்கா? இல்லை தரம் குறைந்த பங்கா?
உங்கள் தரகர் / உதவி தரகரை நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் :
நீங்கள் ஒரு தரகர் ? / உதவி தரகரா ? நீங்கள் செபிவுடன் பதிவு பெற்றவரா ? நீங்கள் செபியுடனான உங்களின் பதிவு சான்றிதழை காட்ட முடியுமா ? பங்கு சந்தை மாற்றக பதிவு சான்றிதழையும் காட்ட முடியுமா ? நீங்கள் எந்த பங்கு மாற்றகத்தில் அங்கத்தினராக உள்ளீர்கள் நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் எவ்வளவு காலமாக சேவை அளிக்கிறிர்கள் ? நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பங்கு மாற்றங்களில் அங்கத்தினராயிருப்பின் , என்னுடைய பங்கு பரிமாற்றங்களுக்கு உள்ளதிலே நல்ல விலை கொடுப்பிர்களா ? நீங்களோ அல்லது உங்களது நிறுவனமோ என்ன விதமான பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றுள்ளிர்கள் ? ஏதாவது ஒழுங்குமுறை ஆணையம் அல்லது வேறு எவரேனும் உங்கள் மீதோ எப்போதேனும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளர்களா ? ஆம் என்றால் விளக்கம் தர முடியுமா ? நான் உங்கள் வாடிக்கையாளர் ஆகும் பட்சத்தில் நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் தொகை அல்லது சேவை கட்டணங்கள் என்னென்ன ? தரகர் - வாடிக்கையாளர் ஒப்பந்தம் கையொப்பமிட்ட என்னென்ன ஆவணங்கள் தேவை ? எவ்வளவு சீக்கிரம் எனது பரிவர்த்தனையை செயல்படுத்த முடியும் ? உங்களுடனான பரிவர்த்தனை துவங்கிய பின்னர் நம் ஒப்பந்த சீட்டு எவ்வளவு சீக்கிரம் எனக்கு கிடைக்கும் ? ஒரு பங்கு வாங்குதல் அல்லது விற்பதற்கு என்னென்ன ஆவணங்கள், எத்தனை நாளுக்குள், நான் உங்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும் ? எனது பரிவர்த்தனைக்கு எப்போது நான் பணம் கொடுக்க / வாங்க வேண்டி இருக்கும்? குறிப்பிட்ட ஏதாவது பரிவர்த்தனைகளுக்கு தனியாக ஏதேனும் அதிக பணம் கட்ட வேண்டி இருக்குமா ? பின்னர் எப்போதேனும் ஒரு குறை ஏற்பட்டால் என்ன விதமான தீர்வுகள் கிடைக்கும் என்று விளக்க முடியுமா ?
பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும்முன் உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.
இந்த நிதியின் முன் சரித்திரம் என்ன? என்ன விதமான பங்குகளில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது ? எப்போதெல்லாம் பங்கு தொகுதி மாற்றபடுகிறது ? எனது முதலீடு கரைத்து போககூடிய வண்ணம் ஏதாவது பங்குகளில் முதலீடு செய்யப்படுமா ? ஒரேவகை சேர்ந்த வேறு ஏதேனும் நிதி அல்லது ஒரு குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில் நமது நிதியின் செயல் திறன் என்ன ? யூனிட்டுகள் வாங்கும் போது என்னுடைய கட்டணங்கள் என்ன? நிதிக்குள் இன்றைய எனது நிகர சொத்து மதிப்பு என்ன? யூனிட்டுகளை விற்கும் போது எனது கட்டணங்கள் என்ன ? விற்ற யூனிட்டுகளுக்கு நான் எப்போது பணம் பெற இயலும் ? எத்தனை கால இடைவெளிக்கொருமுறை எனது பங்கு பட்டியல் அட்டவணை எனக்கு தரப்படும் ? உங்களை பரஸ்பர நிதி முகவர்/விநியோகஸ்தரை கேட்க வேண்டிய கேள்விகள் . இந்திய பரஸ்பரநிதி சங்கத்தில் நீங்கள் அங்கத்தினரா? என்னென்ன விதமான நிதி பொருட்கள் நீங்கள் வழங்குகிறிர்கள்? உங்கள் பட்டியலில் இல்லாத நிதி பொருட்கள் ஏதேனும் சந்தையில் உள்ளனவா ? அப்படியானால் ஏன் உங்களிடம் இல்லை ? உங்கள் வாடிக்கையாளருக்கு உகந்தது இல்லை என்று சேர்க்க வில்லையா ? அல்லது உங்களுக்கு குறைவான கமிஷன் தான் கிடைக்கும் என்பது போன்ற காரணங்களால் இல்லையா? எனக்கு அவை பொருந்துமாயின் அவற்றை எனக்காக பெற்றுதர முடியுமா ? நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் எவ்வளவு காலம் இந்த தொழிலில் இருக்கிறிர்கள் ? என்ன விதமான பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றுள்ளிர்கள் ? வேறு ஒரு நிதியை நான் வாங்குவதை காட்டிலும் உங்கள் நிதியை வாங்குவதால் நீங்கள் பணம் பண்ணுகிறீர்களா ? அப்படி நீங்கள் பணம் பண்ண முடியாவிட்டாலும் உங்கள் சிபாரிசு இதே நிதிக்கு தானா ? இந்த நிதியை வாங்குவதால் உண்மையிலேயே எனக்கு நற்பலன் தானா ? இந்த பரஸ்பர நிதியை வாங்குவதால் எனக்கு உண்டாகும் செலவு எவ்வளவு? இன்றைய தினம் அதனை விற்றால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்? இந்த முதலீட்டில் எனக்கு ஒரு குறை தீர்க்கவேண்டுமானால் யாரை நான் அணுக வேண்டும்? எந்த விதத்தில் நீங்கள் எனக்கு உதவ முடியும்? AMFI அல்லது வேறு ஏதேனும் ஒழுங்கு முறை ஆணையம் உங்களை நெறிபடுத்தியுள்ளதா?
கேளுங்கள்! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க ! மறக்காதிர்கள் ! மறந்து இருந்து விடாதிர்கள் !

முதலீட்டில் செய்ய வேண்டியவை
எப்போதும் செபியில் பதிவு பெற்ற இடைதரகர்களையே நாடுங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நகல் உங்கள் கைவசம் இருக்கட்டும் (விண்ணப்பம், ஒப்பந்த சிட்டு, பெற்றுக்கொண்டதுக்கான அத்தாச்சி சிட்டு. ) கம்பெனிகளுக்கு அனுப்பும் எந்த ஆவணத்தின் நகலும் உங்களிடம் இருக்க வேண்டும் . அனுப்பும் எந்த ஆவணமும் ஒரு நம்பத்தகுந்த கூரியர் அல்லது பதிவு தபாலில் அனுப்புதல் உத்தமம் . ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அன்றைக்கன்றே ஒப்பந்த சிட்டு பெறுதல் அவசியம். பட்டியல் அட்டவணையும் பெறப்பட வேண்டும் . போதுமான பணம் கைவசம் தயாராக வைத்து கொள்ளுங்கள் . பங்குகளை விற்க என்னும்போது அவற்றையும் கைவசம் தயாராக வைத்திருக்க வேண்டும் . ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தொடர்து உங்கள் கவனம் இருக்க வேண்டும். உடனுக்குடன் ஆவணங்கள் கைக்கு கிடைக்க வேண்டும் இல்லாவிடில் தரகர் , கம்பெனி ஆகியோரை உடனே தொடர்பு கொள்ளுதல் அவசியம். தரகர், முகவர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் உங்கள் அறிவுறுத்தல்கள் தெளிவாக முரண்படாது இருக்க வேண்டும். உங்கள் தேவைகள் டிமாட்டிலா அல்லது காகித வடிவிலா என்பதும் தெளிவு பட கூற வேண்டும் . பிரச்சனைகள் என்று வரும்போது உடனடியாக செயல்படுங்கள் .
கீழே குறிப்பிட்டுள்ள பணிகளை உடனடியாக செய்யுங்கள் .
தரகரை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனையை விளக்குங்கள் எங்கே தவறு நடந்திருக்கும் என கண்டுபிடியுங்கள் தரகரால் தீர்வு காண முடியாத பட்சத்தில் பங்கு மாற்றகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அங்கும் தீர்க்க முடியவில்லை என்றால், சம்மந்தப்பட்ட ஆணையத்திடம்

புகார் தெரிவியுங்கள் . உங்கள் பிரச்சனையை சுருக்கமாக தெளிவாக கூறுங்கள் .
முதலீட்டில் செய்யக்கூடாதவை
பதிவு பெறாத தரகர்களை தவிர்த்திடுங்கள் . எவ்வளவு நன்றாக தெரிந்தவராயினும் , பரிவர்த்தனைக்காக ஆவணங்களை எக்காரணம் கொண்டும் நழுவ விடக்கூடாது. ஒரு பெரிய வருமானம் வரும் என்ற மாய தோற்றத்திற்கு இரையாகாதிர்கள் . இந்த நிதி நிறுவனங்கள் வழங்கும் எந்தவொரு சான்றிதழையும், பதிவு பத்திரங்களையும் கண்டு ஏமாந்து விடாதீர்கள். அவை பங்குகளுக்கு சம்பந்தமே இல்லாதவையாக இருக்க வாய்புண்டு. டிப்ஸ் (உடனடி செய்திகள்) எனப்படும் வதந்திகளை நம்பி பரிவர்த்தனை செய்யாதிர்கள் . முதலீட்டில் வரும் அபாயங்களை எப்போதும் மனதில் இருத்துங்கள் . உங்களின் முதலீட்டு பணத்தை பின் தேதியிட்ட காசோலைகளாக தந்தால் ஏற்காதீர்கள் அவை உத்திரவாதமில்லாதவை பிரச்சனைகள் வரும் போது பயந்து மனம் கலங்கி விடாதிர்கள் . சம்மந்தப்பட்ட நபர்களையோ அல்லது அதிகாரிகளையோ சந்திக்க தயங்காதிர்கள் .
நீங்கள் உங்களையே கேள்விகள் பல கேட்டு, தெரிந்து, தெளிந்து முதலீட்டி வெற்றி அடைய வாழ்த்துக்கள் !!!

நீங்கள் தின வர்த்தகத்திற்கு புதியவரா?

அப்படியானால் முதலில் இதைப் படியுங்கள்!!!!

இவ்வர்த்தகத்தை தொடங்கும் முன்னெர் இக்கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் அவசரத்தில் நல்ல முடிவு எடுக்கக் கூடியவரா? நல்ல மன உறுதி உடையவரா? எளிதில் பிறர் மன நிலையை நன்கு அறிந்துக் கொள்ளக் கூடியவரா? நஷ்டத்தை தாங்கிக் கொள்ள கூடியவரா? நல்ல பொருளாதார வசதி உடையவரா?
இதற்கேல்லாம் ஆம் எனில் நீங்கள் இதில் நுழையலாம்.

சரி! நுழைந்தாகி விட்டாச்சி!!! பின்ன என்ன செய்ய வேண்டும். அதை இங்கு பார்ப்போம்!!!

இவ்வர்த்தகத்தில் ஈடுபட ஆசையிருந்தால் நீங்கள் முதலில் உங்களின் சந்தை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சந்தையை பற்றி அறிய அதனைப் பற்றிய செய்திதாள்களையும், புத்தகங்களையும் தினமும் வாசித்து வர வேண்டும்.

அதிலிருந்து பங்கின் நிலவரங்களை குறித்து வைத்துக் கொண்டு, அதனை கவனித்து வர வேண்டும். பின்னர் நாம் தின வர்த்தகத்திற்கு தயாராகி விட்டோம் எனக் கருதினால் முதலில் காகித புத்தகத்தில் பரிவர்த்தனை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இக்காகித வர்த்தகம் செய்யும் போது உண்மையில் பணத்தைக் கொண்டு வர்த்தகம் செய்வது போல் கருதி ஈடுபட வேண்டும். வர்த்தக நாள் முடிவில், ஏற்பட்ட லாப/நட்டங்களை குறித்துக் கொண்டு, நட்டம் அதிக அளவில் ஏற்பட்டால், நமது வர்த்தக முறையில் எங்கு தவறு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து அவற்றை திருத்த முயல வேண்டும்.

இந்த காகித வர்த்தகத்தில் நாம் விற்பன்னர் ஆகிவிட்டோம் எனத் தெரிந்தால் மட்டுமே தின வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.
எக்காரணமும் கொண்டு நீங்கள் ஒரு பங்கை பற்றி நன்கு அலசி ஆராயாமல் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. பிறர் சொல்வதையோ/ அறிவுரைகளை பின்பற்றி வர்த்தகம் செய்யாதீர்கள். தொலைப் பேசி வழியாகவோ/ குறுந்தகவல்களின் செய்திகளின் அடிப்படையிலோ வியாபாரம் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் செக்கு மாட்டின் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதில் வருமானம் அதிக தரக்கூடியதாக தோற்றமலிக்கலாம். ஆனால் நீங்கள் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணங்கள்/ வரிகள்/ மற்றும் பிற செலவுகளைக் கழித்துப் பார்த்தால் உங்களுக்கு சொற்ப லாபமே கிட்டலாம். மேலும் உங்களால் இச்சேவையை வாழ்நாள் முழுவதும் கை கொள்ள முடியாது. எனவே கூடிய மட்டும் உங்களின் சமயோசித புத்தியைக் கொண்டு பரிவர்த்தனை செய்யுங்கள். நஷ்டத்துடன் ஆரம்பித்தாலும் பரவாயில்லை... விரைவில் நீங்கள் அதை கற்று தேர்ந்து விடுவீர்கள். உங்களுக்கென்று நீங்களே ஒரு வெற்றிக்கான யுக்தியை அமைத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
இப்போது சந்தையின் போக்கு , சந்தையின் வியாபார நிலை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
சந்தையின் தொடக்கம் வீழ்ந்து காணப்படுகிறதா? அல்லது உயர்ந்து காணப்படுகிறதா? வீழ்ந்ததற்கு காரணம் என்ன? உயர்ந்ததிற்கு காரணம் என்ன? வாங்குபவர்கள் அதிகமா?/ விற்பவர் அதிகமா? பங்கு அடங்கியுள்ள தொழிற் பிரிவின் நிலை என்ன? பங்கைப் பற்றிய தற்போதய தகவல்கள் என்ன?

போன்றவற்றை பற்றி நன்கு தெரிந்தப் பின்னரே பங்கை வாங்குவது/ விற்பது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வர்த்த்கத்தில் ஈடுபடும் முன்னர், சிலவற்றை மிக கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த பங்கில் வர்த்தகம் செய்கிறோம்? எவ்வளவு பணத்தில் செய்கிறோம்? எந்த சந்தையில் (காளை/கரடி) நுழைகிறோம்? Stop Loss எனப்படும் நஷ்ட தடுப்பை பயன்படுத்துகிறோமா? பங்கின் வாங்குபவர்/விற்பவர் எண்ணிக்கை என்ன? பங்கைப் பற்றிய நல்ல செய்திகள் ஏதுவேனும் உள்ளதா? அதன் மூல பொருட்களின் விலையிலோ/ வரிச் சுமையிலோ ஏதேனும் மாற்றம் உள்ளதா? அக்கம்பெனியின் வருமானத்திலோ/லாபத்திலோ/ செயல்திறனிலோ முன்னேற்றம் உள்ளதா? லாப பங்கு கொடுக்கப் போகிறதா? புதியதாக ஏதேனும் ஒரு நிறுவத்தை வாங்கப் போகிறதா? அல்லது இணையப் போகிறதா? உபரி பங்குகள் வழங்க உள்ளனவா? தலைமையில் மாற்றமோ? அல்லது புதிய நிர்வாக மாற்றம் உள்ளதா?

இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு விடை தெரிந்தப் பின்னர் ஈடுபட்டால் உங்களின் முதலீட்டிற்கு பாதுகாப்பு தருவதோடு அல்லாமல் நல்ல மன நிறைவைத் தரும்.
இவ்விடம் நாம் வருவது பணம் சம்பாதிக்க மட்டுமே!!!! இழப்பதற்கு அல்ல!!!

நாம் எப்படி பட்டவராய் இருத்தல் வேண்டும் என்பதையும், ஒரு பங்கைப் பற்றி எவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம்.
சந்தையை வீழ்த்தும்/உயர்த்தும் சில காரணிகள் பின்வருமாறு
பருவ கால நிலைகள் பண வீக்கம் உள் நாட்டு/ அயல் நாட்டு சண்டைகள் பொருளாதார கொள்கைகள் அரசாங்க கொள்கைகள் அரசியல் காரணங்கள் சமூகக் காரணங்கள் மூலப் பொருட்களின் விலைவாசி உள்ளிருப்போர் வர்த்தகம் பண வீழ்ச்சி பெட் ரோலிய விலை இயற்கை பேரழிவு விளைவுகள் அயல் நாட்டு முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் நிர்வாக குளறுபடி/ மோசடி பிற சர்வதேச பரிமாற்றகங்கள் முதலீட்டாளர்களின் பேராசையும்/பயமும் ஆகியன.

சரி . இன்று நம் சந்தையின் தொடக்கம் உயருமா? வீழுமா? என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வமுள்ளவரா நீங்கள், அப்படி என்றால்
நீங்கள் கவனிக்க வேண்டியது பின்வருமாறு,
அமெரிக்க பங்கு சந்தையின் முடிவுகள் ஆசிய பங்கு சந்தைகளின் காலை நிலவரங்கள் பணத்தின் மதிப்பு, பெட்ரொலின் விலை தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பரிவர்ததனை ஆகும் பங்குகளின் நிலவரங்கள் முந்தைய நாட்களின் அயல் நாட்டு முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் அரசு அறிவிக்கவிருக்கும் கொள்கைகள் லண்டன் மெட்டல் வர்த்தக மையத்தில் விற்பனையாகும் உலோகங்களின் விலை நிலவரங்கள்

போன்றவற்றின் அவ்வப் போதைய நிலவரங்களை தெரிந்து , அதற்கு தக்கவாறு வர்த்தக முறையை பின்பற்ற வேண்டும்.

இத்தின வர்த்தகத்தில் ஒவ்வொருவரும் வித விதமான யுக்திகளை கையாண்டு வெற்றி அடைகிறார்கள். நீங்களும் உங்களுக்கான வெற்றி முறையை கண்டு பிடித்து வளம் பெற வாழ்த்துக்கள்!!!

Tuesday, September 15, 2009

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் – 7

என்ன நண்பர்களே கடந்த வாரம் OPEN, HIGH, LOW, CLOSE ஆகிய முக்கியமான நிலைகளை பற்றி சொல்லி இருந்தேன் மேலும் சில விசயங்களை சொல்லி அப்படி வந்தால் என்ன நடக்கும் என்று உங்களை யோசிக்க சொல்லி இருந்தேன் யோசித்தீர்களா,
நான் கடந்த வாரம் சொன்னது என்னவெனில்

"ஒரு பங்கு நன்றாக உயர்ந்து மேலே தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கும் கீழே வந்து CLOSE ஆனால் என்ன நடக்கும் என்று நீங்கள் யோசித்து பாருங்கள், மேலும் நீங்கள் யோசித்தது போல அடுத்த நாள் நடக்கின்றதா இல்லை மாறுபாடுகள் வருகிறதா என்று பாருங்கள்.." என்று சொல்லி இருந்தேன்,

உங்களின் அனுபவம் எப்படி இருந்தது, இந்த அனுபவத்தின் மூலம் உங்களின் யோசனைக்கு தகுந்தார்ப்போல் சரியான முடிவு வரவில்லை என்றாலும் முயற்ச்சி செய்துகொண்டே இருங்கள் போக போக இந்த செயல் உங்களுக்கு சரியான பயிற்சியை தரும், பயிற்ச்சி மட்டுமே நேர்த்தியாக TECHNICAL ANALYSING கற்றுக்கொள்வதற்கு உதவும், சரி இந்த வாரம் மேலும் சில விசயங்களை பற்றி பார்ப்போம் அதாவது TECHNICAL ANALYSING செய்வதற்கு நாம் வரைபடங்களை தான் பயன்படுத்துவோம், அதாவது ஒரு பங்கின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவோ அல்லது தீர்மானிக்கவோ நாம் அந்த பங்கை பற்றி அடி முதல் முடி வரை ஆராய்ந்து பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால் தான் அந்த பங்கை பற்றி நாம் ஒரு அனுமானத்திற்கு வரமுடியும்,

சரி ஒரு பங்கை பற்றி எப்படி அடி முதல் முடி வரை தெரிந்துகொள்வது, இப்படி ஒவ்வொரு பங்கை பற்றியும் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி வர்த்தகம் செய்வது அதோட அந்த பங்கை பற்றி எப்படி என்னவென்று பார்ப்பது, தினமும் இவர் சொல்வது போல அந்த குறிப்பிட்ட பங்கின் OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு எப்படி பார்ப்பது, வெறும் நம்பரை வைத்துக்கொண்டு என்னய்யா செய்வது, இது என்ன ஆகாத வேலையாய் இருக்கே என்று எண்ணுகிறீர்களா,

அப்படி எண்ணாதீர்கள், நாம் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளியின் மூலம் தான் அந்த பங்கை பற்றி ஆராயப்போகிறோம், ஆனால் நீங்கள் நினைப்பது போல வெறும் நம்பர்களை வைத்துக்கொண்டு அல்ல, அந்த நம்பர்களை நமக்கு தகுந்தார்ப்போல் சில உருவங்கள் கொடுத்து மாற்றியமைத்து தான் ஆராயப்போகிறோம் ஆகவே நண்பர்களே கவலை கொள்ளாதீர்கள்….

சரி இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு உருவ அமைப்புகளை நாமே உருவாக்கி கொண்டிருக்க முடியாது, இதற்க்கென்று தனியாக சில SOFTWARE உள்ளது அவைகளை நாம் வாங்கி பயன்படுத்திக்கொண்டால் போதும், மேலும் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் அதாவது இதற்காக அநேக SOFTWARE கள் உள்ளது இதில் நான் பயன்படுத்துவது METASTOCK எனப்படும் SOFTWARE ஐ தான்,

சரி SOFTWARE உங்களிடம் உள்ளது என்று வைத்துக்கொண்டால் அதன் மூலம் நாம் ஆராய வேண்டிய ஒவ்வொரு பங்குகளின் OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள் (DATA FOR SOFTWARE) நமக்கு தேவை இல்லையா, அதனை பற்றியும் சொல்லி விடுகிறேன், பங்கு சந்தை இந்தியாவில் தொடங்கிய அன்று முதல் இன்று வரை பங்குகளின் இந்த மேற்கண்ட புள்ளிகளை நாம் சில வர்த்தகர்களிடம் இருந்து பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்,

அவர்களுக்கு DATA VENDOR என்று பெயர், இவர்களின் வலை தளத்தில் இருந்து நாம் தினமும் மாலை சந்தை முடிந்த பின்பு அனைத்து பங்குகள் மற்றும் மேலும் சில முக்கியமான குறியீடுகளின் அன்றைய தின OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை பெற்று (DOWNLOAD) அதை நாம் வைத்து இருக்கும் SOFTWARE மூலம் OPEN செய்து பார்த்தால் நமக்கு தேவையான உருவங்கள் கிடைக்கும், இந்த உருவ அமைப்புகளை வைத்துக்கொண்டு தான் நாம் அந்த குறிப்பிட்ட பங்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை ஆராயப்போகிறோம், சரி அதற்க்கு முன் வேறு சில முக்கியமான விஷயத்தை பற்றியும் பார்த்து விடுவோம்

அதாவது உருவ அமைப்புகள் உருவ அமைப்புகள் என்று சொல்லி வருகிறேன் இல்லையா, இந்த உருவ அமைப்புகளை பற்றி சற்று விரிவாக பார்த்து விடுவோம், ஏனெனில் இந்த உருவங்கள் எப்படி வருகிறது, இப்படி, இந்த COLOUR இல் இருந்தால் இதற்க்கு என்ன அர்த்தம், அந்த COLOUR இல் (எந்த எந்த COLOUR என்று பின்னால் சொல்லிக்கொண்டே வருகிறேன் பொறுமையாக படியுங்கள்) இருந்தால் அதற்க்கு என்ன அர்த்தம் என்பது முக்கியம், இதில் தெளிவாக இருந்தால் தான் நமக்கு நல்லது,

அதற்க்கு முன் இந்த CHART இன் மூலம் நமக்கு என்ன தேவை என்பதை பற்றி சொல்லி விடுகிறேன், அதாவது நாம் TECHNICAL ANALYSE செய்ய CHART படம் தேவை என்றும் இந்த CHART படம் அன்றாடம் அனைத்து பங்குகளில் நடக்கும் OPEN, HIGH, LOW CLOSE என்ற புள்ளிகளின் மூலம் தான் உருவாக்கப்படுகிறது என்றும், அப்படி உருவாகும் உருவ அமைப்புகளை வைத்து நாம் ஆராய்ச்சி செய்வோம் என்றும் பார்த்தோம் இல்லையா, அப்படி ஆராய்ச்சி செய்யும் போது சில அடிப்படை விசயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா,

அதை பற்றி இப்பொழுது பார்ப்போம் அதாவது காசு இருக்கென்று CAR வாங்கி விட்டால் போதுமா ஓட்ட தெரிய வேண்டும் இல்லையா அப்படி ஓட்ட தெரிந்து கொள்ளும் போது எது GEAR, எது BREAK, எது ACCELERATOR, என்று சொல்லி கொடுப்பார்கள் இல்லையா அப்படிதான் (நான் சொல்வது எப்படி வண்டி ஓட்டுவது என்பதை பற்றி அல்ல வண்டியின் பாகங்கள் எது எது என்று சொல்லி வருகிறேன், இது தான் GEAR ROD என்று தெரிந்தால் தானே GEAR போட முடியும், அது இல்லாமல் வெறும் படத்தை மட்டும் காட்டி முதலில் FIRST GEAR போட வேண்டும் பிறகு SECOND GEAR இப்படியே முன்னேறி ஐந்தாவது GEAR வரை போட்டு ஓட்ட வேண்டியது தான் என்று சொல்லி விட்டால் வண்டிக்குள் சென்று GEAR ROD எது வென்று அவர் எப்படி கண்டு பிடிப்பார்,

ஆகவே தான் இந்த வரை பட உருவங்களை பற்றி ஒரு சிறிய விளக்கம் தர வேண்டியது அவசியமாகிறது சரி விசயத்துக்கு வருவோம், நான் உங்களிடம் சொன்னேன் இல்லையா இந்த OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளின் மூலம் தான் உருவங்கள் உருவாக்கப்படுகிறது என்று, அந்த உருவங்கள் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை பார்ப்போம், அதற்க்கு முன் உருவ அமைப்புகளில் சில வகைகள் உள்ளது அந்த வகைகளை பற்றியும் சொல்லி விடுவது தற்பொழுது ஏற்றதாக இருக்கும்,

அதாவது இந்த OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு சில கோடுகள் (உருவங்கள் ) உருவாகும் அது போன்ற உருவங்களை மூன்று விதமாக நாம் பார்க்கலாம் அந்த மூன்று வடிவங்களை பற்றி ஒரு சிறிய விளக்கத்தை அதற்கு உண்டான படங்களுடன் பார்ப்போம்

அந்த மூன்று வடிவங்கள் :–

BAR CHART,

CANDLESTICKS CHART,

LINE CHART

முதலில் BAR CHART

இந்த BAR CHART என்ற வடிவம் கீழே கொடுத்துள்ள படம் 1 இல் இருப்பது போல் தான் இருக்கும், சரி இந்த படம் நாம் முன்னர் சொன்னது போல OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளில் இருந்து தான் உருவாக்கப்பட்டுள்ளது அப்படி என்றால் இந்த உருவத்துக்குள் தான் அந்த பங்கின் ஒவ்வொரு நாள் OPEN HIGH LOW CLOSE, என்ற புள்ளிகள் புதைந்து இருக்கின்றது என்று தானே அர்த்தம், அப்படி என்றால் இந்த உருவத்தின் மூலம் (படத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு கோட்டின் மூலம் ) நாம் எப்படி அந்த பங்கின் OPEN HIGH LOW CLOSE, என்ற புள்ளிகளை பற்றி தெரிந்து கொள்வது,

சரி போன பதிவில் பார்த்தது போல ஒரு பங்கின் OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்து அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வுகளை ஒரு 50% அளவிற்காவது தெரிந்து கொள்ளவேண்டுமே எப்படி தெரிந்து கொள்வது என்ற எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடுகிறதா அப்படி என்றால் நீங்கள் இப்பொழுதே 25% அளவிற்கு TECHNICAL கற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம், தோன வில்லையா அப்படி என்றால் நீங்கள் 100% TECHNICAL கற்றுக்கொள்ள தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம், சரி இந்த படத்தை பாருங்கள் விளக்கத்தை அடுத்த வாரம் சொகிறேன்- சந்தேகங்களை கேளுங்கள்

BAR CHART PICTURE

Thursday, September 10, 2009

பப்பட்டின் வெற்றி வழி - 8

பங்கு வாங்கியாகி விட்டது.அதை எப்படி தொடர்ந்து கண்காணிப்பது எனவும் பார்த்தாகி விட்டது.இனி செய்ய வேண்டியது என்ன?ஜாக்கிரதையாய் இருப்பதுதான்.யாரிடம் ஜக்கிரதையாய் இருக்க வேண்டும்?பங்கு சந்தையிடம்.பப்பட் பங்கு சந்தையை பற்றி மிஸ்டர் மார்க்கட் என்ற பெயரில் சுவரசியமாக ஒரு கதை சொல்லுவார்.அந்த கதையை விட்டுவிட்டு அதில் உள்ள கருத்தை மட்டும் சொல்லுகிறேன். "Market is always correct.market is perfect " என்ற ஒரு மாயை பங்கு சந்தையில் நிலவுகிறது.பப்பட் அது தவறு என்கிறார்.பங்கு சந்தை பெர்பெக்டாக இருந்திருந்தால் நான் இன்னும் ஏழையாக தான் இருந்திருப்பேன் என்கிறார்.பப்பட்டின் வார்த்தைகளில் Market is not awlays correct.It is at times correct.There is a difference between both these views.The difference is like that between day and night. பங்கு சந்தையின் விலை உண்மை விலையை விட அதிகமாக இருக்கும்போது பேசாமல் இருக்க சொல்கிறார்.பங்கு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருக்கும்போது பங்குகளை வாங்க சொல்கிறார்.பங்கு விலை குறைந்தால் தான் அவர் மகிழ்வார்.கடையில் பொருள் விலை குறைந்தால் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி தானே?அது போல் தான் இதுவும் என்கிறார் பப்பட். நிறைய கம்பனிகளின் பங்குகளை வாங்குவதையும் அவர் ஆதரிக்கவில்லை.20 கம்பனிகளின் பங்குகளுக்கு மேல் அவர் வாங்கமாட்டார்.நாம் இன்னும் குறைவாக தான் வாங்க வேண்டும்.ஒரே கம்பனியில் பணம் போடுவதும் தவறு.10 நல்ல கம்பனிகளை கண்டறிந்த பிறகு மேலும் பணம் போடவேண்டுமென்றால் அந்த 10லேயே போடலாம் அல்லவா?11வது கம்பனி எதற்கு என கேட்கிறார் பப்பட். "which is the right time to sell?"' என்ற குழப்பம் பங்கு சந்தை துறைகளில் உண்டு.பப்பட் இதற்கு தெளிவான பதில் வைத்திருக்கிறார். NEVER என்பது தான் அவரின் பதில்.நம்மால் அப்படி செய்ய முடியாமல் போனாலும் குறைந்தது 10 - 20 வருடங்களுக்கு வாங்கிய பங்கை விற்கக் கூடாது. பப்பட் இதற்கு வீட்டை உதாரனம் சொல்கிறார்.10 லட்சம் தந்து வீடு வாங்குகிறோம்.வாங்கிய மறுநாள் சந்தை மதிப்பு 11 லட்சம் ஆகிறது.லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பதற்காக வீட்டை விற்போமா?சந்தை விலையை பற்றி கவலைப்படவே மாட்டோம் அல்லவா?அதுபோல் தான் பங்குகளும் என்கிறார் பப்பட். இத்துடன் இத்தொடரை நிறைவு செய்கிறேன்.பப்பட்டின் வழிமுறையில் முக்கியமானவற்றை சொல்லிவிட்டேன்.முதலீடு செய்ய விரும்புவோர் பப்பட்டின் புத்தகங்களை படித்து பார்த்து முதலீடு செய்க என அன்புடன் பரிந்துரைக்கிறேன். சில உருப்படியில்லாத விஷயங்களையும் சொல்லியாக வேண்டும். ஊருக்கு எத்தனை உபதேசம் செய்தேனே.என் பங்கு சந்தை அனுபவம் என்ன என கேட்கிறீர்களா?நான் பங்கு வாங்கிய கதையை தான் சொன்னேன்.பிறகு என்ன ஆச்சு என்பதையும் சொல்லிவிடுகிறேன். கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து 2 கம்பனிகளின் பங்குகளை வாங்கினேன்.20 வருடம் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வாங்கினேன்.வாங்கியபோது ஒரு கம்பனி பங்கு விலை 234 ரூபாய்.இன்னொரு கம்பனி பங்கு 70 ரூபாய். பங்கு வாங்கிய 1 வருடத்தில் அமெரிக்க விசா கிடைத்தது.இருக்கும் பணம் முழுவதையும் வங்கிகணக்கில் காட்ட வேண்டும் என விசா கன்சல்டன்ட் சொன்னார்.234 ரூபாய்க்கு வாங்கிய பங்கை 246 ரூபாய்க்கு விற்றேன்.80 ரூபாய்க்கு வாங்கியதை 85 ரூபாய்க்கு விற்றேன். அந்த இரு பங்குகளின் உண்மை விலை 400 - 500 என கணித்து வைத்திருந்தேன்.80 ரூபாய் பங்கு மிக அன்டர்வேல்யூட் பங்கு.நிறைய வாங்கிக்குவித்திருந்தேன். விசா கிடைத்து அமெரிக்கா வந்துவிட்டேன்.இப்போது 234 பங்கு 1365 ரூபாய்க்கு விற்கிறது.80 ரூபாய் பங்கு 500 தாண்டியதாக 6 மாதம் முன் பார்த்தேன். ஆனால் நான் துளி கூட கவலைப்படவில்லை. இன்னொரு தமாஷையும் சொல்ல வேண்டும்.அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த புத்தகத்தை வாங்கினேனே,அதை வாங்கிய பிறகு எதேச்சையாய் நெட்டில் பார்த்தபோது அது இலவசமாக நெட்டில் கிடைக்கிறது. அன்று மிகவும் மனம் நொந்து போனது உண்மை.சிரிப்பாகவும் இருந்தது.Life keeps on teaching me new lessons everyday. சரி நீங்கள் எல்லாரும் அந்த புத்தகத்தை ஓசியில் படிக்க வேண்டுமா? ஆசை தோசை அப்பளம் வடை. எதாவது தரும காரியத்துக்கு ஒரு சிறு தொகை தருவேன் என்று சத்தியம் செய்தால் தான் அந்த சுட்டியை கொடுப்பேன். எல்லாரும் சத்தியம் செஞ்சாச்சா? வெரிகுட் ....அடப்பாவி.இங்க பாரு அனியாயத்தை...அஷ்லின் மனசுக்குள் "அ" சொல்லிட்டு "சத்தியம்"னு சொல்லற மாதிரி இருக்கு.அதனால அவருக்கு மட்டும் இந்த சுட்டி கிடையாது. மத்தவங்க மட்டும் இங்க போய் படிங்க. இந்த சுட்டில ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளமா இருக்கும்.புத்தகம் எடிட் செஞ்ச வெர்ஷன்.அதனால என்ன?நிறைய படிச்சா நல்லதுதானே? Happy investing.

பப்பட்டின் வெற்றி வழி - 7

பங்கை வாங்கியாகி விட்டது.அடுத்து செய்ய வேண்டியது என்ன? நாம் போட்ட முதலீடு எப்படி வேலை செய்து கொண்டிருக்கிறது என பார்க்க வேண்டும்.பங்கு சந்தையில் என்ன விலை விற்கிறது என பார்க்க வேண்டியதில்லை. உதாரணமாக இந்துஸ்தான் லீவரின் பங்குகளை வாங்கினால் நாம் அடுத்து பார்க்கவேண்டியது அந்த கம்பனியின் வருடாந்திர லாப,நஷ்டம் செயல்பாடு எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தான்.அந்த கம்பனியின் பங்குகள் சந்தையில் என்ன விலை விற்கிறது என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டாம் என்கிறார் பப்பட். நம் முதலீட்டை எப்படி கண்காணிப்பது? 100 ரூபாய் ஒரு கம்பனியில் போடுகிறோம்.வங்கியில் போட்டால் நமக்கு 10% வருடத்துக்கு வட்டி வந்திருக்கும் என்று வைத்துக்கொள்வோம்.ஆக அடுத்த வருடம் நாம் போட்ட முதலீடின் மதிப்பு 110 ரூபாயாக இருக்கும். பங்கு சந்தையிலும் இதே கதைதான். நாம் உண்மை விலை என்பதை பற்றி பார்த்தோம்.அந்த உண்மை விலை வருடா வருடம் உயர வேண்டும்.நாம் போட்ட முதலீட்டை விட உண்மை விலை வருடா வருடம் அதிகரிக்க வேண்டும்.அது நடந்து கொண்டே இருந்தால் நாம் வேறெதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் பப்பட்.பங்கு சந்தையில் பங்கு என்ன விலைக்கு விற்கிறது என்பதைப்பற்றி கவலைபட வேண்டியதில்லை. ஒரு உதாரணம் பார்ப்போம். X கம்பனியின் தற்போதைய 10 ரூபாய்.15% நாம் எதிர்பார்க்கும் ரிடர்ன்.ஆக உண்மை விலை 66.67 ரூபாய். வருடா வருடம் கம்பனியின் ஈ.பி.எஸ் அதிகரிக்க வேண்டும்.அப்போது தான் உண்மை விலையும் அதிகரிக்கும். 2000வது வருடம் நாம் 66.67 உண்மை விலையுள்ள ஒரு கம்பனியின் பங்கை 40 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள்.40 ரூபாயை பங்கில் போடாமல் வங்கியில் போட்டிருந்தால் நமக்கு கிடைப்பது 10%.2001ல் 10% வட்டியில் அந்த முதலீட்டின் தற்போதைய மதிப்பு 40*1.1 = 44. 2001 வருட உண்மை விலை இந்த 44 ரூபாயை விட அதிகமாக இருந்தால் நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.வருடா வருடம் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் நாம் எதைப்பற்றியும் கவலைபட வேண்டியதில்லை என்கிறார் பப்பட். உதாரணம் பார்ப்போம் year eps intrinsic value investment market price 2000 10 66.67 40 34 2001 11.5 76.67 44 24 2002 13.22 88.16 48.4 35 2003 15.20 101.39 53.24 45 2004 17.49 116.60 58.564 160 2005 20.11 134 64.42 145 2006 23.13 154.20 70.86 82 ஆக மேற்கண்ட உதாரணத்தில் உண்மை விலை நாம் போட்ட முதலீட்டை விட வருடா வருடம் அதிகமாக இருக்கும்போது நாம் சந்தை விலையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சந்தை விலை உண்மை விலையை விட மிக குறைவாக சில சமயங்களில் இருக்கும்.( eG 2001, 2002, 2003 )உண்மை விலையை விட மிக அதிகமாக சில சமயங்களில் இருக்கும்.( eG:2004,2005 ) குறைவாக இருக்கும் வருடங்களில் நாம் செய்திருக்க வேண்டியது இன்னும் அதிக பங்குகளை வாங்குவதுதான். அதிகமக இருக்கும் வருடங்களில் செய்ய வேண்டியது? சும்மா இருப்பதுதான். (தொடரும்)

பப்பட்டின் வெற்றி வழி - 6

உண்மை விலையை கண்டறிய பப்பட் ஒரு எளிய கணித சூத்திரம் வைத்திருக்கிறார்.நாம் முன்பு பார்த்தபடி நாம் நம் பங்கு முதலீட்டுக்கு 15% முதல் 20% வரை ரிடர்ன் எதிர்பார்க்கலாம் என எழுதியிருந்தேன்.உதாரணத்துக்கு 15% என்று வைத்துகொள்வோம்.நமக்கு இதோடு EPS என்ற இன்னொரு விவரமும் தேவைப்படும்.ஒவ்வொரு கம்பனியும் தமது வருடாந்திர EPS (earning per share) எவ்வளவு என்பதை வெளியிடும். உண்மை விலையை கண்டறிவதற்கான சூத்திரம் intrinsic price = eps /expected return In our example expected return = 15% i.e 0.15 இப்போது சில கம்பனிகளை எடுத்துக்கொண்டு அவற்றின் பங்குகளின் உண்மையான விலையை பார்க்கலாம். ரிலயன்ஸ் eps = 54.34 expected return = 0.15 intrinsic price = eps/expected return = 54.34/0.15 = 362 உண்மை விலை = 362 இன்றைய சந்தை விலை = 653 பரிந்துரை = over priced.wait 362 மேல் ரிலயன்ஸ் கம்பனியின் பங்குகளை பப்பட்டின் முறையில் வாங்கக்கூடாது. இதே முறையில் மற்ற கம்பனிகளின் உண்மை விலையை கணக்கிட்டு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருந்தால் வாங்க வேண்டும். (நீங்கள் இப்போது இந்த சூத்திரத்தை பயன்படுத்தி பார்த்தால் இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் over priced என்பது தெரியவரும்.ஏனேனில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய பங்கு சந்தை முன்னேற்றம் கண்டுள்ளது.இது விற்பதற்கு அருமையான சமயம்.வாங்குவதற்கு அல்ல) இந்த சூத்திரத்தின் அடிப்படையை எழுதினால் அது ரெண்டு மூணு பதிவு வரை போகும்.அதனால் அதை எழுதவில்லை. பங்கை பப்பட்டின் சூத்திரத்தை பயன்படுத்தி வாங்கிவிட்டோம்.அடுத்து செய்ய வேண்டியது என்ன?

வாரன் பப்பட்டின் வெற்றி வழி - 5

பப்பட் முதலீடு செய்வது டெக்னாலஜி தேவையில்லாத சாதாரண மனிதனும் அறிந்து கொள்ளக்கூடிய துறைகள் தான். வங்கி(வெல்ல்ஸ் பார்கோ),உணவு,இன்சூரன்ஸ்,குளிர்பானம்(கோக்),சவர கம்பனி(ஜில்லெட்), கிரெடிட் கார்ட்(அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்) போன்ற டெக்னாலஜி அற்ற துறைகளில் தான் பப்பட் முதலீடு செய்வார். பப்பட் வாங்கிய கம்பனிகள் அனைத்தும் நேர்மைக்கு பேர் போனவை.மிகபுகழ் பெற்ற பிராண்டுகளை கொண்டவை.இவை இருக்கும் துறைகள் உலகம் அழியும் வரை தொடர்ந்து இருக்கும்.என்ன டெக்னாலஜி வந்தாலும் இவற்றை ஒன்றும் செய்ய முடியாது.இப்படிப்பட்ட துறைகளில் தான் பப்பட் முதலீடு செய்வார். இந்த கம்பனிகள் அனைத்துக்கும் வருடா வருடம் அவை அடையும் லாபம் எவ்வளவு என்பதை நாம் எளிதில் கணக்கிட இயலும்.இந்த கம்பனிகள் expected earnings என்று forecast ஒன்றை வருட ஆரம்பத்திலேயே கொடுத்துவிடும்.அனைத்து கம்பனிகளும் அப்படி தரும் என்றாலும் டெக்னாலஜி போன்ற துறைகளில் எதிர்பாரா நிகழ்வுகள் லாபத்தை குறைக்கும்.அந்த வாய்ப்பு இந்த துறைகளில் மிகவும் குறைவு. expected cashflow, predicted EPS(earnings per share) என்பதை பப்பட் முக்கியமாக கருதுவார். பப்பட் commodity என்று சொல்லப்படும் துறைகளை சந்தேகத்தோடு தான் நோக்குவார்.ஆனால் அந்த துறைகளிலும் அவர் சில சமயம் முதலீடு செய்வது உண்டு. ஆக பப்பட்டின் முறைகளை பின்பற்ற விரும்புவோர் எந்த துறை பங்குகளை வாங்கலாம்? 1.FMCG (fast moving consumer goods) 2.Finance (banks, insurance,NBFC's like ICICI idbi) 3.Branded food 4.retail and wholesale companies 5.Infrastructure companies(container corporation,transport firms etc) எதை தவிர்க்க வேண்டும்? 1.New companies in any industry 2.Technology companies 3.TV and other media companies 4.Textiles 5.IPO's (Never subscribe to any IPO of a new firm) சரி-எந்த துறை பங்குகள் வாங்கலாம் என்று முடிவு செய்தாகிவிட்டது.எந்த கம்பனிகள் என்பதற்கும் ஒரு தராதரம் பார்க்கும் முறையை பப்பட் தந்திருக்கிறார்(நேர்மையான,நீண்டகாலமாக தொழில் இருக்கும் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கும் கம்பனிகள்).இனி என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா? இனி தான் இருக்கிறது சில எளிய பைனான்ஸ் சூத்திரங்கள். அம்மாதிரி கம்பனிகளின் தற்போதைய பங்கு விலை(market price) என்ன?அவற்றின் உண்மையான பங்கு விலை(Intrinsic price) என்ன என்பதை கணக்கிட வேண்டும்.உண்மை விலை சந்தை விலையை விட அதிகமாக இருந்தால் பங்குகளை வாங்க வேண்டும். Intrinsic price > market price = buy (indicates share is under valued) intrinsic price < market price = dont buy (indicates share is over valued) that is market price < Intrinsic price = buy market price > Intrinsic price = dont buy உண்மை விலை என்பதை எப்படி கணக்கிடுவது?ஒரு எளிய சூத்திரம் மூலம்.